இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
202
கொண்டு; கரும் கடல் தலை வீழ்ந்தனர் – கரிய கடலிலே போய் விழுந்தார்கள்.
***
இவ்வாறு இலங்கையைத் தீக்கிரையாக்கிய பின் அநுமனுக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. “சீதாபிராட்டிக்கு என்ன நேர்ந்ததோ” என்று எண்ணினான். சீதையிருந்த அசோக வனம் நண்ணினான். சீதை எவ்விதத் துன்பமும் இல்லாதிருப்பது கண்டான். வணங்கினான். பிறகு அங்கிருந்து மகேந்திர மலைக்குத் தாவினான்.
அநுமனின் வரவை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த அங்கதன் முதலானோர் அநுமனைக் கண்டு மகிழ்ந்தனர். கூடினர்; குதித்தனர். சீதையை அநுமன் கண்டு வந்த செய்தி அறிந்தனர். பின் எல்லாரும் கிட்கிந்தை நோக்கிப் புறப்பட்டனர்.
அநுமன் முன்னே விரைந்து சென்றான். இராமனைக் கண்டான். தெற்கு நோக்கித் தரையில் வீழ்ந்து வணங்கி நின்றான்.
குறிப்பினால் செய்தி அறியும் இராமன் உணர்ந்து கொண்டான், பின்னே அநுமன் சொல்கிறான்.
***