பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78



குளிர்ந்த கடலால் சூழப்பெற்ற; இலங்கை பாய்வன என்ன - இலங்கையை நோக்கிப் பாய்ந்து செல்வன என்று சொல்லும் படி; வானம் பழுவம் மான - வானமே ஒரு சோலை போல் விளங்க; படர்ந்தன - சென்றன.

முன்பு மலைகள் யாவும் சிறகு பெற்றிருந்தன. எங்கும் பறந்து சென்று அழித்து வந்தன. இது கண்டு கோபம் கொண்டான் இந்திரன். தனது வச்சிராயுதத்தினால் அவற்றின் சிறகுகளை வெட்டி எறிந்தான். பின்னர் அவை பறத்தல் ஒழிந்தன.

மைந்நாகம் எனும் மலையானது இந்திரனுக்கு அஞ்சிக் கடலில் புகுந்து ஒளிந்து கொண்டது.

அநுமன் வரவு கண்டு மேலே வந்தது. அது எப்படி இருந்ததாம்? பாற்கடலிலிருந்து ஐராவதம் என்ற யானை தோன்றியது போல் இருந்ததாம்.

மேலே வந்த மைந்நாகம் அநுமனை வரவேற்றது. சிறிது தங்கி இளைப்பாறிச் செல்லுமாறு வேண்டியது.

அநுமன் இசைந்தான் அல்லன். "இராம காரியமாக செல்கிறேன். இப்போது இளைப்புப் பற்றி சிந்திக்கவே நேரமில்லை. திரும்பி வரும்போது உன் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்" என்றான்.

“சரி” என்று சொல்லி வழி விட்டது மைந்தாகம்.

இது, முதல் இடையூறு. இனி இரண்டாவது இடையூறு வருமாறு :

சுரசை என்பவள் தக்ஷனின் மகள்; காசியபரின் மனைவி. அவள் ஓர் அரக்கி உருக்கொண்டு அநுமனை விழுங்க வந்தாள்.

அநுமன் தனது உருவினைச் சிறிதாக்கிக் கொண்டு கண்ணிமைப் போதிலே அவள் வாய் வழிப் புகுந்து மீண்டான்.