பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

343


கேட்டாள் அன்னை; தலை குனிந்தாள் அவள் கண்கள் இரத்தம் சிந்தின. தன்னை மறந்தாள்; அறிவிழந்தாள்; பெருமூச்செறிந்தாள்.

மண்ணினை நோக்கிய - (நாணத்தால்) பூமியை நோக்கித் (தலை கவிழ்ந்து) நின்ற; மலரின் வைகுவாள் - செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளின் அவதாரமாகிய பிராட்டி; (இச் சொற்களைக் கேட்டு) புண்ணினை கோல் உறுத்து அனைய - புண்ணினைக் கோல் கொண்டு குத்தினாற் போன்ற; பொம்மலாள் - வருத்தத்துடன் கூடியவளாய்; கண்ணினை - (தனது) இரண்டு விழிகளினின்றும்; உதிரமும் புனலும் - இரத்தமும் கண்ணீரும்; கான்று உக - மிகுதியாகச் சிந்த; உள் நினைப்பு ஓவி நின்று உயிர்ப்பு வீங்கினாள் - உள்ளத்தில் அறிவிழந்தவளாய், பெருமூச்செறிந்தாள்.

தன்னை நொந்துக் கொண்டாள். இவ்வளவு வேதனைக்குப் பின்னும் மீண்டும் துயரமா? என மலைத்தாள். மாருதியை நோக்கினாள். இராமனையும் பார்த்தாள். அநுமனைக் கேட்டால் நானிருந்த தவநிலையைச் சொல்வான். ஒருவேளை அவன் இராமனிடம் தன்னுடைய அவசர நிலையைக் கூறவில்லையோ? ஆனால் அநுமன் யார்? மெய்மையான் அன்றோ. தவறு செய்வானோ? அபாண்டமாகத் தன்னை - தவம் மேற்கொண்டு இருந்த தன்னை தூற்றி, பழிகளை சுமத்தியது ராஜோ குணமல்லவா? இராமனோ சத்துவ குணமுள்ளவன் ஆயிற்றே! இத்தகைய தவற்றை செய்யலாமோ?