பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரகசியச் சங்கங்கள்

35

இரகுநாத நாயக்கர்

பட்டன. தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களின் நிலையை உயர்த்தும் பொருட்டுத் தூதுகோஷ்டிகள் அனுப்பப்பட்டன. கே. க.

இரகசியச் சங்கங்கள் (Secret Societies) : ஒரு சங்கத்தின் உறுப்பினர்களின் பெயர்களும், அதில் பதவி வகிப்போரது பெயர்களும் இரகசியமாகப் பாதுகாக்கப்படும் சங்கங்கள் இரகசியச் சங்கங்களெனப்படும். சமூகத் தொண்டையும் சமய வளர்ச்சியையும் நோக்கமாகக்கொண்ட சில சங்கங்களைத் தவிர மற்ற இரகசியச் சங்கங்கள் சட்ட விரோதமானவை. ஏற்கெனவே உறுப்பினர்களாக உள்ளவர்களது சிபார்சு இல்லாமல் ஒருவர் இவற்றில் சேர முடியாது. அவ்வாறு சேருமுன்னர் அவர் இரகசியப் பிரமாணங்களை எடுத்துக்கொண்டு, குறிப்பிட்ட சில இரகசியச் சடங்குகளுக்குஆளாகவேண்டும். தருமம், பொதுநலம் ஆகிய நல்ல நோக்கங்களையுடைய சங்கங்களுக்குப் பிரீ மேசன் சங்கம் (த.க.) ஓர் உதாரணமாகும். பல இரகசியச் சங்கங்கள் அரசியல் நோக்கங்களுடையவை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இத்தாலியில் நிறுவப்பெற்ற கார்பானாரி (Carbonari) என்ற இரகசியச் சங்கம் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்ப்பதைத் தன் நோக்கமாகக் கொண்டிருந்தது. எவ்வகை அரசையும் எதிர்ப்பதையே தனது நோக்கமாகக்கொண்ட மாபியா (Mafia) என்ற இரகசியச் சங்கம் இத்தாலியில் இந்த நூற்றாண்டுவரை இருந்தது. வங்காளத்தில் தோன்றிய பலாத்கார இயக்கத்தின்போது அதில் ஈடுபட்ட இளைஞர் பல இரகசியச் சங்கங்களை அமைத்தனர். அமெரிக்காவிலுள்ள கூ கிளக்ஸ் கிளான் (த.க.) என்னும் இரகசியச் சங்கமும் அரசியல் நோக்கமுள்ளது.

அமெரிக்காவிலுள்ள கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் மாணவர்களும் ஆசிரியரும் பல இரகசியச் சங்கங்களை அமைத்துக் கொள்கிறார்கள். இளைஞர்களது சங்கம் 'சகோதரர் குழு' என்றும், பெண்களது சங்கம் 'சகோதரிகள் குழு' என்றும் பெயருள்ளவை. இவை இலக்கிய வளர்ச்சியையும், சமூக ஒற்றுமையையும், கூடி வாழ்தலையும் தம் நோக்கமாகக் கொண்டவை.

இரகுநாத நாயக்கர் (ஆ. கா. 1614-1639) தஞ்சை நாயக்கர் வமிசத்தைச் சேர்ந்த அரசர்களில் மிக்க புகழ் பெற்றவர். இவர் அச்சுதப்ப நாயக்கரின் புதல்வர். 1589-ல் கோல்கொண்டா சுல்தான் விஜயநகர இராச்சியத்தின் வடபாகத்தைத் தாக்கினார். விஜயநகரச் சக்கரவர்த்திக்கு உதவியாக இரகுநாத நாயக்கர் சென்று, பெனுகொண்டாவில் கோல்கொண்டா முஸ்லிம் படையைத் தோற்கடித்தார். 1600லிருந்து தகப்பனாரோடு சேர்ந்து தஞ்சை ஆட்சியை இவர் நடத்தி யிருக்கவேண்டும். 1614-ல் அச்சுதப்ப நாயக்கர் அரச பதவியிலிருந்து விலகியதும் இரகுநாதருக்கு முடிசூட்டப்பட்டது.

சக்கரவர்த்தி வேங்கடபதி 1614-ல் இறக்கவே, அவரால் வாரிசாக நியமிக்கப்பட்ட II -ம் ஸ்ரீரங்கதேவராயர் என்ற சிக்கதேவராயர் பட்டம் பெற்றார். ஆனால் காலஞ்சென்ற வேங்கடபதிராயரின் மனைவியான பாயம்மாள் ஒரு போலிக் குழந்தையை நிறுத்திப் பட்டத்துக்குப் போட்டியிட்டாள். சிக்கதேவரை யாசம நாயக்கரும், போலி வாதி கட்சியை ஜக்கராயரும் ஆதரித்தனர்.சிக்கதேவரையும், அவர் குடும்பத்தினரையும் கைது செய்து ஜக்கராயர் கொலை செய்தார். சிக்கதேவரின் இரண்டாம் மகனான ராமன் மாத்திரம் தப்பினான். இக்குழந்தையைப் பாதுகாத்து வைத்துக் கொண்டு, தென்னாடு சென்று, தஞ்சை நாயக்கரின் உதவியைப்பெற யாசம நாயக்கர் முயன்றார். இதற்குள் ஜக்கராயரும் மற்றத் தென்னாட்டு நாயக்க மன்னர்களின் உதவியைப்பெறத் திருவரங்கம் வந்து சேர்ந்தார். எதிரியை ஆதரித்த தஞ்சை மன்னரைத் துன்புறுத்தும் பொருட்டுக் காவேரி அணையை (கல்லணையை) இடித்து நாசம் செய்ய ஐக்கராயர் முனைந்தார்.

