பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருபா இருபஃது

82

இரும்பு

வளர்ச்சித் தொழில் நிகழும் ஊட்டப்பருவம். மற்றொன்று, பிந்தியது, விதையுண்டாக்கும் தொழில் நிகரும் இனப்பெருக்கப் பருவம். வெப்ப வலயத்திற்கு அப்பாற்பட்ட சம தட்பவெப்ப வலயங்களிலே ஊட்டப்பருவம் முடியும்போது, தீவிர வாழ்க்கைக்கு வசதியில்லாத குளிர்காலம் வந்துவிடும். பீட்டு முதலிய செடிகள் அந்தக் காலத்தைக் கிழங்கு நிலையில் கழிக்கும். வளர்ச்சிக்கேற்ற வசந்தகாலம் திரும்ப வரும் போது பூக்கொத்துக்கள் உண்டாகும். வெப்பவலயத்தில் வளரும்போது சில இருபருவத் தாவரங்கள், தம் வாழ்க்கைக்கேற்ற காலம் தொடர்ச்சியாகக் கிடைப்பதால், ஒருபருவத் தாவரங்களைப்போல ஒழுகுவதுண்டு.

இருபா இருபஃது ஒருவகைப் பிரபந்தம்; வெண்பாவும் ஆசிரியப்பாவுமாக அந்தாதித் தொடையால் இருபது பாட்டுக்கள் இணைந்து வருவது. மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கனுள் இருபா இருபஃது என ஒரு நூல் உள்ளது. இதனைப் பாடியவர் அருணந்தி சிவாசாரியர்.

இரும்பல் காஞ்சி ஒரு தமிழ் நூல். புறப்பொருள் சார்பானது (புறத்திரட்டு).

இரும்பிடர்த்தலையார் பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும் பெயர் வழுதியைப் புகழ்ந்த பாடலில் 'இரும்பிடர்த் தலையிருந்து' என்று கூறுவதால் இப்பெயர் பெற்றனர் போலும் (புறம்.3). இவர் சோழன் கரிகாலனுக்கு அம்மான் என்றும், இளமையிலேயே அரசனான அவனுக்குப் பெருந்துணையாயிருந்தவர் என்றும் தெரிகிறது (பழமொழி 21,65,105).

இரும்பு ஓர் உலோகத் தனிமம். குறியீடு Fe; அணுநிறை 55.84; தொன்றுதொட்டு மனிதன் பயன்படுத்தி வரும் தனிமங்களில் ஒன்று. சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இதை எகிப்தியர்கள் நகைகள் செய்யப் பயன்படுத்தினார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. கி. மு. 1500 வாக்கில் அங்கே இது அன்றாட வாழ்க்கையில் வழக்கத்திற்கு லந்தது. ஹிட்டைட்டுகள், அசிரியர்கள் ஆகிய பழங்கால மக்களும் இரும்பைப் பயன்படுத்தினார்கள். மிகப் பழங் காலத்திலேயே இரும்பைப் பிரித்தெடுத்து, அதைப் பல பொருள்களாகச் செய்யும் முறைகளில் இந்தியரும் சீனரும் கைதேர்ந்திருந்தனர்.

தோன்றுமிடம்: இது தனிநிலையில் மிக அருமையாகவே இயற்கையிற் கிடைக்கிறது. விண்வீழ் கற்களிலும், எரிமலைப் பாறைகளிலும் இது சிறு துணுக்குக்களாக இவ்வகையிற் கிடைக்கிறது. இரும்புக் கூட்டுக்கள் பல வடிவங்களில் கிடைக்கின்றன. மண்ணிலும், பெரும்பான்மையான நீர்நிலைகளிலுள்ள நீரிலும், தாவரங்களிலும், இரத்தத்திலும் இரும்புக் கூட்டுக்கள் உள்ளன.

பெரும்பாலும் எல்லாக் கனியங்களிலும் இரும்பு சிறிதளவு இருக்கலாம். முக்கியமான இரும்புத் தாதுக்கள் ஆக்சைடுகளும், கார்பனேட்டுக்களும் ஆகும். மாக்னடைடு (Fe3 O4), ஹெமடைட்டு, (Fe2 O3), லிமோனைட்டு (2 Fe2 O3 3H2 O), சிடரைட்டு, சாலிபைட்டு ஆகியவை முக்கியமான இரும்புத் தாதுக்கள் ஆகும்.

இரும்பு ஆக்சைடு தாதுக்களைக் கரியுடன் கலந்து உருக்கி உலோகம் பிரித்தெடுக்கப்படுகிறது (பார்க்க: இரும்பும் எஃகும்). இவ்வாறு பெறப்படும் இரும்பில் கரி சிறிதளவு கலந்திருக்கும். கரியின் விகிதமும், அது கலந்துள்ள வகையும் இரும்பின் பண்புகளை நிருணயிக்கிறது. இவற்றிற்கேற்ப வார்ப்பிரும்பு (Cast Iron), எஃகு (Steel), தேனிரும்பு (Wrought Iron) என மூன்று இரும்பு வகைகள் உண்டு.

