பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


பேசத் தொடங்கினான் :

“எனது முன்னவனாகிய வாலி தனது வலிய கைகளை ஓங்கிக்கொண்டு என்னைத் துரத்தினான்; பின்னவனாகிய என்னைக் கொல்வான் வேண்டி விரட்டினான். இவ்வுலகு முழுவதும் துரத்தித் துரத்தி விரட்டினான். உயிருக்கு அஞ்சினேன்; ஓடினேன்; எங்கும் ஓடினேன். இந்த மலை ஒன்றே பாதுகாப்பான இடம் என்று கண்டேன்; ஓடி வந்தேன்; அவன் விரட்டுதல் விட்டான். உயிர் பிழைத்தேன்; சரணம் நீயே. எனைக் காத்தல் நின் தருமம்!” என்றான்.

***

துந்துபி என்றவனுடன் போர் செய்தான் வாலி. அவனைக் கொன்றான். அவனது உடலைத் தூக்கி எறிந்தான் மதங்க முனிவர் தவம்செய்து கொண்டிருந்த மலையில் வந்து விழுந்தது அந்த உடல். அவர் இருந்த இடத்தை அசுத்தம் செய்தது. முனிவர் சீறினார்.

“இதைச் செய்தவன் இம் மலைக்கு வந்தால் அவன் தலை வெடித்துச் சாவான்” என்று சபித்தார்.

பயந்தான் வாலி. மதங்கர் மலைக்கு வருவது ஒழிந்தான். அதுவே சுக்கிரீவனுக்கு அரண் ஆயிற்று.


***

முன்னவன் - எனது மூத்தோனாகிய வாலி; பின் வந்தேனை - இளையவனாகிய என்னை; முரண் உடை - வலிமை பொருந்திய தடம் கை - பெரும் கைகளை; ஒச்சி - ஓங்கி; இருள் நிலை-நிலையாக இருள் தங்கியுள்ள: புறத்தின் காணும் - இவ் அண்டத்தின் அப்பால் வரை உலகு எங்கும் - இவ்வுலகு எங்கும்; தொடர - துரத்த; இக் குன்று - இந்த மலையானது; அரண் உடைத்தாக - பாதுகாப்பாக இருந்ததால், உய்ந்தேன் - உயிர் பிழைத்தேன். எனவே உனைச் சரண்புகுந்தேன், எனைத் தாங்குதல் உன் தருமம் என்றான்.


***