பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவயவச் சீரியல்

233

அவரை

ஆறுமாத காலம் படுக்கையில் இருந்தால் இந்தத் துருத்துதல் தானாக மறைந்துவிடும்.

தோள்பட்டை வலி இடப் பக்கம் ஏற்பட்டால் இருதயத்தையும், வலப் பக்கம் ஏற்பட்டால் கல்லீரலையும் பரிசோதித்து, அவற்றில் நோய் உண்டா என்று கவனிக்கவேண்டும். நீரிழிவு உள்ளவர்கட்கும், கீழே விழுந்து கையில் காயம்பட்டுத் தோள் பூட்டை அசைக்க முடியாமலிருக்கிறவர்கட்கும் இந்த நோய் ஏற்படலாம். மிகுந்த வலி உண்டாகும். எக்ஸ்கதிர்ப் படம் எடுத்துப் பார்த்து, எலும்பில் க்ஷயரோகம் இல்லாதிருந்தால் ஆழ்ந்து ஊடுருவும் எக்ஸ்கதிர்ச் சிகிச்சை செய்ய வேண்டும். மற்றவர்கட்குத் தசையை மெதுவாக உருவி, ஒவ்வோர் அசைவையும் ஒழுங்கான அளவுக்கு வருமாறு செய்ய வேண்டும். பூட்டைப் பயன்படுத்துமாறு வற்புறுத்தவேண்டும். வலியில்லாமல் இருப்பதற்காக ஆஸ்பிரின் மருந்து கொடுக்கலாம்.

எலும்புக்கீல் அழற்சி (Osteo arthritis) வயது முதிரும்போது கீல்முனைகளிலுள்ள குருத்தெலும்பு சிதறி எலும்பு தெரியலாம். நடக்கும்போதும் வேலை செய்யும்போதும் எலும்புகள் உராய்ந்து வலி உண்டாகும். பூட்டு வீங்கலாம். தசைகள் தளரும். இடுப்புப் பூட்டிலும் முழங்கால் பூட்டிலுமே 90% உண்டாகிறது. சிறுவயதில் ஏற்பட்டால் பூட்டில் நோயோ அல்லது பூட்டின் மேலும் கீழுமுள்ள எலும்புகளில் உடைவு அல்லது நோயோ ஏற்பட்டிருக்கவேண்டும். இந்தியாவில் 40 வயது மக்களிற் பெரும்பாலோர் நீரிழிவு உள்ளவர்களாகவும் முழங்கால் வலியுடையவர்களாகவுமிருக்கிறார்கள். இவர்கள் உடல் நிறை பெருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நடக்கக் கஷ்டமாயிருந்தால் காலிப்பர் (Calliper) என்பதைக் கொடுத்து நடக்கவைக்கலாம். இடுப்புப் பூட்டின் வலி மிகுதியாயிருந்தால் ஆப்பரேஷன் சிகிச்சைகள் செய்யவேண்டும்.

உடம்பு பிடித்தல் (Massage) : அடிபட்ட பாகங்கட்கு இரத்த ஓட்டம் மிகுவதற்காக அப்பாகத்தைப் பிடித்து விடுவதுண்டு. இது அடிபட்ட பாகங்கட்கோ அல்லது அசைவற்றுப்போன பாகங்கட்கோ சிரையிலுள்ள இரத்தத்தை விரைவாக ஓடச் செய்வதற்குள்ள முறையாகும். இது இரத்தத்திலுள்ள மாசுகளை வெளியேறச் செய்து வீக்கத்தைக் குறைக்கிறது. அன்றியும் தசைகள் வன்மை குறையாமலிருந்து, காயம் குணமானபின் முன்போல் வேலை செய்யுமாறும் செய்கிறது. கணுக்களில் சவ்வு ஏற்படாமலும், இரத்த ஓட்டம் மிகுதியாக ஓடாமலும் செய்கிறது. உள்ளேயுள்ள உறுப்புக்கள் உற்சாகமாக வேலை செய்கின்றன. ஆனால் இம்முறையை நன்றாகக் கற்றவர்களே கையாளலாம். சூடுள்ள பாகத்திலும், க்ஷயரோகத்தால் உண்டான வீக்கத்திலும் பூட்டுக்களிலும் பிடிக்கக் கூடாது. எப்போதும் வைத்தியருடைய மேற்பார்வையில் செய்வது நல்லது.

உடம்பு பிடிப்பதில் பலவகைகள் உள்ளன: 1. பிழிதல் (Petrusage) : கையால் பலமுறை அடிபட்ட உறுப்பின் நுனியில் தொடங்கி அடிவரையிற் பிழிவதாகும். உறுப்பில் தேங்கும் மாசுகள் நெகிழ்ந்து வெளியேறும். இரத்த ஓட்டம் மிகும். 2. அடித்தல் (Tapotement) : உள்ளங்கையாலும், விரல்களாலும் அடிபட்ட இடத்தைச் சுற்றி விரைவாக அடித்தலாகும். இரத்த ஓட்டம் மிகும். 3. அழுத்திப் பிடித்தல் (Deep massage) : சில இடங்களில் நல்ல பயன்தரும். இதை அறியாமல் செய்தால் வலி மிகும். வைத்தியர் கூறுவதுபோல் செய்வதே நல்லது. வலியும் உணர்ச்சியும் இல்லாத வீக்கமுள்ள காயமாயிருந்தாலும், நரம்புகள் பின்னியிருந்தாலும் அழுத்திப் பிடித்தல் அவசியம். ஆனால் நரம்பு வீக்கமும், உணர்ச்சியில்லாத நோயும் இருந்தால் அழுத்திப் பிடித்தலாகாது. எலும்பு பற்றிய நோய்கள், எலும்பு முறிதல் போன்ற காயங்கள் இருந்தாலும் அழுத்திப் பிடிக்கக்கூடாது. பார்க்க : உடம்பு பிடித்தல்.