பண்புகள் : அயகஆக்சைடை மங்கிய செவ்வொளி வீசும் அளவிற்குச் சூடேற்றி, அதன்மேல் ஹைடிரஜனைச் செலுத்தியோ, அயச குளோரைடு கரைவை மின்பகுப்புச் செய்தோ இரும்பைத் தூய நிலையில்பெறலாம். தூய இரும்பு மிருதுவானதும் வெண்மையானதுமான உலோகம். இதன் ஒப்பு அடர்த்தி 7.86. உருகு நிலை 1,538°. கொதி நிலை 2.450°. நிக்கலையும், கோபால்ட்டையும் தவிர மற்றெல்லா உலோகங்களைக் காட்டிலும் இதன் இழுவலிமை அதிகம். இது வலிவான காந்தத் தன்மையுள்ளது. செஞ்சூட்டு நிலையில் ஆக்சிஜனில் இது பிரகாசமாக எரியும். செஞ்சூட்டில் இது நீராவியைச் சிதைத்து ஹைடிரஜனை விடுவிக்கும்.

ஹைடிரஜனையும் கார்பன் மானாக்சைடையும் இது எளிதில் உட்கொள்ளுகிறது. இத்திறன் வெப்பநிலையோடு அதிகரிக்கிறது. இது நேரடியாக ரசக் கலவையை அளிப்பதில்லை. காற்றோட்டமாக வைக்கப்படும் இரும்பு துருவேறி, நீரேறிய அயக ஆக்சைடாக மாறுகிறது (பார்க்க: துரு). உப்பீனிகளுடன் இது நேரடியாகக் கூடும். காரங்களுடன் இது வினைப்படுவதில்லை.

நீர்த்த ஹைடிரோகுளோரிக அமிலத்திலும் கந்தகாமிலத்திலும் இரும்பு எளிதிற் கரைந்து அயச உப்புக்களை அளிக்கும். அப்போது ஹைடிரஜன் வெளிவரும். நீர்த்த நைட்ரிக அமிலம் குளிர்ந்த நிலையில் இரும்புடன் வினைப்படும்போது ஹைடிரஜன் வெளிவருவதில்லை. ஆனால் இப்போது அயச நைட்ரேட்டும் அம்மோனிய நைட்ரேட்டும் தோன்றும்.

4 Fe+10 HNO3 =4 Fe (NO3)2 +2 NH4 NO3 +3 H2O.

சூடான நிலையில் நீர்த்த நைட்ரிக அமிலம் இரும்பைக் கரைத்து, அயக நைட்ரேட்டையும் நைட்ரிக் ஆக்சைடையும் தோற்றுவிக்கும் இரும்பை அடர் நைட்ரிக் அமிலத்தில் ஊற வைத்தால், அது வினையடங்கிய (Passive) நிலையை அடையும். குளோரிக அமிலம் குரோமிக அமிலம், ஹைடிரஜன் பெராக்சைடு ஆகிய பொருள்களில் ஊறவைப்பதாலும் இரும்பை இந்நிலைக்குக் கொண்டுவரலாம். விளையடங்கிய இரும்பு நீர்த்த அமிலங்களில் கரையாது. மயில்துத்தக் கரைவிலிருந்து இது செம்பைப் படிவிக்காது. வினையடங்கிய இரும்பை நீர்த்த கந்தகாமிலத்தில் வைத்துச் சாதாரண இரும்பினால் தொட்டால் இந்நிலை மாறி இரும்பானது சாதாரண நிலையை அடையும்.

புறவேற்றுமை யுருக்கள் : இரும்பைச் சூடேற்றுவதால் அதன் பௌதிக இயல்புகளில் நிகழும் மாறுதல் களிலிருந்து இது புறவேற்றுமை மாறுதல்களை அடைகிறது என முடிவு செய்திருக்கிறார்கள். 1. ஆல்பா இரும்பு - 769°க்குக் குறைவான வெப்ப நிலையில், 2. பீட்டா இரும்பு 769°க்கும், 906°க்கும் இடையே, 3. காமா இரும்பு 906°க்கும், 1,404°க்கும் இடையே, 4. டெல்ட்டா இரும்பு 1,404°க்கும், 1,535°க்கும் இடையே புறவேற்றுமை மாறுதல்களை அடைகின்றன. இவற்றுள் காமா இரும்பைத் தவிர மற்ற வகைகள் ஒரேவகையான படிக அமைப்புள்ளவை. ஆனால் இவற்றின் பௌதிக இயல்புகளும் காந்த இயல்பும் வேறுபடும். அவித்தலின் போதும், வேறு பொருட்கலப்பினாலும் இரும்பிலும் எஃகிலும் விளையும் மாறுதல்களை இப்புறவேற்றுமை மாற்றங்களைக் கொண்டு ஓரளவு விளக்கலாம். இந்த மாற்றங்கள் நிகழும்போது வெப்பம் வெளிப்படுகிறது. 769° இல்