பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
48



யரையும் அந்நாட்டு மகளிர் பலரையும் கைப்பற்றிச்சிறை செய்ததோடு அமையாது, அந்நகரைச் சுற்றியிருந்த அரணையும், மதிலையும் அழித்துவிட்டு, அந்நகர்க்கு அணித்தாக இருந்த பேரூரில் உள்ள மன்னர் மாளிகைகளை மண்மேடாக்கிவிட்டு, அச்சாளுக்கியர் சின்னமாம் வராகம் பொறித்த கொடி பறந்த வராகக்குன்றில், அதை அகற்றிவிட்டுப் புலி பொறித்த கொடியைப் பறக்கவிட்டு, பாராட்டத்தக்க பெருமை வாய்ந்த அந்நாட்டுப் பெரு நீர்த்துறைகள் மூன்றிலும் தம் பட்டத்து யானையை நீராட்டி விட்டு இறுதியில் சிறிதே ஒய்வுபெற ஒரிடத்தில் பாடி கொண்டிருந்தது சோழர் பெரும்படை. அவ்வாறு பாடி கோண்டிருக்குங்கால், அப்படையின் நிலையுணர ஆங்கு வந்த ஆகவமல்லன் ஒற்றர்கள், சோழர் படைவீரரின் கையில் சிக்கிக் கொண்டனர். இராசா திராசன் அவர்களைக் கொல்லாது, அவர்கள் மார்பில், ‘ஆகவமல்லன் அஞ்சிப் புறங்காட்டுகின்றனனே யல்லது ஆற்றல் காட்டிப் போரிடப் புறப்பட்டிலன்” என்று எழுதித் துரத்தி விட்டான். சின்னாள் கழித்து, ஆகவமல்லன் அமைச்சன் ஒருவன் மெய்க்காப்பாளர் உடன் வரச் சந்துசெய்து போர் தணிக்கும் கருத்துடையவனாய்ச் சோழன் பாடி கொண்டிருக்கும் பாசறைக்குள் புகுந்தான். சோணாட்டு வீரர்கள், உடன் வந்த மெய்க்காப்பாளருள் ஒருவருக்கு ஐங்குடுமி வைத்து ஆகவமல்லன் என்று பெயர் சூட்டியும், மற்றொருவனுக்குப் பெண்ணுடை அளித்து ஆகவமல்லி என்று பெயர் சூட்டியும் புறத்தே துரத்தினார்கள்.

சோழர் பெரும் படையை வெல்லும் ஆற்றல் தனக்கு இல்லை என அறிந்து அடங்கியிருக்க விரும்பிய ஆகல மல்லன், சோழ வீரர்கள் தன் அமைச்சருக்கும் தன் ஒற்றர்க்கும் செய்த அவ்விழி செயலை எண்ணி எண்ணி வருந்தினான்; இறுதியில் அவமானம் பொறுக்காது, போருக்குப் புறப்பட்டு விட்டான். போரில் சாளுக்கியப் படைத்தலைவர் அனைவரும் புறமுதுகிட்டு ஓடிவிட்டனர்;