பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

273


கிழக்கு வாயிலிலும் கடும்போர் நிகழ்ந்தது. அரக்கர் சேனை சிதறியோடியது. ஓடும்போது வானர படையைக் குலைத்தது. எனினும் இடும்பன் என்ற கரடித் தலைவன் அரக்கப் படைத் தலைவனைப் பற்றி, உயிரிழக்கச் செய்தான். தலைவன் இறந்ததைக் கண்ட அரக்கன் பிரகஸ்தன் வானரப் படையைக் கோபமாகத் தாக்கினான். ஆனால் இறுதியில் வானரப் படைத் தலைவன் நீலன் அவனைத் தன் வாலால் கட்டினான்; சுழற்றினான்; வீழ்த்தினான்.

தெற்கு வாயிலில் அங்கதன் அரக்கரை ஓட ஓட விரட்டினான்.

மேற்கு வாயிலிலோ, அனுமன் அரக்கர் படைத் தலைவனை வீழ்த்தி, அரக்கர் படைகளைச் சின்னாபின்னம் ஆக்கினான்.

எல்லா திசைகளிலும் அரக்கர் படை தோல்வியைக் கவ்விய விவரம் இலங்கேசனுக்கு எட்டியது. இராவணன் போர்க் கோலம் பூண்டான். இராமனும் அவனைப் போரில் எதிர்க்கொள்ள வந்தான். அனுமனும், லட்சுமணனும் இராவணனுடன் பொருதனர்.போரிலே லட்சுமணன் சளைத்தான். அனுமன் இராவணனுடன் மற்போர் செய்தான்; அச்சமயம் லட்சுமணன் மீண்டும் பங்கு கொள்ள வந்தான். இராவணன் பிரம்மாத்திரத்தை எய்தான். லட்சுமணன் மூர்ச்சை அடைந்தான். அவனைத் தூக்கிச் செல்ல இராவணன் முயன்றபோது, மாருதி குறுக்கிட்டு லட்சுமனனை தூக்கிச் சென்று இராமபிரானிடம் சேர்ப்பித்தான்.

“என் தோளில் ஏறி, இராவணனோடு போர் புரியுங்கள்” என்று வேண்டினான்; வற்புறுத்தினான். இராகவனும் இசைந்தான். கடும்போர் நடந்தது.

கி,—18