பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னாசி

274

அன்னியன்

அன்னாசிச் செடி கிளைகளில்லாத ஒரே தண்டு உடையது. அடி தடிப்பாகக் குறுகியிருக்கும். அதில் கற்றாழையிலிருப்பது போன்ற மொத்தமான நீண்ட இலைகள் நெருக்கமாக வளர்ந்திருக்கும். இலையின் ஓரங்களில் சிறு முட்களும், நுனியில் நீண்ட முள்ளும் உண்டு.

அன்னாசி

தண்டின் நடுவிலிருந்து பூங்கொத்து வளர்கின்றது. அதைத்தான் காய் என்கிறோம். பூங்கொத்தின் நடுவில் பூத்தண்டும், அதைச் சுற்றிலும் நெருக்கமாக அடர்ந்து வளரும் காம்பில்லாத பல பூக்களும் இருக்கின்றன. காயின் மேலுள்ள செதில் அடுக்கினதுபோலக் காணும் வரைகள் தனித்தனிப் பூக்களுக்குரியவை. பூத்தண்டும் பூக்களின் காம்பிலைகளின் அடியும் இதழ்களின் அடியும் பருத்துச் சதைப்பற்றுள்ளனவாகி, ஒன்று சேர்ந்து கூட்டுக்கனியாகின்றன. இந்தச் சதைப்பற்றுள்ள பாகங்களே தின்னும் பாகங்கள். காயின் மேலே பூக் காம்பிலைகள், இதழ்கள், இவற்றின் முனைகள் நீட்டிக் கொண்டிருக்கும். பூக்களையுடைய தண்டு மேலே தொடர்ந்து வளரும். ஒரு கொத்துச் சிறிய இலைகள் அதிலே உண்டாகும். அது அன்னாசிப்பழத்துக்கு முடி போல இருக்கும். ஒரு காம்பில் ஒரே காய் வளரும். ஆயினும் தரைக்கீழ்த் தண்டிலிருந்து வேறு தண்டுகள் தோன்றிக் காய்விடும்.

தென் அமெரிக்காவுக்குச் சென்ற ஸ்பெயின் நாட்டினர் அன்னாசியை முதன்முதல் ஐரோப்பாவிற்குக் கொண்டுவந்தனர். இந்தியாவுக்கு 16ஆம் நூற்றாண்டின் இடையில் அன்னாசி கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் அஸ்ஸாமிலும், வங்காளத்திலும், மேற்குக் கடற்கரைப் பகுதிகளிலும் மிகுதியாக இதைப் பயிர் செய்கின்றனர். ஹவாய்த் தீவுகளிலும் மலேயாவிலும் இது ஏராளமாகப் பயிராகிறது. வட ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா, கனேரித் தீவுகள், அசோர்ஸ் தீவுகள், மேற்கிந்தியத் தீவுகள், மத்திய அமெரிக்கா முதலிய பல இடங்களில் இதை விளைவிக்கின்றனர். அன்னாசிப் பழத்தில் சுமார் 90 வகை உண்டு. பழத்தில் விதை உண்டாவதில்லை. அதன் உச்சியிலிருக்கும் முடியை நட்டுப் பயிர் செய்வார்கள். அடித்தண்டிலிருந்து வெடிக்கும் சிங்கத்திலிருந்தும் (Sucker), பழத்தின் அடியில் இருக்கும் காம்பைத் துண்டுகளாக வெட்டி வைத்தும், வேர்களிலிருந்து உண்டாகும் குருத்துக்களிலிருந்தும் பயிர் செய்வார்கள். பெரும்பாலும் சிங்கங்களை நட்டுத்தான் பயிர் செய்வார்கள். அன்னாசித் தோட்டம் ஒரு தடவை போட்டது எட்டு முதல் பத்து ஆண்டுவரை பலனளிக்கும். பழத்தைக் கொய்யும்போது முள் தைக்காதபடி கித்தான் கையுறைகளும் காலுறைகளும் போட்டுக் கொண்டு வேலை செய்வார்கள். வளைந்த கொக்கி போன்ற கத்தியால் கொய்வார்கள். செங்காயாகவே பறித்து விடுவார்கள். தூர தேசங்களுக்குப் போகும் போது பழுத்துக்கொண்டே போகும். பழம் ஒரு மாதம் வரையிலும் கெடாமலிருக்கும். பழத்தைத் துண்டு செய்து டப்பிகளில் அடைத்தும் ஏற்றுமதி செய்கின்றனர். இலைகளின் நாரிலிருந்து பிலிப்பீன் தீவுகளில் பிஞா என்னும் நயமான ஆடை நெய்கிறார்கள். பழக் கழிவு கால்நடைக்குத் தீனி. பவர் ஆல்கஹாலும் காகிதமும் செய்யவும் உதவும். குடும்பம்: புரோமீலியேசீ (Bromeliaceae) ; இனம் : அனானாஸ் கோமோசஸ் (Ananas comosus).

