பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334

கார் நின்ற மழை நின்றும் உரும் உதிர்வ
      என, திணி தோட் காட்டின் நின்றும்,
தார் நின்ற மலை நின்றும், பணிக் குலமும்
      மணிக்குலமும் தகர்ந்து சிந்த,
போர் நின்ற விழி நின்றும்பொறி நின்று
      புகையோடும் குருதி பொங்கத்
தேர் நின்று நெடு நிலத்துச் சிரமுகம் கீழ்ப்
      பட விழுந்தான், சிகரம் போல்வான்.

போரில் நிலைத்து நின்ற அரக்கருக்குச் சிகரமாக விளங்கிய இராவணன், கருநிற மேகத்தினின்று இடி உதிர்வது போல உதிர்ந்தான். தோள் பகுதியிலிருந்த ஆபரணங்களும் இரத்தினங்களும், மாலை அணிந்த மார்பிலே இருந்த ஆபரணங்களும் உடைந்து சிந்தின. குருதி புகையுடனே பொங்கியது. அத்தகைய பெரியவனான இராவணன் தேரினின்று தலைகீழாக விழுந்தான்.

***

சிகரம் போல்வான் - அரக்கர்க்குச் சிகரம் போன்றவன் ஆன இராவணன்; கார் நின்ற - கருமை அமைந்த; மழை நின்றும் - மேகத்திலிருந்து; உரும் உதிர்வ என - இடி உகுவது போன்று; திணி - வலிய; தோள் காட்டின் நின்றும் - தோள் தொகுதியினின்றும்; தார் நின்ற மாலை அணியப்பட்ட; மலை நின்றும் - மலை போன்ற மார்பினின்றும்; பணி குலமும் மணி குலமும் - நூதனத் தொகுதிகளும் ஆபரணத் தொகுதிகளும்; தகர்ந்து சிந்த - உடைந்து சிதறவும்; போர் நின்ற - போரில் நின்ற; விழி நின்றும் - விழியிலிருந்து: பொறி நின்று; தீப்பொறி வெளிப்பட்டு நின்று; புகையோடும் குருதி பொங்க - புகையுடனே உதிரம் பொங்கவும்; தேர் நின்று - தேரிலிருந்து; நெடு நிலத்து - அகன்ற பூமியிட்த்து; சிரம் முகம் கீழ்பட விழுந்தான் - தலையுடன் கூடிய முகம் கீழ்ப்பட (குப்புற) விழுந்தான்.