பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்கைத் திறமை

27

இயற்கைத் திறமை

தவறான உணவு உண்ணுதல், தவறான முறையில் ஒழுகுதல், உடலை ஒழுங்கான முறையில் கவனியாதிருத்தல், கவலை, அச்சம் முதலியவற்றால் நரம்புத்தளர்ச்சி உண்டாக்குதல் ஆகிய காரணங்களால் நோய் தோன்றுகிறது. அதனால் நோயைக் குணப்படுத்துவதற்காக உடலில் புதிதாக நஞ்சு புகாமல் செய்யவும், புகுந்த நஞ்சு வெளியேறும்படி செய்யவும் வேண்டும். இதற்கு மருந்தைக் கையாளாமல் இயற்கை முறைகளைக் கையாளுவதே இயற்கைச் சிகிச்சை முறையாகும்.

நஞ்சு புகாமலிருப்பதற்காக உணவு முறையைச் சீர்திருத்தி, உடலுக்கு ஒத்த உணவுகளைத் தக்க முறையில் உண்ணவேண்டும். உடலில் புகுந்துவிட்ட நஞ்சு மிகுதியாயிருப்பின், மேலும் உணவை உண்டு, உடல் சீரண வேலையை மேற்கொள்ளச்செய்தலாகாது. உணவு கொள்ளாமல் பட்டினியிருந்து, அதன்பின் கழிவுகளை அப்புறப்படுத்தக் கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். அத்தகைய உணவுகள் பழங்களேயாகும். அதனால் நோயாளி நாள் முழுவதும் பழங்களை மட்டுமே அளவாக உண்டு வருதல் மிகவும் நல்லது.

இயற்கைச் சிகிச்சை முறையில் மலக்குடலில் தங்கும் நஞ்சுகளை நீக்கப் பேதி மருந்து தராமல் வஸ்தி வைக்கிறார்கள். நஞ்சுகள் மூத்திரத்தின் வழியாக வெளியேறுவதற்காகத் தண்ணீரும் பழச்சாறும் மிகுதியாகப் பருகச் செய்வார்கள். வேர்வை வழியாக நஞ்சு வெளியேறுவதற்குச் சூரிய ஸ்நானம், வேது ஸ்நானம் ஆகிய முறைகளைக் கையாள்வர். இதனுடன் நோயாளியின் நிலைமைக்குத் தக்கவாறு உடற் பயிற்சி செய்யவும், பிராணாயாமம் பயிலவும் ஏற்பாடு செய்வர். முதுகுதண்டு பிடித்து விடுதல், உடம்பு பிடித்து விடுதல், செயற்கைச் சூரிய ஒளியிற் குளித்தல் முதலிய முறைகளையும் கையாள்வர்.

புறத்தேயிருந்து கிருமிகள் வந்து நோயை உண்டாக்கலாமாயினும், அவை நோயை உண்டாக்குவதற்குக் காரணமாயிருப்பது உடலின் நிலையேயாதலால், உடலுக்குள் நோய்க் கிருமிகள் புகும்போதும் மேற்கண்ட இயற்கை முறைகளையே கையாள வேண்டும் என்பது இயற்கைச் சிகிச்சையாளர் கருத்து. ஒருவருக்கு அடிபட்டு ஏதோவொரு உறுப்பு வீங்குமானால் அதைச்சுற்றி ஈரத் துணியைச் சுற்றுவர், அல்லது களிமண் வைத்துக் கட்டுவர். நெருப்புக் காயத்தின்மீது சோடா உப்பை ஒலிவ எண்ணெயில் குழைத்துப் பூசுவர். நாய் முதலியன கடித்தால் நஞ்சை வாயால் உறிஞ்சி எடுத்துவிட்டு இரண்டொரு நாள் பட்டினி போடுவர்.

இவ்வாறு பலவித இயற்கை முறைகளைக் கொண்டு எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும் என்று இயற்கைச் சிகிச்சையாளர் கருதுகிறார்கள்.

இந்த முறைகளில் சில பண்டைக்கால முதல் எல்லா நாடுகளிலும் பயன்பட்டு வந்தபோதிலும் சென்ற ஒரு நூற்றாண்டாகவே இவை ஒரு தனிச் சிகிச்சை முறையாக வழங்கி வருகின்றன. இதை மேனாட்டில் முதன் முதல் பயன்படுத்தியவர்கள் ஜெர்மனியிலிருந்த பிரீஸ்நிட்ஜ் என்பவரும் ஆஸ்திரியாவிலிருந்த ஷ்ரோத் என்பவருமாவர். இப்போது இம்முறை அமெரிக்காவில் மிகுதியாகப் பயிலப்படுகிறது.

