பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

120

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

மேற்கு நோக்கிய போக்கு : அமெரிக்காவின் சமூகப் பொருளாதார வரலாறு எப்போதும் மாறுபட்டுக் கொண்டே யிருந்த எல்லைப் புறத்தைப் பொறுத்தேயமைந்தது. குடியேற்றக்காரர்களின் விடா முயற்சியும், நிரம்ப நிலம் கிடைக்கும் என்னும் ஆசையும் மேற்குக் கடற்கரையை நோக்கி அவர்களை யீர்த்துச் சென்றன. போக்குவரத்துச் சாதனக் குறைவு, நோய், அபாயம் முதலியவற்றால் அவர்கள் மனம் தளரவில்லை. நாளடைவில் கீழைக்கரையிலிருந்து மேலைக்கரை வரையில் இடைப்பட்ட நாடு முழுவதிலும் அவர்கள் குடியேறினர். இம்மேற்றிசைப் போக்கு, அமைதியான மேற்செலவுக்கும், சாம்ராச்சிய வெற்றிக்கும் சிறந்த உதாரணமாக இருக்கிறது. ஒருவகையான பிரதேசவாரி விசேஷப் பயிற்சியும் வேலைப் பகிர்வும் தோன்றின; இவற்றால் பொருளாதார வளர்ச்சியும், வாழ்க்கைத்தர உயர்வும், வர்த்தக விரிவும் பொது நன்மையும் வளர்ச்சியடைந்தன.

உள்நாட்டுப் போர்: கைத்தொழிலில் மிக்க வட இராச்சியங்களுக்கும், விவசாயத்தில் மிக்க தென் இராச்சியங்களுக்கும் இடையே பல வேறுபாடுகள் இருந்தன. அடிமைகளை வைத்து வேலை வாங்கி வந்த தென்னாட்டு விவசாய முதலாளிக்கும், கைத்தொழில் செய்பவனுக்கும் தன் சொந்தப் பண்ணையில் வேளாண்மை செய்யும் குடியானவனுமான வடக்கத்திய வேலையாளுக்கும் மிக்க வேறுபாடிருந்தது. கைத்தொழில் முன்னேற்றமடைந்துவந்த வடநாட்டவரைக்கண்டு தென்னாட்டவர் பொறாமை கொண்டனர். ஆபிரகாம் லின்கனின் தலைமையில் நடந்த உள்நாட்டுப் போரில் வட இராச்சியங்கள் வெற்றியடைந்தன. அமெரிக்காவில் தனிமனிதச் சுதந்திர விருப்பமும், வாழ்க்கையில் நம்பிக்கையுணர்ச்சியும் கொண்ட நடுத்தர வகுப்புத் தோன்றியபோது தென்னாட்டுப் பெரும் பண்ணைகள் பகுக்கப்பட்டுச் சிறு பண்ணைகள் உண்டாயின. இதற்கு அடிமைகள் கிடையாதிருந்தது முக்கிய காரணம். அதே காரணம் எந்திரசாதன வளர்ச்சிக்கும் ஊக்கமளித்தது. மேலும் ஐரோப்பிய நெசவு நிலையங்களுக்கு அனுப்பப் பருத்தி ஏராளமாக இப்போது உற்பத்தி செய்யப்பட்டது. கைத்தொழிலும் ஊக்கமாக முன்னேறிற்று. உள்நாட்டுப் போருக்கப்புறம் வட நாட்டினரும் உழவுத் தொழிலில் ஊக்கம் காட்டத் தொடங்கினர். போர்களால் ஏற்பட்ட பணவீக்கம் மேலும் மேலும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தது. 1863 ஆம் ஆண்டுச் சட்டப்படி நல்லதொரு பாங்குத் தொழில் முறை ஏற்படுத்தப்பட்டது. காப்புவரித் தகராறு உள் நாட்டுப் போரோடு முடிவடைந்து விட்டது. அ. ஐ. நாடுகள் முழுக் காப்புக் கொள்கை நாடாக மாறிற்று. காப்புவரித் தடைகளால் கைத்தொழில் வளர்ச்சி நன்கு தழைத்தது. அமெரிக்கா உலகத்தில் ஒரு முதன்மை வாய்ந்த நாடாவதற்கு வழிக்கொண்டது.

உள்நாட்டுப் போருக்குப் பின் : 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட பொருளாதாரப் புரட்சி அமெரிக்கத் தற்காலப் பொருளாதார வரலாற்றிற்கு அடிப்படையாகும். அந்நாட்டு மக்கள் தொகை 1810-ல் 70 இலட்சமாயிருந்தது. 1860-ல் 310 இலட்சமாகி, 1930-ல் 13 கோடியாக மிகுந்தது. உள்நாட்டுப் போரைத் தொடர்ந்த அரை நூற்றாண்டில் 360 இலட்சம் மக்கள் அமெரிக்காவில் குடி புகுந்தனர். இவர்களைச் சோதித்து உட்புக விடுவதற்குப் பல முறைகள் கையாளப்பட்டன.

