பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயேசு சங்கம்

34

இர்வின் பிரபு

இவ்வாறு எண்ணுகிறார்கள் என்பதில்லை. இவருடன் வாழ்ந்த மக்களுங்கூட இவரிடத்தில் ஒரு தனி ஆன்ம சக்தியைக் கண்டார்கள். இந்தச் சக்தியானது இவருக்கு மக்கள் மீதிருந்த செல்வாக்கினாலும், இவர் மக்கள் உள்ளங்களை அறிந்த நுண்ணறிவினாலும், அற்புதங்கள் பலவற்றைச் செய்த ஆற்றலினாலும் விளங்கிற்று. இவருடைய வாழ்க்கை அற்புதத்தில் தொடங்கி அற்புதத்தில் முடிந்ததாகும்.

(5) இவர் சகித்த சோதனைகள் சாதாரண மக்கள் பொறுக்கக் கூடியவையல்ல. உலக மக்களின் தொண்டுக்காகக் கடவுளால் அனுப்பப்பெற்ற ஒருவர்க்கே இது சாத்தியமாகும். அந்தச் சோதனைகளும் மக்கள் நலத்தை நாடி உழைக்க விருப்பமும் ஆற்றலுமுடைய ஒருவர்க்காகவே ஏற்பட்டனவாக இருக்கின்றன. மக்களுடைய பிரச்சினைகளை எல்லாம் தீர்க்கக்கூடியவர் என்னும் மேசியா உணர்ச்சியே இவருடைய ஊழியத்தின் இலட்சியமும் சிறப்புமாகும். அதிகாரத்தோடு பேசிப் பாவங்களை மன்னித்து, ஆன்ம சக்தியை வெளிப்படுத்துவதே மேசியாவின் தொண்டாதலால், அந்தத் தொண்டை நிறைவேற்றும்பொழுது தாம் உயிரை இழக்க வேண்டியதே என்று தம் சீடர்களிடம் கூறினார். ஆண்டவனுடைய தாசன் என்னும் இலட்சிய புருஷர் ஒருவர் தோன்றி மக்களுக்காகப் பாடுபடுவார். என்பதாக முன்னமேயே ஏசாயா தீர்க்கதரிசி கூறியிருந்தார். அந்த இலட்சிய புருஷர் தாமே என்பதாகவும், அந்தக் கடமையை நிறைவேற்றுவதால் சாவு வரினும் தம்மை மக்களுடன் ஒன்றாக்கிக் கொள்வதற்காகவே தாம் வந்திருப்பதாகவும் அறிந்துகொண்டிருந்தார்.

6) ஏதோ ஒரு பெரியவர் இருந்தார்; அவரை மக்கள் கொன்று தீர்த்தார்கள் என்றுமட்டும் கூறுவதாயிருந்தால், அதனால் மக்களுடைய பிரச்சினைகள் தீர்ந்து போவதில்லை. ஆனால் இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்னர் உயிர்த்தெழுந்ததானது நமது பாவங்களினிமித்தம் இவர் உயிர் துறந்தார் என்பது மட்டுமேயன்றி, நமது பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்கின்றார் என்பதும் புலனாகும்.

(7) இயேசுவின் ஞானோபதேசத்தின் பெரும் பகுதி கடவுள் இராச்சியத்தைப் பற்றியதாகும். அந்த இராச்சியத்தை அமைப்பதே தமது மேசியாக் கடமையாக உணர்ந்தார். அப்படி அமைப்பதற்காகவே அவர் தம் சீடர்களை நாடெங்கும் ஞானோபதேசம் செய்யுமாறு அனுப்பி வைத்தார். உலகத்தைக் கடவுள் நல்லதாகவே படைத்தார். ஆனால் அது கெட்டுப் போயேயிருக்கிறது என்று உணர்ந்து, கடவுள் காட்டும் நெறியில் நிற்பதே கடவுள் இராச்சிய அமைப்பு என்பதை இவர் உவமை மூலமாக விளக்கி, மக்களை அந்த இராச்சியத்துக்குள் வந்து சேரும்படி அழைத்தார். மா. வா — பா.ஜோ

