பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னெலிடா

275

அனகார்டியேசீ

அவர்களுடைய உடல், பொருள், மானம் மூன்றையும் பாதுகாத்துத் தரக் கடமைப்பட்டதாகும். அன்னியர் அடிபட்டாலும், அவதூறு செய்யப்பட்டாலும், திருடப்பட்டாலும், கோர்ட்டுக்களில் வழக்குத் தொடரலாம். அன்னியர் வியாபாரம் செய்யலாம், தொழில் புரியலாம், சொத்து வாங்கலாம், விற்கலாம். ஆனால் அந்த உரிமைகளைப் பறித்துக்கொள்ள அவர்கள் தங்கும் நாட்டுக்கு உரிமையுண்டு. இந்த உரிமைகள் பெறுவதால் அவர்கள் தங்கும் காலம் முழுவதும் தங்கியிருக்கும் நாட்டுக்கு விசுவாசமாயிருக்கக் கடவர். எடுத்துக்காட்டாக, இந்திய யூனியனில் வாழும் அன்னியர் இந்த யூனியனுக்கு உண்மையாக இருக்கவேண்டும். அப்படியில்லா விட்டால் அவர்கள் தேசத்துரோகக் குற்றத்திற்கும் வேறு குற்றங்கட்கும் தண்டிக்கப்படலாம். நாட்டை விட்டு அன்னியரை அகன்று விடும்படி சொல்ல எப்பொழுதும் அரசாங்கத்துக்கு அதிகாரமுண்டு. அன்னியர், தேர்தலில் அபேட்சகராக நிற்கவும், வாக்களிக்கவும், சிவில் உத்தியோகமோ, ராணுவ உத்தியோகமோ வகிக்கவும் முடியாது.

இந்தியாவில் ஓர் அன்னியன் வாழ்ந்து வருகிறான் என்று வைத்துக்கொள்ளுவோம். இந்த அரசாங்கம் அவனுக்குச் சட்டத்துக்கு விரோதமாகத் தீங்கு ஏதாவது செய்தால், அதுபற்றிக் கோர்ட்டில் அரசாங்கத்தின்மீது வழக்குத்தொடுக்க அவனுக்கு உரிமையுண்டு. ஆனால் அப்படிப்பட்ட அன்னியன் வெளிநாட்டுக்குச் சென்றிருக்கும்போது இந்திய அரசாங்கத்தால் அவனுக்கு ஏதாவது இந்தியாவில் தீங்கு நேருமாயின், அதைக் குறித்து இந்திய அரசாங்கத்தின்மீது வழக்குத் தொடர அவனுக்கு உரிமை கிடையாது. அவ்வாறு அவன் வெளியே வசிக்கும்போது இந்தியாவிலுள்ள யாரோ ஒரு தனி மனிதனால் அவனுக்குத் தீங்கு விளைந்தால் அதுபற்றி அவன் இந்தியக் கோர்ட்டில் வழக்குத் தொடரலாம். ஆனால் அன்னிய அரசர்மீதும், அன்னியத் தூதர் மீதும் இந்தியக் கோர்ட்டுக்களில் வழக்குத் தொடர முடியாது. அரசாங்கம் அன்னியரைப் போலீஸ் படையிலும் நெருப்பணைப்புப் படையிலும் சேருமாறு கட்டாயப்படுத்தலாம். ஆனால் ராணுவத்தில் சேருமாறு கட்டாயப்படுத்த முடியாது.

பிறநாடுவந்துள்ள அன்னியர் தமதுநாட்டிலோ வேறு ஒரு நாட்டிலோ செய்த குற்றத்துக்காக அவரை அந்த நாடுகள் நேரில் வந்து கைது செய்ய முடியாது. ஆனால் அவைகள் அவரைக் கைது செய்து தங்களிடம் ஒப்புவிக்குமாறு அவர் தங்கியுள்ள நாட்டிடம் கேட்கலாம். அவ்வாறு ஒப்படைப்பதை 'அன்னியர் ஒப்படைப்பு' என்று கூறுவர். ஆனால் அரசியல் குற்றவாளிகளை அவ்வாறு ஒப்படைக்கலாகாது. இவ்வாறு பிறநாட்டில் தங்கும் அன்னியர்களை 'அன்னிய நண்பர்' என்று கூறுவர்.

ஒரு நாட்டுடன் போர் தொடுத்துள்ள நாட்டின் குடிகள் 'அன்னியப் பகைவர்' எனப்படுவர். அவர்கட்கு அன்னிய நண்பர்க்குரிய உரிமைகள் இல்லை. அவர்கள் அரசாங்கத்தின் இசைவின்றிக் கோர்ட்டுக்களில் வழக்குத் தொடரவும், வியாபாரமும் தொழிலும் செய்யவும், சொத்து வைத்திருக்கவும் முடியாது. ஓ. எம். ர.

