பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23



எந்தக் கட்சியிலும் சாராது சம நோக்குடன் சீர்தூக்கிப் பார்ப்பவருக்கு இது பெருமை தரும் ஒன்றோ? இதிலே அவர் அடையும் நன்மை யாதோ? தருமம் தன்னைத்தானே அழித்துக் கொள்ளுமோ?

***


இருமையும் - இருவர் பக்கமும்; நோக்குறும் - ஆராய்ந்து பார்க்கும்; இயல்பினாற்கு-குணமுடைய அந்த இராமனுக்கு: இது பெருமையோ - நீ கூறிய செயல் பெருமை தரும் ஒன்றோ? இங்கு இதில் பெறவது - இங்கு வந்து சிநேகம் செய்வதில் அவன் பெறும் நன்மை: என் கொலோ - என்ன? அருமையின் நின்று - அரிய பொருளாக நின்று; உயிர் அளிக்கும் -உயிர்களைக் காக்கும்; ஆறுடை- கொள்கையுடைய; தருமமே - தருமம் தானே; தன்னைத்தான் தவிர்க்குமோ?-தன்னையே அழித்துக் கொள்ளுமோ? என்றான் வாலி தாரையிடம்.

***


ஏற்ற பேர் உலகெலாம்
        எய்தி ஈன்றவன்
மாற்றவள் ஏவ மற்று
        அவள் தன் மைந்தனுக்கு
ஆற்று அரும் உவகையால்
       அளித்த ஐயனைப்
போற்றலை இன்னை
       புகலல் பாலையோ?

உலகம் முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆண்ட தசரத சக்கரவர்த்தி அந்த அரசினைத் தனக்கு கொடுக்க, தான் பெற்ற அவ்வரசினைத் தன் மாற்றாந் தாயாகிய கைகேயி தன் கட்டளைப்படி அவளது மகன் பரதனுக்கு மகிழ்ந்து கொடுத்த இராமனைப் பாராட்டினாயல்லை. இத்தகைய பழிச் சொற்கள் கூறலாமோ?

***