இந்த நிலைமையில் இரகுநாதர் பெரும்படையோடு கும்பகோணம் சென்று, யாசம நாயக்கரைச் சந்தித்துக் குழந்தை ராமருக்கு கருநாடகச் சக்கவர்த்தியாக முடிசூட்டினார். ஜக்கராயரை அடக்குவதற்கு முன் இரகுநாதர் மற்ற முக்கிய விரோதிகளாகத் தேவிக்கோட்டை சோழகரையும், யாழ்ப்பாணத்துப் போர்ச்சுக்கேசியர்களையும் களைந்து ஒழிக்க முயன்றார்.

சோழகர் கொள்ளிட நதியின் முகத்துவாரத்திலுள்ள தீவில் வசித்தவரும், செஞ்சி நாயக்கருக்கு உட்பட்டவருமான குறுநிலமன்னர்; அவருடன் இரகுநாதர் கடும்போர் புரிந்து, அவரையும் அவருடைய குடும்பத்தினரையும் சிறையில் இட்டார்.

1615-ல் யாழ்ப்பாணத்து அரசர் எதிர்மன்ன சிங்கர் இறக்குமுன் தம் மூன்று வயது குழந்தை சின்னமீகாப்பிள்ளை ஆராய்ச்சிக்கு முடி சூட்டித் தம்முடைய தம்பி அரசகேசரி பண்டாரம் புரவலராக (ரீஜன்டாக) ஆட்சி செய்து வரவேண்டுமென்று உயில் எழுதி வைத்திருந்தார். ஆனால் அரச குடும்பத்தைச் சேர்ந்த சங்கிலிகுமாரர் புரவலரைக் கொலை செய்துவிட்டு, வலிந்து அதிகாரத்தைப் பெற்றார். ஆனால் யாழ்ப்பாணத்து மக்களும், போர்ச்சுக்கேசியர்களும் சங்கிலிகுமாரருக்கு எதிராகக் கலகம் செய்தனர். சங்கிலிகுமாரர் துறைமுகமான ஊர்த்துறைக்குத் தப்பி ஓடினார். அவரைச் சார்ந்த மகளிர் தஞ்சை நாயக்கரிடம் தஞ்சம் புகுந்தனர். இரகுநாதர் சங்கிலிகுமாரரை மறுபடியும் பதவியில் அமர்த்தினார். இவ்வெற்றிக்குப் பிறகு இரகுநாதர் கொப்பூரி ஜக்கராயரை அடக்கத் தண்டெடுத்துச் சென்றார். ஐக்கராயருக்கு உதவியாக மதுரை முத்துவீரப்ப நாயக்கரும், செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கரும், கல்லணைக்கு அருகிலுள்ள தோப்பூரில் (தோகூர்) தங்கியிருந்தனர். காவேரி அணையை இடித்துத் தஞ்சைக்கு நாசம் விளைவிக்க முயன்றனர். இரகுநாதர் ஒரு பெரும் படையோடு பழமானேரி வழியாகத் தோப்பூருக்குச் சென்று, கடும்போர் புரிந்து, எதிரிகளை முறியடித்தார்; ஜக்கராயர் உயிர் இழந்தார்; மதுரை செஞ்சி நாயக்கர்கள் உயிர் தப்பி ஓடினார்கள்; ராமராயர் கருநாடகச் சக்கரவர்த்தியாக முடி சூட்டப் பெற்றார்; ஜயஸ்தம்பம் ஒன்று அங்கே நிறுவப் பெற்றது; இரகுநாதரின் புகழ் ஓங்கியது. . இவ்வெற்றிக்குப் பிறகும் செஞ்சி நாயக்கர் கலகம் செய்தார். அவருடைய படையை மறுபடியும் தஞ்சைப் படை புவனகிரிக்கு அருகில் தோற்கடித்தது.

1616-ல் சங்கிலிகுமாரர் யாழ்ப்பாண மன்னராக அமர்த்தப்பட்டபோதிலும் அந்நாட்டில் அமைதி இல்லை. தஞ்சை உதவியைப் பெரிதாகக் கொண்டு போர்ச்சுக்கேசியருக்குக் கப்பம் கட்டுவதை இவர் நிறுத்தினார். அவர்களுக்கு மாறாகக் கண்டி அரசருக்கும் உதவி புரிந்தார். ஆகையால் போர்ச்சுக்கேசியர் சங்கிலி குமாரர்மீது போர் தொடங்கினர்.

இரகுநாதர் ஒரு வள்ளல். சைவ, வைஷ்ணவ ஆலயங்களுக்குப் பல நிவந்தங்கள் ஏற்படுத்தினார். கும்பகோணத்தில் இராமசுவாமி கோயிலைக் கட்டினார். இராமேசுவரத்திலும் திருவரங்கத்திலும் இராமருக்குக்