பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அக்ரிடீன்

7

அகத்தி

பல கோட்டைகளைக் கட்டி பிரிட்டனின் தற்காப்புக்களைப் பலப்படுத்தினான். இவனுடைய வாழ்க்கை வரலாற்றை இவன் மருமகனான டாகிட்டஸ் என்னும் புகழ் பெற்ற வரலாற்றாசிரியன் எழுதியுள்ளான்.

அக்ரிடீன் (Acridine) கரித்தாரிலிருந்து கிடைக்கும் ஆந்த்ரசீனில் உள்ள ஒரு பொருள். இது ஊசியை யொத்த படிக வடிவுள்ளது. தோலை அரிக்கும் தன்மையுள்ளது. இதை நீரில் கரைத்தால் அக்கரைவு ஒளிரும். ஆந்த்ரசீனைக் கந்தக அமிலத்துடன் கலந்தால் அக்ரிடீன் அமிலத்தில் கரைந்துவிடும். அக்கரைவைப் பொட்டாசியம் டைக்குரோமேட்டுடன் கலந்தால் அக்ரிடீன் டைக்குரோமேட்டு படியும். அதிலிருந்து நவச்சார ஆவியால் அக்ரிடீனைப் பிரிக்கலாம்.

இதுவும் இதையொத்த மற்றப் பொருள்களும் பல வினச்-சுற்றுக் கூட்டுக்கள் (Hetero-cyclic compounds) என்னும் வகையைச் சேர்ந்தவை.

அக்ரிபிளாவீன் (Acriflavin) அக்ரிடீன்களில் ஒன்று. இது செம்மஞ்சள் நிறமான ஒரு சாயம். இதன் கரைவு நச்சுக் கொல்லியாகப் பயன் படுகிறது. இதைத் தகுந்தவாறு நீர்த்துப் பயன் படுத்தினால் உடல் தசைகளைப் பாதிக்காது. புண்களைக்கழுவுவதற்கும், மேக நோய்ச் சிகிச்சைக்கும் இது பயன்படுகிறது.

அக்ரிலிக அமிலம் (Acrylic Acid): [CH2 CH. COOH] இது ஓர் அபூரித கரிம அமிலம். புரொப்பியோனிக அமிலத்தை ஒத்த பண்புகள் கொண்டது. இது புரொப்பியோனிக அமிலமாக எளிதில் ஆகும். இதைக் காரத்துடன் இளக்கினால் இது சிதைந்து பார்மிக அமிலத்தையும் அசிடிக அமிலத்தையும் அளிக்கும்.

அக்ரேனியா (Acrania) முதுகுத் தண்டு விலங்குப் (Chordata) பெருந் தொகுதியில் ஒரு சிறு தொகுதி (Sub-phylum). அக்ரேனியா என்பதற்குத் தலையில்லாதவை என்று பொருள். இவ்வகை உயிர்களில் தலை என்று சொல்லக்கூடிய பாகம் இல்லை. எலும்பு வளையங்களால் ஆக்கப்பட்ட முதுகுத் தண்டும் கிடையாது. அதற்குப் பதிலாகப் பிரம்பு அல்லது தடிபோன்ற நோட்டோகார்டு (Notochord) என் னும் உறுப்பு இருக்கின்றது. கடலில் கரைக்கு அருகில் மண்ணில் புதைந்து வாழும் ஆம்பியாக்சஸ் (Amphioxus) என்னும் சிறு பிராணியும் அதற்கு நெருங்கிய தொடர்புடைய மற்றுஞ் சில பிராணிகளும் இந்தத் தொகுதியைச் சேர்ந்தவை. இவற்றிற்குச் செபலோ கார்டேட்டா (Cephalo chordata) (த. க.) என்றும் பெயர்.

அக்வைனஸ், செயின்ட் தாமஸ் (சு. 1227—1274) இத்தாலியிலுள்ள நேபிள்ஸ் நகரத்தில் பிறந்த ஒரு தார்க்கிகர். பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்கொலாஸ்டிக்குகளுள் (Scholastics) சிறந்தவர். புராதன சாத்திரக் கொள்கைகளையும், அரிஸ்டாட்டில், சிசெரோ போன்றவர்களுடைய அரசியற் கொள்கைகளையும் பொருத்தி இடைக்கால அரசியல் தத்துவத்தை அறிவியல் தத்துவமாக்க உதவியவர். சட்டம் என்பது மாற்றுதற்குரிய தன்று, அழிவில்லாதது, இயற்கையானது என்பதும் உலகியற் சட்டமானது அடிப்படைச் சட்டத்தை நிறுவுவதற்கான ஒரு முயற்சியே என்பதும் இவர் கருத்துக்கள். இவர் இயற்றிய நூல்கள் : 1. அரசுத் தத்துவம், 2. அரிஸ்டாட்டிலின் அரசியற் கொள்கை விரிவுரை, 3. பாரமார்த்திக முழுவுரை. சி. எஸ். ஸ்ரீ.

