பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரகுநாதராவ்

36

இரட்சணிய யாத்திரிகம்

கோயில் கட்டினார். கும்பேசுவரர் (கும்பகோணேசுவரர்) கோயிலின் கோபுரத்தைக் கட்டினார்.

இரகுநாதர் இசையில் அதிக ஊக்கம் உடையவர்; வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர்; வடமொழியிலும் தெலுங்கிலும் காப்பியங்கள் எழுதியுள்ளார்; பாக்கள் இயற்றுவதில் வல்லவர்; பாரிஜாதாப ஹரணம், வால்மீகி சரிதம், சங்கீத சுதா, பாரத சுதா என்னும் வடமொழி நூல்களும் இவர் எழுதியுள்ளார். சாகித்திய இரத்தினாகரம் இயற்றியவரான யஜ்ஞ நாராயண தீட்சிதர், வேங்கடபதி, ராஜ சூடாமணி தீட்சிதர், பாஸ்கர தீட்சிதர், குமார தாத்தாசாரியர் என்பவர்கள் அக்காலத்தில் வாழ்ந்த பிரபல வித்துவான்கள். பெண் கவிகளில் முக்கியமானவர்கள் ராமபத்திராம் பாள், மதுராவாணி என்பவர்கள். எஸ். ஆர். பா.

இரகுநாதராவ் (1734-1784): இவருக்கு ரகோபா என்றும் தாதாசாகிபு என்றும் பெயர்கள் உண்டு. இவர் மராட்டியப் பேஷ்வா பாலாஜிராவின் தம்பி. இவர் 1752-ல் குஜராத்தின்மீது படையெடுத்து, அகமதாபாத்தை 1753-ல் மொகலாயரிடமிருந்து கைப்பற்றினார். வடமேற்கு இந்தியா சென்று 1758-ல் லாகூரைக் கைப்பற்றினார். இவருடைய இத்தகைய செயல்களே 1761-ல் நடந்த பானிப்பட்டுப் போருக்கு அடிகோலின. பானிப்பட்டுத் தோல்வியின் காரணமாகப் பேஷ்வா பாலாஜிராவ் 1761-ல் இறந்ததும் அவருடைய 15 வயது மகன் மாதவராவ் பேஷ்வா ஆனார். அதனால் இரகுநாத ராவ் பேஷ்வாவின் பிரதிநிதியாக இருந்து அரசியல் அலுவலை நடத்தியதுடன் தாமும் பேஷ்வா ஆகவேண்டும் என்று விரும்பினார். இதை அறிந்து மாதவராவ் 1762-ல் தாமே அதிகாரத்தை மேற்கொண்டு, தம்முடைய காரியதரிசி நானா பர்னாவிஸைக் கொண்டு இரகுநாதராவை 1768-ல் நாசிக் சிறையில் வைத்தார். இரகுநாத ராவின் மனைவி ஆகந்திபாயின் சூழ்ச்சியால் மாதவராவ் கொல்லப்பட்டார். அதனால் இரகுநாதராவுக்குப் பேஷ்வா ஆகும் வாய்ப்பு உண்டாயிற்று. ஆயினும் பலமான பல எதிர்ப்புக்கள் எழவே, இவர் ஆங்கிலேயருடைய உதவியை நாடினார். ஆனால் 1775-ல் இவர் பம்பாய் கவர்னருடன் செய்துகொண்ட சூரத்து உடன்படிக்கையை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் மேலதிகாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே இறுதியில் இவர் 1776-ல் உண்டான புரந்தர் உடன்படிக்கையின்படி, அகமத்நகர் மாவட்டத்திலுள்ள கோபர்கான் என்னுமிடத்தில், மாதம் 25 ஆயிரம் ரூபாய் சீவனாமிசம் வாங்கிக்கொண்டு வாழ்ந்து வரும்படியாயிற்று. இவர் 1784-ல் இறந்தார். மராட்டிய வரலாற்றில் இவர் மிகக் கெட்டவர் என்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். இவர் இயற்கையில் நல்ல குணம் படைத்தவராயிருந்தும் தம் பேரன்புக்கும் பேரச்சத்துக்கும் பாத்திரமான மனைவி ஆனந்திபாயின் சொற் கேட்டதாலேயே அழிவுற்றார். தே. வெ. ம.

இரகுவமிசம் என்பது சூரிய குல அரசனான இரகு என்பவனுடைய மரபு என்று பொருள்படும். இராமன் இரகுவமிசத்தவனாதலின் அவனுடைய வமிச பரம்பரையையும் வாழ்க்கை வரலாற்றையும் பற்றிக் காளிதாசர் இரகுவமிசம் என்று பெயரிட்டுப் புகழ் வாய்ந்த காவியம் ஒன்று எழுதியுளர்.

