பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

வேற்றரசனுடைய அனுமதி பெற்றுக்கொண்டு சோழ நாடு வந்துசேர்ந்தான். உள்ளூற இல்லாமற் போனாலும் மேலுக்காகிலும் கம்பனுக்கும் சோழனுக்கும் சமாதானம் ஏற்பட்டது. கம்பன் பழையபடி அரண்மனைக்குச் செல்லுவதும் சோழன் கம்பனுக்கு முன்போலவே மரியாதைகள் செய்வதும் சிலகாலத்துக்கு நடந்து வந்தது. ஆனால் சோழன் மாத்திரம் மனஸ்தாபத்தை மறக்கவில்லை. ஒரு கர்ண பரம்பரையை நம்புவதாக இருந்தால், சோழன் கம்பன்பேரில் கரு வைத்துக் கொண்டே வந்து ஒருநாள் அவன் அரண்மனைக்கு வரும் நேரம் பார்த்து அவனுக்கு எதிரே ஒரு புலியை அவிழ்த்துவிடும்படிக் கட்டளையிட்டானாம். ஆனால் புலியை நோக்கிக் கம்பன் ஒரு கவிபாட, புலி அஞ்சி அடங்கிவிட்டதாம். அது கண்டு சோழன் கோபமூண்டு தன் கையிலிருந்த வில்லில் ஒரு அம்பைக் கோத்து கம்பனுடைய மார்பில் தைக்கும்படி விட்டுக் கம்பனைக் கொன்றுவிட்டானாம்.

கம்பனுடைய சரித்திரத்தைச் சுற்றி வளர்ந்திருக்கிற கதைகளை எண்ணித் தொலையாது. அவைகளையெல்லாம் இங்கே எடுத்துச் சொல்லுவதில் பயனில்லை. ஆனால் கம்பன் காலத்தை நிர்ணயம் செய்வதற்கு அவனைப்பற்றி வந்திருக்கிற கர்ண பரம்பரைகளைச் சற்று ஆழமாக நோக்குவது அவசியமாகும்.

கர்ண பரம்பரையாக வருகிற விஷயங்களை விசாரியாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளுவது சரியன்று. ஆனால் கர்ணபரம்பரையாக வருகிற காரணம் பற்றியே அவ்விஷயங்களைத் தவறென்று கொள்ளுவதும் பிழையாகும். ஐதீகம் ஒருவாறிருக்கும்போது பண்டிதர் அதை உண்மை யெனவே நினைத்துக்கொண்டு அதற்குச் சரித்திர ரீதியான ஆதாரங்கள் தேடவேண்டும். அப்படித் தேடிக்கொண்டு வருகையில் ஐதீகத்தைப் பொய்ப்படுத்தக்கூடிய சாக்ஷியங்கள் தென்பட்டால், அச்சாக்ஷியங்களைப் பலதடவை சோதித்தும், ஐதீகத்-