பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

ஆகவே, மற்றக் கவிகளைப் படத்திலும், அரண்மனை மண்டபச் சுவர்களிலும் சித்திரம் எழுதுபவர்களாய்ப் பாவித்தால், கம்பனை வானமாகிற முகட்டையே தன் ஓவியத் தொழிலுக்கு இடமாகக் கொண்டு ஆஜானுபாகுவான சித்திரங்களை வரைகிறவனாகக் கொள்ள வேண்டும். ஆனால் இவ்வளவு பெரிய ஆகிருதியுள்ளவையாக இருந்தாலும் அவனுடைய நாயகர் நாயகிகளின் உருவங்கள், அவரவர்கள் குணங்களுக்கேற்ப, மாசு, மறு, கோணல் முதலிய குற்றங்களின்றிச் சமாங்கமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. கம்பனுடைய ராமாயணமானது, பல்லவச் சிற்பிகளின் பெரிய வீச்சையும், சாளுக்கியச் சிற்பிகளின் சிற்றுளி வேலையையும், மொகலாயர் காலத்துச் சின்னஞ்சிறு சித்திரம் வரைபவர்களின் கை நயத்தையும் ஒருங்கே ஞாபகத்துக்குக் கொண்டு வரக்கூடியதாக இருக்கிறது. நினைத்துப் பார்த்தால் வேறு ஒரு கவியினிடத்திலும் இத்தனை வேறுபட்ட அருங்குணங்கள் இந்த அளவுக்கு அகப்படாது என்று தோன்றுகிறது.

கம்பனே சீதையை வர்ணிக்கிற,

உழை குலாம் நயனத்தார் மாட்டு ஒன்றொன்றே
விரும்பற்கு ஒத்தது,
அழகு எலாம் ஒருங்கே கண்டால் யாவரோ
ஆற்ற வல்லார் ? (448)

என்ற வர்ணனை கம்பனுடைய காவியத்துக்கே பெரிதும் பொருந்துகிறது.