விவசாய உற்பத்தியும் பலவகையிலும் மிகுந்தது. விவசாயிகள் 125 இலட்சம் பேரிருந்தனர். விசேஷ உழவு முறைகள், வாணிப விவசாயம், எந்திர சாதன உழவு முதலியவை வரவர மிகுதியாகக் கையாளப்பட்டன ; டிராக்டர்களும், எந்திரக் சலப்பைகளும், உயர்த்திகளும் அதிகமாக உபயோகப்பட்டு வந்தன. அகப்படும் நிலத்தின் மிகுதியும் அரசாங்கத்தாரின் உதவியும் உழவுத் தொழிலைப் பலரையும் மேற்கொள்ளச் செய்தன. இராச்சியங்களில் விவசாயக் கல்லூரிகள் ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு இராச்சியத்திலும் 30.000 ஏக்கர் நிலம் ஒதுக்கி வைக்கப்பட்டது. காட்டி யல், வானிலையியல், விவசாயம், ரசாயனம் முதலிய இயல்களைப் பற்றி ஆராயப் பல ஆராய்ச்சி நிலையங்கள் தோன்றின. இவற்றால் எந்திர விவசாயம் முன்னேற்றம் அடைந்தது.

உழைப்பைக் குறைக்கும் எந்திர சாதனங்களால் கைத்தொழில் முன்னேற்றம் அடைந்தது. உள்நாட்டுப் போரால் சரக்குகளின் தேவை அதிகப்பட்டது. காப்புக் கொள்கையினால் பிற நாட்டுப் போட்டி குறைந்தது. 1789 லிருந்து விதிக்கப்பட்டுவரும் காப்பு வரிகள் பழைய கைத்தொழில்களைக் காத்துப் புதுக் கைத் தொழில்களைத் தோற்றுவித்தன, இக்காப்புத் தடைகளுக்குப்பின் மிகப் பெரிய ஏக உரிமை நிலையங்கள் தோன்றின. அரசியல் யுக்திகளும் பொருளாதாரத் துறையில் நுகர்வோரைச் சுரண்டலும் மிகுந்தன.

அமெரிக்கப் பொருளாதாரத் துறையிலும் பல முக்கியமான முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. தொழிற்கூட்டுக்களும் டிரஸ்ட்டுகளும் தோன்ற ஆரம்பித்தன. தாது எண்ணெய், இரும்பு, மோட்டார் முதலிய உற்பத்திகள் பெரிய முதலாளிகள் கையில் சிக்கின. ஆயினும் தொழிலாளிகள் புரட்சி வேண்டாமலே தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டனர்.

தலையிடாமைக் கொள்கை மங்குதல் : 19ஆம் நூற்றாண்டில் தனி மனிதனின் முயற்சியாலேயே அமெரிக்கா பெரிய கைத்தொழில் நாடாக வளர்ந்ததாயினும், அந்நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில், அரசாங்கம் நாட்டுப் பொருளாதாரத்தில் மிகவும் தலையிடத் தொடங்கிற்று. வாணிபம், செலாவணி, பாங்குத் தொழில், தொழிலாளி வகுப்பு, வர்த்தகச் சங்கங்கள் முதலியனவெல்லாம் அரசாங்கத்தின் தலையிடுகைக்கு இடம் கொடுத்தன. முதல் உலக யுத்தத்திற்கு முன்பே அமெரிக்கா உலகிலேயே மிக்க செல்வம் நிறைந்த நாடாக விளங்கிற்று. டாலரைப் பிற நாடுகளில் முதலீடு செய்வதன் மூலம் வெளிநாட்டிலும் தன் பொருளாதாரச் செல்வாக்கை வளர்த்துக்கொண்டது. அமெரிக்காவின் தேசிய வருமானமும் வசதிகளும் அந்நாட்டை உலகத்திலேயே ஒரு பலமுள்ள நாடாக மாற்றின. முதல் உலக யுத்தம் அமெரிக்காவிற்கு மிகுந்த இலாபத்தை யளித்தது. உலக வியாபாரச் சந்தை அமெரிக்க வியாபாரத்திற்கு அடி பணிந்தது.

மந்தம் : முதல் உலக யுத்தத்திற்குப் பிறகு, முதலில் விலையேற்றங்கள் தோன்றின. நிலங்களின் விலை ஏறிற்று. சில கைத்தொழில்கள் மிகவும் சிறப்பெய்தின. பிற நாடுகள் கொடுக்கவேண்டிய யுத்தக் கடன்களால் அ. ஐ. நாடுகளுக்கு ஏற்பட்ட வரும்படியும் காப்புத் தடைகளால் உண்டான சாதகச் செல்லு பாக்கிகளும், யுத்த ஈட்டுப் பணமும் ஆகிய மிகைப் பணம் பிற நாடுகளில்தாராளமாக முதலீடு செய்யப்பட்டுச் சரிக்கட்டப்பட்டது. ஆனால் போரில் தோற்ற ஜெர்மனியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஏராளமான யுத்த ஈட்டுப் பணம் பெரிய வியாபார மந்தத்தில் கொண்டுவந்துவிட்டு விட்டது.