பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

கம்பன் சுயசரிதம்

வந்த Lapiz lazuli என்ற பல வர்ண விஸ்தாரம் உடைய கல்லின் விலை மட்டும் ஒரு சதுர கஜத்திற்கு ஆயிரத்து நூற்றி ஐம்பத்தாறு ரூபாய் என்றால் கேட்கவா வேண்டும்.

கட்டிடம் கட்டி முடிய இருபத்திரண்டு வருஷம் ஆகியிருக்கிறது. கட்டிடம் கட்ட மொத்தச் செலவு (மூர்ச்சை போட்டு விழுந்து விடாதீர்கள் ஐயா) எல்லாம் மூன்றரைக் கோடி ரூபாய் மட்டுந்தான். இப்படி ஒரு கட்டிடம் நமது நாட்டில் இருக்கிறதென்றால் அது நமக்குப் பெருமை தானே. பெருமை, இத்தனை பணத்தையும் இத்தனை நாளையும் செலவழித்துக் கட்டியதனால் அல்ல. இவ்வளவு அருமையான சலவைக்கல் கனவை (Dream in marble) நனவாக்கி வைத்துவிட்டானே, சிருஷ்டித்து விட்டானே இந்த ஷாஜஹான் சக்கரவர்த்தி என்பதில்தான். தன் காதலியின் ஒரு நினைவு மலராக ஏன் உலகம் உள்ளளவும், உயர்ந்த, உத்தம, லக்ஷ்ய, காதலின் சின்னமாக அல்லவா அம்மாளிகை தலை தூக்கி நிற்கிறது. வல்லவனாக்கிய சித்திரம்தான் அது. வண்மைக் கவிஞன் கனவும் அதுவேதான் என்று அதிசயித்து விடுகிறார்கள். பார்த்தவர்கள் பரவசமே அடைந்துவிடுகிறார்கள் என்று சொன்னாலும் அது பொய்யில்லையே.

இதே உணர்ச்சிதான் கம்பனது காவியமாகிய இராமாயணத்தைப் பார்க்கின்றபோது ரசிகருக்கும் உண்டாகின்றது. கம்பன் தனது காவிய மாளிகையை எவ்வளவு ரசனைச் சுவையுடனும் அழகுணர்ச்சியுடனும் கட்டி முடித்திருக்கிறான். இப்படி ஒரு மாளிகையை அற்புதமாக சிருஷ்டிக்க அவன் என்ன பொருள்களை எங்கிருந்தெல்லாம் சேகரித்தான். இல்லை ஒரு பெரிய மாய வித்தைக்காரனைப் போல இப்போது இங்கே ஒரு அலங்கார மாளிகை தோன்றட்டும் என்று சொல்லிக் கண்மூடிக் கண் திறப்பதற்குள்ளே செய்து விட்டானா? இல்லை இவனென்ன தெய்வ தச்சனா? தெய்வீக அழகுடைய கட்டிடங்களையெல்லாம் கணப்பொழுதில் கட்டி