சுளுக்கு எடுத்தல் (Manipulation) :}} இது எல்லா நாடுகளிலும் நீண்டகாலமாக நடைபெற்று வரும் முறை. ஆனால் முறையைக் கையாளுமுன் நோய் இத்தகையது என்று அறிந்துகொள்ள வேண்டும். வைத்தியர்களே இவ்வாறு செய்யவேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். சூடான பாகத்திலும், சீழ் வைத்த பாகத்திலும், இரத்தக்குழாய் நோய்களிலும், க்ஷயரோகத்தாலுண்டான எலும்புமூட்டு, தசைபற்றிய நோய்களிலும் இதைப் பயன்படுத்தலாகாது. உயிருக்கும் உறுப்புக்கும் கேடு உண்டாகும்.

இந்த முறையை ஒழுங்காகக் கையாண்டால் எலும்பு முறிந்த பாகங்களைச் சரிப்படுத்தலாம். மூட்டு விலக்குகளை உள்செலுத்தி, மூட்டைச் சரியான நிலைமையில் இருக்கச் செய்யலாம் ; விளையாட்டில் விபத்து ஏற்பட்டு, நடக்க முடியாதிருப்பவனை நடக்கும்படி செய்யலாம் ; வீக்கம் என்று எண்ணிப் பூட்டை அசைக்காமலிருக்கும் போது இப்பயிற்சியால் அசைவு கொடுத்துச் சரிப்படுத்தலாம். மட்டையாற் பந்தடிப்பதுபோல் முழங்கையைப் பயன்படுத்துகிறவர்களுக்கு உண்டாகும் நோயை நீக்கலாம்; பலவித இடுப்புப் பிடிப்புக்களையும் முதுகு வலியையும் போக்கலாம். என். எஸ். ந.

அவரை ஒரு சுற்றுக்கொடி. ஓராண்டு அல்லது சில ஆண்டுகள் வாழ்வது. வெப்பமான பிரதேசங்களிலெல்லாம் வளர்வது. இதன் தாய் நாடு இந்தியா. காட்டு அவரை வகைகள் சென்னை, வங்காளம் ஆகிய பகுதிகளில் வேலிகளில் படர்ந்திருக்கும். இந்தியாவில் இது நாடு முழுவதும் 7000 அடி உயரம் வரையிலும் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவிலிருந்து எகிப்து, மேற்கு ஆசியா, சீனா, ஜாவா, ஜப்பான் முதலிய நாடுகளுக்குப் பரவிற்று. அவரையில் இரண்டு முக்கிய வகைகள் உண்டு. ஒன்று புன்செய்ப் பயிர். அது மொச்சை எனப்படும். மற்றொன்று வீட்டுத் தோட்டப்பயிர், மொச்சை சென்னை, பம்பாய், மத்தியப் பிரதேசம், பீகார் முதலிய பாகங்களில் விளைகிறது. மொச்சையில் சில வகைகளே உண்டு. அவற்றில் கறுப்பு, பழுப்பு, வெள்ளை, சிவப்பு விதைகள் உண்டு. வீட்டுத் தோட்டங்களில் பயிராகும் அவரையில் அநேக வகைகள் உண்டு. காயின் நீளம், அகலம், நிறம், மணம், சுவை, செடியின் நிறம், பூவின் நிறம் இவற்றிலெல்லாம் வேறுபாடுகளைக் காணலாம். சிலவகை அவரைகள் அழகுக்காக வளர்க்கும் செடிகளாக இருக்கின்றன.

புன்செய் நிலங்களில் கேழ்வரகு, சோளம், ஆமணக்கு முதலியவற்றோடு சேர்த்து மொச்சையைப் பயிரிடுகின்றனர். இதைமட்டும் தனியாகப் பயிர் செய்வதில்லை. விதைக்காகவே மொச்சை பயிரிடப்பட்டாலும், திருநெல்வேலி போன்ற சில இடங்களில் இது கால்நடைத் தீவனத்திற்கும், பசுமை உரமாகப் பயன்படுத்தவும் பயிரிடப்படுகிறது.

பயிர் செய்தல் : மொச்சை பலவிதமான நிலங்களிலும் பயிராகிறது. ஆயினும் குறுமண் நிலத்தில் நன்றாக விளைகிறது எட்டு அல்லது பத்து அடிக்கு ஒரு வரிசையாக விதைகளை நடுவார்கள். ஏக்கர் ஒன்றுக்கு 5-8 ராத்தல் விதை வேண்டும். பொதுவாக இதை ஆனி, ஆடி மாதங்களில் விதைத்து, மார்கழி மாதத்தில் அறுவடை