இயேசு சங்கம் : இதை நிறுவினவர் இக்னேஷஸ் லயோலா (1491-1556) என்பவர். சமயச் சங்கங்களில் இதுவே மிகப் பெரியது. இக்னேஷஸ் காலத்திலேயே இச்சங்கத்திற்கானநிரந்தரவிதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இச்சங்கத்தின் அங்கத்தினர்களை ஜெசூட்டுகள் என்பது மரபு. இவர்கள் தலைமை யலுவலகம் ரோம் நகரத்தில் இருக்கிறது. இவர்கள் எவ்விதப் புகழுக்காகவும் அல்லாமல் சங்கத்தின் நோக்கங்களுக்காகவே பாடுபட வேண்டும். பாலஸ்தீனத்திலுள்ள முஸ்லிம்களைக் கிறிஸ்தவர்களாக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட இச்சங்கம் இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. கல்வித் துறையிலும், சமூகத் துறையிலும் சமுதாயத்திற்கு இவர்கள் பல நன்மைகளைச் செய்துள்ளனர். பெல்லார்மின், சுவாரஸ் முதலிய அறிஞர்கள் இச்சங்கத்தின் அங்கத்தினர்களாயிருந்தவர்கள். வீரமாமுனிவர் என்று பெயர் பூண்டு தமிழில் காப்பியம் இயற்றிய பெஸ்கி பாதிரியாரும் இச்சங்கத்தைச் சார்ந்தவரே. இவர்கள் பிரமசரியம் முதலிய கடினமான வாழ்க்கை முறைகளைக் கடைப் பிடிப்பவர்கள்.

இர்க்குட்ஸ்க் (Irkutsk) சோவியத்தைச் சேர்ந்த சைபீரியாவிலுள்ள அழகு மிகுந்த நகரம். சீனாவுடன் தேயிலை வியாபாரம் செய்யும் பெரிய வியாபாரத் தலங்களுள் ஒன்று. மக்: 2,43,000 (1939).

இர்விங், வாஷிங்க்டன் (1783-1859) முதன் முதலாக அமெரிக்காவுக்கு வெளியே புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர். பல கதைகளும் வாழ்க்கை வரலாறுகளும் கூட இயற்றியுள்ளார். ரிப்வான் வின்கிள் கதையடங்கிய ஸ்கெச் புக் என்னும் நூல் புகழ் பெற்றது. இவரது நகைச் சுவை மிக்க நூல்களை மக்கள் இன்றும் படித்து இன்புறுகின்றனர்.

இர்வின் பிரபு 1926-1931 வரை இந்தியாவின் வைசிராயாக இருந்தார். இவர் உயர்குடிப் பிறந்தவர்; அறிஞர்; உண்மையான மதப்பற்றுடையவர் ; நல்ல அரசியல் நிபுணர். இவர் பதவியேற்ற முதலாண்டில் நாட்டில் இந்து-முஸ்லிம் சச்சரவு மும்முரமாயிருந்தது. இவர் நாட்டில் அமைதியை நிறுவ முயன்றார். இவர் காலத்தில் அரசியல் சீர்திருத்தம் பற்றி ஆராய, சர் ஜான் சைமன் தலைமையில் ஒரு கமிஷன் அனுப்பப்பட்டது. ஆனால் இந்தியர் ஒருவரும் இக்குழுவில் இடம் பெறாததால் இந்திய அரசியல் கட்சிகள் இக்கமிஷனோடு ஒத்துழைக்கவில்லை. காந்தியடிகளின் தலைமையில் சட்டமறுப்பு இயக்கம் உருவாயிற்று. காங்கிரசு உப்புச் சத்தியாக்கிரகம் தொடங்கவே, காந்தியடிகள் உட்படப் பல தலைவர்கள் சிறையிலடைக்கப் பட்டனர்.

இர்வின் பிரபுவின் கருத்துக்கிணங்கி, பிரிட்டிஷ் அரசாங்கம் 1930 நவம்பரில் ஒரு வட்டமேஜை மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தது. இவரது பெரு முயற்சியால் காந்தி-இர்வின் ஒப்பந்தம் 1931-ல் ஏற்பட்டது. காந்தியும் வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொள்ள லண்டனுக்குச் சென்றார். இர்வின் வைசிராயாக இருந்த காலத்தில் மக்களின் சமுதாய, பொருளாதார முன்னேற்றங்களுக்காகப் பல சட்டங்கள் ஏற்பட்டன. 1930-ல் பாலிய விவாகத் தடைச் சட்டம் அமலுக்கு வந்தது. விவசாய முன்னேற்றத்திற்காக 1926-ல் அமைக்கப்பெற்ற லின்லித்கோ கமிஷனின் அறிக்கை 2 ஆண்டில் வெளிவந்தது. இந்தியப் படையில் இந்தியர்களுக்கு வசதியளிப்பதைப்பற்றி 1927-ல் ஸ்கீன் கமிட்டி சில திட்டங்களை வெளியிட்டது. 1929-ல் பாங்குத் தொழில் பரிசீலனைக் கமிஷன் நியமனமாயிற்று. சுதேச மன்னர்களுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குமுள்ள தொடர்பை ஆராயப் பட்லர் கமிட்டியும், தொழிலாளர் பிரச்சினையை ஆராய விட்லி கமிஷனும் நியமிக்கப்-