இயற்கைத் திறமை (Aptitude) : ஓர் அறிவுத் துறையிலோ, ஒரு புது மொழியைப் பேசுவதிலோ, ஒரு புது வேலையைச் செய்வதிலோ, இசையைக் கற்பதிலோ பயிற்சியினால் ஒருவர் பெறத்தக்க திறமைக்கு அறிகுறியாக விளங்கும் உள்ளநிலையும் சிறப்பியல்புகளும் இயற்கைத் திறமை எனப்படும். இது எதிர்காலத்தில் ஒருவரது ஆளுமை (த க.) எவ்வகையில் அமையும் என்பதற்குத் தற்போதைய அறிகுறி. இது ஆளுமையின் ஓர் அமிசம். இது முற்றிலும் பிறவியில் ஏற்படுவதென்றோ அல்லது முற்றிலும் வாழ்க்கை முறையினால் பெறத்தக்கதென்றோ கூற முடியாது. ஒருவர் குறிப்பிட்டதொரு வேலையைச் செய்வதில் அடையும் தேர்ச்சியும். அவரது அறிதிறனும், உணர்ச்சிகளின் வடிவங்களும், அறநெறித்தன்மையும், ஆளுமையின் மற்ற அமிசங்களும் பிறவியிலேயே உள்ள இயல்பினாலும் வளர்ச்சிக்கும் உளப்பயிற்சிக்கும் அவருக்குக் கிடைக்கும் வாய்ப்பினாலும் மாறுபாடடையும். இயற்கைத் திறமை இதற்கு விலக்கன்று.

இயற்கைத் திறமை என்பது ஒருவர் ஒரு வேலையைச் செய்யும் திறமை மட்டும் அன்று. அவ்வேலைக்கு அவரது தகுதியும், அவ்வேலையைச் செய்வதால் அவர் பெறும் உளநிறைவையும் அது குறிக்கிறது. ஆகையால் ஒருவரது இயற்கைத் திறமையை ஆராயும்போது ஏதாவதொரு தேர்ச்சியை அடைவதில் அவர் காட்டும் திறமையோடு, அவ்வேலைக்கு அவரது தகுதியையும், அதில் அவருக்குள்ள ஈடுபாட்டையும் அறிய முயலவேண்டும். ஐசக் நியூட்டனது தந்தை ஒரு விவசாயி ஆனால் நியூட்டனுக்குத் தந்தையின் வேலையில் இயற்கைத் திறமையே இருக்கவில்லை. அரசியலிலும், அரசாங்க நடவடிக்கைகளிலும் இவர் ஓரளவு இயற்கைத் திறமை கொண்டிருந்தார். மத ஆராய்ச்சியில் இவர் இதைவிட அதிகமாகவும், எந்திரவியலில் மிக அதிகமாகவும் இயற்கைத் திறமை காட்டினார். ஆகையால் ஒருவரது இயற்கைத் திறமை எல்லாத் துறைகளிலும் ஒரே அளவின்தாக இருப்பதில்லை என்பது புலனாகும். ஒருவரது இயற்கைத் திறமை இன்னொருவரதைப்போல் இருப்பதில்லை. இயற்கைத் திறமை வேறுபாடுகள் பெரும்பாலும் நிலையாக இருக்கும். இயற்கைத் திறமைச் சோதனைகளுக்கு இந்த வேறுபாடுகள் அடிப்படையானவை.

இயற்கைத் திறமைச் சோதனைகள்: இத்தகையோருக்கு இன்ன தொழிலில் பயிற்சி அளிக்கலாம் என்று அறிவதற்கும், இன்ன வேலைக்கு இத்தகையோரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று அறிவதற்கும் முதற்கண் வேண்டப்படுவது இயற்கைத் திறமைச் சோதனைகளாகும்.

மனிதனிடம் காணப்படும் திறமைகள் ஒன்றுக்கொன்று சார்புடைமை பற்றி உளவியலாரிடையே கருத்து வேற்றுமைகாணப்படினும், மக்கள் இயற்கைத் திறமையைப் பற்றியவரையில் வேறுபாடுடையவர் என்பது எல்லோர்க்கும் ஒப்ப முடிந்த உண்மையாகும்.

ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கு ஒருவருக்குள்ள இயற்கைத் திறமையை அறிவதற்கு, அவரை அத்தொழிலைக் கற்கச் செய்தபின் அவர் பெறும் திறமையைக் கணிப்பதே முறை என்று சிலர் கூறுவர். ஆனால் இந்த முறையால் பொழுதும், பணமும், ஆற்றலும் அளவுக்கு மிஞ்சி வீணாய்விடும். அதிலும் நீண்ட நாள் சிறப்புப் பயிற்சி பெறவேண்டிய தொழில்களில் இந்த விரயம் இன்னும் அதிகமாகும். நீண்டநாள் பயிற்சி பெற்றபின் குறிப்பிட்ட தொழிலுக்குத் தகுதியற்றவர் என்று தெரியவருமாயின், அதனால் முதலாளிக்குப் பொருள் நட்டமும், தொழிலாளிக்குச் சுயமரியாதை, சுகவாழ்க்கைகளின் குறைவும் உண்டாகும். அதனால் ஒருவரிடம் மறைந்து கிடக்கும் இயற்கைத் திறமைகளை விரைவாக-