பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

இன்னும் இவர், சுன்னாகம் குமார சாமி புல்வரைக் கொண்டு, யாழ்ப் பாணத்தில் உள்ள கீரிமலைச் சிவன் மேல் ‘நகுலேசர் ஊஞ்சல்’ என்னும் நூல் இயற்றச்செய்து தம் கைப்பொருள் உதவியால் வெளியிடுவித்தார். அச்சிவன்கோவிலில் ஆண்டு தோறும் விழா நடைபெற்று வர நிலையான நிதியும் எழுதிவைத்துள்ளார்.

தாமோதரனாரின் மற்றொகு தமிழ்த் தொண்டும் ஈண்டு குறிப்பிடத் தக்கது. இவர் யாழ்ப்பாணத்திலே ‘ஏழாலை’ என்னும் இடத்தில் ஒரு தமிழ்ப் பள்ளி நிறுவினார். அதில் குமாரசாமி புலவர், முருகேசப் பண்டிதர் ஆகியோரை ஆசிரியர்களாய் அமர்த்திப் பலர்க்கும் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்பிக்கச் செய்து தமிழ்க் கல்வி முறையைப் பரப்பினார். அன்று இது மிகப் பெரிய தமிழ்த் தொண்டாகும்.

தாமோதரனார் பரந்த பண்பும் நண்பும் கொண்டு பழகுவதற்கு இனியவராகவும் திகழ்ந்தார். இவர்பால் தமிழால் நட்புப் பிணிப்புண்டு பழகி வந்த பெரியார்கள் மிகப் பலர். அவர்களுள் மிகவும் குறிப்பிடத் தக்கவர்கள், திருவாவடுதுறை ஆதீனத்துத் தலைவர் சுப்பிரமணிய தேசிக அடிகளார், பூண்டி-அரங்கநாத முதலியார், உ.வே. சாமிநாத ஐயர், வேதநாயகம்பிள்ளை, சுன்னாகம் முத்துக் குமாரக் கவிராயர், பீதாம்பரப் புலவர், சேனாதிராயர், சுன்னாகம் அ. குமாரசாமி புலவர் முதலியோராவர். பிள்ளையவர்கள், புலவர் பெருமக்களுடன் கலந்து உறவாடி-உரையாடி அளவளாவி,

"உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்’

என்னும் குறளுக்குச் சிறந்த இலக்கியமாகத் திகழ்ந்தார். இவரது சிறப்பிற்கு இன்னும் சான்றுகள் வேண்டுமா!