இரட்சணிய சேனை (The Salvation Army) இங்கிலாந்தில் சென்ற நூற்றாண்டில் மெதடிஸ்ட் பாதிரியாயிருந்த வில்லியம் பூத் என்பவரால் 1865-ல் கிறிஸ்தவ மிஷன் என்ற பெயரால் அமைக்கப்பெற்று, 1878-ல் இரட்சணிய சேனை என்று பெயரிடப்பெற்ற ஒரு கிறிஸ்தவ மத இயக்கமாகும். சேனை என்ற பெயருடையதாயிருப்பதால் அதன் தலைவர்களை ஜெனரல் என்றும், அது கூடும் இடத்தைப் பாளையம் (Barracks) என்றும் கூறுவர். மதப்பற்றில்லாத மக்கள் உள்ளத்தைக் கவர்வதற்காக இச்சேனையினர் போர்வீரர் போல உடுப்பணிந்து, கொடி பறக்கவிட்டுக்கொண்டு, பாண்டு வாத்தியத்துடன் பவனி வருவர். இச்சேனை 89 நாடுகளில் அமைக்கப் பெற்றுள்ளது. கிறிஸ்தவ வேதத்தைப் பரப்புவதற்காக 123 பத்திரிகைகளை 81 மொழிகளில் இவர்கள் வெளியிடுகிறார்கள். நெறி தவறிய பெண்கள் விடுதிகள், மருத்துவச்சாலைகள், பாடசாலைகள் போன்ற பல சமூகச் சேவை நிலையங்களை நடத்து கின்றனர். இச்சேனை 1882-ல் இந்தியாவில் டக்கர் என்பவர் தலைமையில் வேலைசெய்யத் தொடங்கிற்று; இங்குவந்து தொண்டு செய்யும் ஐரோப்பியர் இந்தியரின் உணவு, உடை, பெயர், வழக்கங்களை மேற்கொண்டுள்ளனர். இந்தியாவில் இவர்கள் 22 மருத்துவச்சாலைகளும் பள்ளிகளும் ஏற்படுத்தியிருக்கின்றனர். இவர்களுடைய பத்திரிகையின் பெயர் போர்க்குரல் (War cry) என்பதாகும்.

இரட்சணிய யாத்திரிகம் என்பது கிருஷ்ண பிள்ளை (த.க.) என்னும் புலவர் இயற்றிய நூல். இதற்கு முதல்நூல் உலகப் பிரசித்திபெற்ற ஜான் பனியன் என்ற ஆங்கிலப் பேராசிரியர் இயற்றிய பரதேசியின் மோட்சப் பிரயாணம் (Pilgrim's Progress) என்பதே. தமிழிலக்கிய நூல்கள் பிறமொழி நூல்களை முதனூலாகக் கொண்டிருப்பினும், முதனூல் உரைகளையும் கருத்துக்களையும் மேற்கொண்டு தமிழ் மக்களுக்கும் மரபுக்குமேற்ப அவற்றைப் புகுத்துவதைக் கம்பராமாயணத்தில் காண்பதைப்போல் இரட்சணிய யாத்திரிகத்திலும் காணலாம். கம்பன் கண்டது தமிழ்நாட்டு இராமன்: கிருஷ்ண பிள்ளை கண்டது தமிழ்நாட்டுக் கிறிஸ்து.

இந்நூல் கதையை முக்கியமாகக் கருதாமல், இரடசணிய மார்க்கத்துக்குரிய சத்தியத்தையே விளக்குவது என்ற முறையில் அமைந்தது.

இதன் எல்லை ஒரு நாட்டுக்கு, ஒரு மொழிக்கு, ஒரு காலத்துக்கு மட்டுமல்லாது உலக முழுவதுக்கும் பல மொழிகட்கும் முக்காலங்கட்கும் உரியதென்றும், இவ்வுலக காதை எண் திசை புகழ நிற்கும் என்றும் துணிந்துள்ளார் கவிஞர்.

இது "வெற்று நேரப் போக்காய்ப் புகல் விநோதமுமன்று, சிற்றின்பத் திறம் திருத்திய காதையுமன்றுமற்று, இது ஆத்தும ரட்சணை வழங்குமோர் மருந்து" என்பது நுதலிய பொருளும் நூற்பயனுமாகும்.

இதிலுள்ள கவிகளின் தொகை 3,800. அவற்றுள் யமகம், திரிபு, சிலேடை, மடக்கு முதலிய கவிகள் 21. இனிய எளிய இயற்சொற்கள், திரி சொற்கள், அக்கால வழக்கை யொட்டி இடையிடை வட சொற்கள் கொண்டு செய்யுட்கள் இயற்றப்பட்டுள்ளன.

இந்நூற் பொருள் தொடர்ந்து செல்வதாகலின் 'பொருள் தொடர்நிலைச் செய்யுள்' எனவும், உரைச் செய்யுளும் இசைப்பாட்டும் இடையிடை விரவப் பெற்றதாகலின், சிலப்பதிகாரம்போல் 'உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்' எனவும் கூறப்பெறும். இப்பாடல்கள், தேவாரம், திவ்வியப்பிரபந்தம் போன்ற பக்தி நூல்களில் உள்ள பாடல்கள் போன்று, பண்டை இசைவளங் காண்பார்க்கு இன்ப நலம் இசைப்பனவாய், இயற்கைநலம் விழைவார்க்கு இனிமை பயப்பனவாய்,