அகச் சிவப்புக் கதிர்கள் (Infra Red Rays) : சூரிய ஒளியின் நிறமாலையில் அலை நீளம் அதிகமான சிவப்புப் பகுதிக்கு அப்பால் கண்ணுக்குப் புலனாகாது உள்ள இக்கதிர்கள் அகச் சிவப்புக் கதிர்கள் எனப்படும். கண்ணுக்குப் புலனாகாதிருப்பினும் இவை பொருள்களுக்குச் சூடேற்றுகின்றன. ஆகையால் இவற்றை வெப்ப அலைகள் என்றும் கூறலாம். வெப்பத்தை அளவிடும் கருவிகளைக்கொண்டு இவற்றைக் கண்டறியலாம். சூரியனது நிறமாலையில் பல அகச் சிவப்பு வரைகள் இருக்கின்றன. சாதாரணக் கண்ணாடி அகச்சிவப்பு ஒளியை அவ்வளவாகக் கடத்துவதில்லை. ஆகையால் இத்தகைய ஒளியை ஆராய இந்துப்புப் போன்ற பொருளினால் செய்யப்பட்ட ஒளியியற் கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள்.

அகச் சிவப்புக் கதிர்களைக்கொண்டு போட்டோப் பிடிக்கலாம். ஆனால் இதற்குத் தனிப்பட்ட தட்டுக்களும், படலங்களும் தேவையாகின்றன. சில சாயங்களைத் தடவிய போட்டோத் தட்டின்மீது அகச் சிவப்புக் கதிர்கள் பட்டால் அத்தட்டு மாறுபாடடையும். அகச் சிவப்புப் போட்டோ முறை தற்காலத்தில் மிக முக்கியமானதாக இருக்கிறது. சாதாரண ஒளிக் கதிர்களைவிட அலை நீளம் அதிகமான அகச்சிவப்புக் கதிர்கள் காற்று மூலக்கூறுகளாலும், காற்று மண்டலத்திலுள்ள துகள்களாலும் அதிகமாகச் சிதறாமல் நெடுந்தொலைவு வரை ஊடுருவுந் தன்மையுள்ளவை. ஆகையால் தொலைவிலுள்ள பொருள்களையும், மென்பனி மூடியுள்ள பொருள்களையும் தெளிவாகப் படம் பிடிக்க இக்கதிர்கள் பயனாகின்றன. வானிலிருந்து படம் எடுக்கவும் இம் முறை பயன்படுசிறது. அகச்சிவப்பு ஒளியானது சாதாரண ஒளியைவிட ஊடுருவும் தன்மை மிக்கதா யிருப்பதால் உடலிலுள்ள கோளாறுகளையும் எந்திர உறுப்புக்களில் விளையும் பழுதுகளையும் ஆராயவும், கள்ளக் கையெழுத்து முதலியவற்றைக் கண்டறியவும் பயன்படுகிறது.

பல பொருள்கள் அகச் சிவப்புக் கதிர்களை முழுவதும் உறிஞ்சிச் சூடேறுகின்றன. ஆகையால் இக்கதிர்களைக்கொண்டு பொருள்களைச் சீராகவும் எளிதிலும் சூடேற்றலாம். அதனால் சாயங்களை உலர்த்த இம் முறை பயன்படுகிறது. மருத்துவத்தில் வாதம் முதலிய நோய்களைக் குணப்படுத்தவும் இம்முறை வழங்குகிறது.

பொருள்களின் மூலக்கூறு. நிறமாலயின் (பார்க்க: நிறமாலையியல்). வரைகள் பெரும்பாலும் அகச்சிவப்புப் பகுதியில் இருக்கும். ஆகையால் இவற்றை ஆராய்ந்து மூலக்கூறுகளின் அமைப்பை அறிய முடிகிறது.

அகண்ட காவிரி : மைசூர்ப் பீடபூமியிலிருந்து இறங்கிக் கொங்கு நாட்டைக் கடந்து சோழ நாட்டை யடையும் காவிரி ஆறு திருச்சிராப்பள்ளி யருகில் ஸ்ரீரங்கத்தைச் சுற்றிக் காவிரி, கொள்ளிடம் என்று இரு ஆறுகளாகப் பிரிகிறது. அவ்வாறு பிரிவதற்கு முன்பு ஒன்றாக வரும் ஆற்றை அகண்ட காவிரி என்பர். அகண்டம் என்னும் சொல் இரண்டுபடாமல் ஒன்றாயிருப்பது என்று பொருள்படும்.

அகத்தி சிறிய மெல்லிய வன்மையில்லாத மரம் 20-30 அடி வளரும். அதிகமாகக் கிளை விடுவதில்லை ஓரடி நீளமுள்ள இரட்டைக் கூட்டிலையுடையது. சுமார் 20, ஜதை சிற்றிலைகள் உண்டு. சிற்றிலை ஓர் அங்குல நீளமிருக்கும், நீள்சதுர வடிவமுள்ளது. பூங்கொத்து சிறிய வளர் நுனிக் கொத்து (Raceme). 3-4 பூக்கள் கொண்டது. பூ பெரியது, 2-3 அங்குல