பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

தோடு பொருத்தியும் பார்த்து, அவை நிச்சந்தேகமானவையாயும் ஐதீகத்தோடு முற்றிலும் முரணுபவையாயும் இருந்தால் மாத்திரம் ஐதீகத்தைத் தவறு என்று கொள்ளவேண்டும். புதிதாகக் கண்டுபிடித்திருக்கும் ஆதாரங்களின் விஷயத்தில் கொஞ்சம் சந்தேகமிருந்தாலும் சரி, ஐதீகத்தினுள்ளேயே அந்தர்கதமான அசாத்தியதை இல்லாத வரையில் ஐதீகத்தைத் தான் ஒப்புக்கொள்ள வேண்டியது.

ஆனால் கர்ணபரம்பரைகள் ஒரே குணத்தவையாக இருப்பதில்லை. ஒன்றுக்கொன்று பொருந்தாத பல சங்கதிகள் ஒரே கர்ணபரம்பரையில் ஒரே சரித்திரமாகச் சொல்லப்படுவதை நாம் பார்க்கிறோம். இந்தச் சந்தர்ப்பங்களில் உண்மையைக் கட்டுக்கதையினின்றும் பிரித்தெடுத்தல் கடினமாகத்தானிருக்கும். ஆனால் இதைப் பார்த்துவிட்டு ஒரு ஐதீகத்தில் சொல்லப்படுகிற சகல விஷயங்களையும் சகட்டுக்கு ஒரே ரீதியாகத் தவறென்றே கொண்டுவிடுவது சரியாகாது. ஐதீகத்தில் சொல்லப்பட்டு வருகிற எந்த எந்த விஷயங்கள் உண்மையாக இருக்கவேண்டியது, எந்த எந்த விஷயங்கள் கதையாகச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும், என்று ஆராய்ந்து உண்மைகளைத் தனியாகப் பிரித்தெடுத்து அவைகளை மாத்திரம் ஸ்தாபித்து, மற்றவைகளை வெறும் கதைகளென்று நிரூபித்துக் காட்டி உலகத்தில் உண்மை பரவும்படி செய்யவேண்டியது தான் பண்டிதர்களின் கடமையாகும்.

இப்பொழுது நாம் கூறி முடித்த விசாரணைவழியை அனுசரித்துக் கம்பனுடைய காலத்தை நிர்ணயம் செய்ய முயலலாம்.

எண்ணிய சகாத்தம் எண்ணூற்றேழின் மேல், சடையன் வாழ்வு
நண்ணிய வெண்ணெய்நல்லூர் தன்னிலே கம்ப நாடன்
பண்ணிய இராமகாதை, பங்குனி அந்த நாளில்,
கண்ணிய அரங்கர் முன்னே கவி அரங்கு ஏற்றினானே.