அன்னெலிடா (Annelida) வளையப் புழுக்கள் என்னும் பிராணித் தொகுதி. இப் புழுக்களின் உடல் அறையறையாகப் பல வளையங்கள் ஒன்றன் பின் ஒன்று சேர்ந்து தொடர்போலக் காண்கிறது. வெளியேயும் இந்த அறைகளைக் குறிப்பதற்கு மோதிரம் போன்ற வளைவுகளும் அவற்றிற்கிடையே குறுகிய பள்ளங்களும் இருக்கின்றன. கடற்புழுவும், மண் புழுவும், அட்டையும் இந்தத் தொகுதியைச் சேர்ந்தவை.உடலினுள்ளே இருக்கும் உறுப்புக்களிலும் ஒரேவிதமான அமைப்புள்ள பல பாகங்கள் கண்டங்கண்டமாக ஒன்று சேர்ந்திருப்பதைக் (Metameric segmentation) காணலாம். உடம்பினுள்ளிருக்கும் அறையாகிய சீலோம் (Coelom), இரத்த மண்டலம், கழிவுச் சுரப்பிகள் (Nephridia), நரம்பு மண்டலம் ஆகிய இவற்றிலெல்லாம் இந்தக் கண்ட அமைப்பைக் காணலாம். தட்டைப்புழு (Flat worm). குடலிலுள்ள ஒட்டுண்ணியாகிய நாக்குப்பூச்சி (Round worm) ஆகிய இவற்றை விட அன்னெலிடாவின் அமைப்புச் சிக்கலானது. இந்தக் கண்ட அமைப்பு ஆர்த்ரொபோடா என்னும் பூச்சி முதலியவற்றைக் கொண்டுள்ள பெருந் தொகுதியிலும், தண்டுப் பிராணிகளிலும் (Chordata) பலவித உறுப்பமைப்பில் காணலாம். பார்க்க : புழு, வளையப் புழு.

அனகப்பல்லி விசாகப்பட்டினத்திலிருந்து மேற்கே 21வது மைலில் உள்ள அனகப்பல்லித் தாலுகாத் தலைமைப் பட்டணம். நகராட்சி உடையது. சாரதா நதி அருகில் உள்ளது. ஆரோக்கியத் தலமாகக் கருதப்படுவது. இந்நகரிலுள்ள நூகலம்மா கோவிலில் தெலுங்குப் புத்தாண்டுப் பிறப்பன்று எருமைப் பலி நடைபெறும். பித்தளை, இரும்புப் பாத்திரங்களுக்கும், துணிக்கும், சர்க்கரைக்கும் பேர்போனது. மக்: 40,102 (1951).

அனகார்டியேசீ (Anacardiaceae) மாமரக் குடும்பம். இரட்டை விதையிலையுள்ளவை. அறுபது சாதிகளும் ஐந்நூறு இனங்களும் உண்டு. பெரும்பாலும் வெப்ப வலயத்தில் வளர்பவை. மத்தியதரைப் பிரதேசம், கிழக்கு ஆசியா, அமெரிக்கா ஆகிய இடங்களிலும் உண்டு. இந்தியாவிலுள்ள மரங்களில் முக்கியமான சில இனங்கள் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவை. மா, முந்திரி, மரிமாங்காய், சேங்கொட்டை, ஒதியன், காட்டுமா இந்தக் குடும்பம். இதில் உள்ளவை மரங்கள் அல்லது குற்றுச் செடிகள். அவற்றில் பொதுவாக ஓலியோ - ரெசின் உள்ள பால் உண்டு. சிலவற்றின் பால் உடம்பில் பட்டால் கொப்புளிக்கும். இலைகள் மாறியமைந்தவை. பெரும்பாலும் முழு இலைகள். சிலவற்றில் மூன்று பிரிவு இலையும், சிலவற்றில் ஒற்றைக் கூட்டு இலையும் உண்டு. இலையடிச்செதில் கிடையாது. பூக்கள் சிறியவை; நிரம்பக் கொத்துக் கொத்தாகக் கலப்பு மஞ்சரியாக வளரும். ஒழுங்கான அமைப்புள்ளவை ; ஒருபால், இருபால் பூக்கள் கலந்து ஒரே கொத்தில் இருக்கும். புல்லி 3-5; அல்லி 3-5 பிரிந்தவை, தழுவு இதழமைப்புள்ளவை. கேசரம் சாதாரணமாக அல்லியிதழ்களத்தனை. சூலகம் மற்ற உறுப்புக்களுக்கு மேலுள்ளது, அல்லது அதற்கு அடியிலிருக்கும் ஆதான மண்டலத்தில் (Disc) சிறிதளவோ நிரம்பவோ அழுந்தியிருக்கும். சூலிலை 3-1. சூற்பை 1 அல்லது 2-6 அறைகள் உள்ளது. அறைக்கு ஒரு சூல் இருக்கும். பெரும்பாலும் கனிக்கு ஒரு சூலே முதிரும். கனி உள்ளோட்டுத் தசைக்கனி அல்லது கொட்டை. கொட்டை சிலவற்றில் வெடிக்கும்.

மாமரம் பலவிடங்களில் பயிர் செய்யப்படுகிறது. பழம் தின்னவும், காய் ஊறுகாய், வற்றல் போடவும் உதவும். மரம் வேலைக்கும் விறகுக்கும் பயன்படும். முந்திரிப்பருப்பு மிகுந்த சுவையுள்ளது. இதன் கொட்டையிலிருந்து எடுக்கும் எண்ணெய், வர்ணம் கொடுப்பதில் பயன்படுகிறது. முந்திரிக் கொட்டை என்று கூறுவதே உண்மையான முந்திரிக்கனி. நாம்