அன்னி: சோழ நாட்டின் பாபநாசத்திற்கு அருகிலுள்ள அன்னிகுடி என்பது அன்னியின் ஊராக இருக்கலாம். இவன் வரலாறு அகநானூற்றிலும் நற்றிணையிலும் காணப்படுகிறது. அவ்வரலாறு இருவேறு வகையாக உள்ளது:

1. பரணர் (அகம் 196, 262) கூறுமாறு: வளமிகு புன்செய் நிலத்திலே பசிய இலைகள் நிறைந்த பயற்றங் கொடியிலே அன்னியின் பசுபுகுந்து மேய்ந்து விட்டது. அதனைக் கோசரிடம் அன்னி மறையாமல் உரைத்தான். உண்மையை உரைத்ததற்கும், பசு மேய்ந்த சிறு பிழைக்கும் இரங்கி அருளாமல் அக்கோசர்கள் அன்னியின் கண்ணைப் பறித்துவிட்டனர். அதனாற் சினங்கொண்ட அன்னியின் மகள் மிஞிலி என்பவள் வீரம் மிகுந்த படைத்திறனுடைய திதியனுக்குரைத்தாள். அவன் அக்கோசரோடு பொருது, அவரைக்கொன்றான். அவ்வாறு கொல்லும் வரை, கலத்தில் உண்ணாமலும், தூய உடையினை உடாமலும், சினம் மாறாமலும் இருந்த மிஞிலி, கோசர் இறந்த பிறகு தன் நோன்பை விட்டு மகிழ்ந்தாள். திதியன் கோசரோடு போர் புரிந்த இடம் அழுந்தூர். இது மாயவரத்திற்கு மேற்கே உள்ள திருவழுந்தூர்.

2. வெள்ளி வீதியாரும், கயமனாரும் அகத்திலும் (45,145), பெயர் தெரியா ஒருவர் நற்றிணையிலும் (180) கூறுமாறு: திதியனுக்குக் காவல் மரமாக இருந்தது புன்னைமரம். அதனை அன்னி என்பவன் திதியனோடு மாறுபட்டு அழிக்க எண்ணினான். வேற்படையுடைய எவ்வி என்பவன் இதனை உணர்ந்து, அன்னியை அது செய்யாதிருக்குமாறு அடக்கினான். எனினும், அன்னி அடங்காமல் பொன்னனைய பூங்கொத்துகளையுடைய அப்புன்னை மரத்தை வெட்டி வீழ்த்தினான். அதனாலே கும்பகோணத்திற்கருகில் உள்ள குறுக்கை என்னுமிடத்திலே திதியனுக்கும் அன்னிக்கும் போர் நிகழ்ந்தது. அப்போரிலே அன்னி இறந்தான்.

அன்னி மிஞிலி: பார்க்க : அன்னி.

அன்னியன் (Alien) தான் வசிக்கும் நாட்டின் குடியாக இல்லாதவன். அவனை அயலான், அயல் நாட்டான் என்றும் கூறுவர். அவனுடைய சட்ட நிலைமை நாட்டுக்கு நாடு வேறுபடுவதுண்டு. அன்னியர் தாம் வசிக்கும் நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கக்கடவர். அவர்கள் வசிக்கும் நாட்டின் அரசாங்கம்