பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

21


கம்பன் – என்ன அவ்வளவு எளிதாக முடிவுகட்டிவிட்டாய். என் காலத்தில் சோழ மன்னர்கள் தலை எடுக்க ஆரம்பித்து இருந்தார்களே ஒழிய மகோன்னத நிலையை அடைந்து விடவில்லை. அடைந்திருந்தால் அந்தச் சோழ மன்னர்களைப் பற்றியெல்லாம் விரிவாகக் கூறியிருக்கமாட்டேனா? என் காலத்தில் நான் அறிந்த சோழ மன்னர்கள் எல்லாம் விஜயாலயனும், ஆதித்தனும்தான். ஆதித்தன் குலமுதல்வன் மநுவினை யார் அறியாதார்? என்றுதானே ராமனது குலமுறையையே கிளத்தத் துவங்கியிருக்கிறேன். .

நான் – அப்போ ராஜராஜன் கட்டிய பெரிய கோயிலைத் தாங்கள் அறியீர்கள் அப்படித்தானே.

கம்பன் – ராஜராஜனா? அவன் யார்? ஓ! அந்தத் தஞ்சையில் நிமிர்ந்து நிற்கிறதே பெரிய கோயில் அதைச் சொல்கிறாயா? ஆம் தம்பி அது என் காலத்தில் கட்டப்படவில்லை. கட்டப்பட்டிருந்தால் அதைப்பற்றி ஒரு வார்த்தைக்கூடச் சொல்லாது செல்ல எனக்கு மனம் வந்திருக்குமா என்று நீயே சொல்லு,

நான் – மனம் வந்திருக்காது தான். என்றாலும் ஒரே ஒரு இடத்தில் அகல்வானம் தீண்ட நிமிர்ந்த பெரும் கோயில் என்று குறிப்பிடுகிறீர்களே அது எதைக் குறித்தோ?

கம்பன் – அதுவா? நான் வாழ்ந்த காலத்தில் கோயில்கள் தோன்றின என்றாலும் அவை எல்லாம் சின்னஞ்சிறு கோயில்களாகத்தான் இருந்தன. எல்லாம் வல்ல கோமகனுக்கு ஏற்ற இல்லங்களாக அவை இருக்கவில்லை. ஆதலால் நான் ஒரு லக்ஷியக் கனவு கண்டேன். நீண்டு நிமிர்ந்த பெரும் கோயில்கள், விமானங்கள், கோபுரங்கள் எல்லாம் உருவாக வேண்டும் என்று. என் கனவெல்லாம் நனவாகியிருக்கிறது பின்னால், அதனால்தான் இத்தனை கோயில்கள் இந்தத் தமிழ்நாட்டில்.