பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரட்டை

37

இரட்டைப் பிள்ளைகள்

இறைவன் அருட்செயல்களை அடியாருள்ளம் நெக்குருகிப் பாடக்கூடியனவாய் அமைந்துள்ளன.

இந்நூலைத் தண்டியலங்கார இலக்கண முறையிலும், கம்பராமாயண இலக்கிய வழியிலும் ஓர் அரும்பெருங் காப்பியமாகவே ஆக்கியுள்ளார் ஆசிரியர். 'வாழ்த்து, வணக்கம், வருபொருள்' என்ற முறையில், கிருஷ்ண பிள்ளை தமது சிறப்புப் பாயிரத்தில் கடவுள் வாழ்த்தும் எடுத்துக்கொண்ட பொருளும் சொன்னார். 'நாற்பொருள் பயக்கும் நடை நெறித்தாகி' என்பதைத் 'தீவினைச் சலதி வீழ்ந்தழியுஞ் சீவரை விவிலாக் கதிக் கரை வீடு சேர்க்குமோர்...... தனி மரக்கலம்' என்று காட்டினார். பாவத்திற் படிந்த உயிர் கவலையுற்று வாடி, ஆன்ம இரட்சகராகிய கிறிஸ்து நாதரது அருளால் நித்திய ஜீவனைப் பெற்றுப் பேரானந்தம் அடையும் தன்மையை விரித்துரைக்கும் காவியமே இரட்சணிய யாத்திரிகம். எனவே, கிறிஸ்து நாதரே அக்காவியத்தின் தன்னிகரில்லாத் தலைவர்.

கிறிஸ்து நாதர் இம்மாநிலத்தில் நிறைந்திருந்த தீமையை மகத்தான தியாகத்தின் ஆற்றலால் துடைத்தருளினார். ஆகவே, இரட்சணிய யாத்திரிகம் தன்னுயிர் கொடுத்து மன்னுயிரை மீட்டவரின் செயலை அறிவுறுத்தும் அருங்காவியமாகும். சி.வி. ச.

இரட்டை (Couple): சமமாகவும் எதிராகவும் உள்ள இரு இணைவிசைகள் ஒரு பொருளின் மேல் தொழிற்பட்டால் அவ்விரண்டுக்கும் பயன்விசையென எதுவும் இருக்க இயலாது. இத்தகைய இரு இணை விசைகள் ஓர் இரட்டையாகும். இரட்டையொன்று பொருளின் மேல் தொழிற்படுவதால் அது இடைவிடாது

இரட்டை

சுற்றும். இரட்டையின் இருவிசைகளுக்கிடையேயுள்ள நேர் குத்துத் தொலைவு, அவற்றிலொன்றின் அளவு ஆகிய இரண்டின் பெருக்குத் தொகை அதன் சுழல் திறனாகும். இரட்டை ஒரு பொருளின்மேல் தொழிற்படும் இடம் இதன் விளைவைப் பாதிக்காது.

இரட்டை உலோக நாணய முறை: ஒரு நாட்டில் ஒரே சமயத்தில் தங்கமும் வெள்ளியும் நாணயமாகச் செய்யப்படுவதற்குப் பயன்படுமாயின், அங்கு இரட்டை உலோக நாணயமுறை நடைமுறையில் இருப்பதாகக் கொள்ளலாம். அதாவது ஒரு நாணயச்சாலையில் தங்க நாணயமும் வெள்ளி நாணயமும் அடிக்கப் பெற்று, அவ்விரண்டிற்கும் ஒரு மதிப்பு விகிதமும் நிருணயிக்கப்பட்டுக் கடன் கொடுக்கவேண்டியவர்கள் எந்த நாணயமூலமாகவேனும் தங்கள் கடனைத் தீர்க்கலாம் என்பதும் சட்டமாயின், இரட்டை உலோகநாணய முறை அமலிலிருப்பதாகப் பொருள். பார்க்க: ஒற்றை உலோக நாணய முறை; பணமும் பாங்குத் தொழிலும்.

இரட்டைப் பிள்ளைகள் : ஒரு மானிடத் தாய்க்கு ஒரு பேற்றில் சாதாரணமாக ஒரு குழந்தை பிறக்கும். இரண்டு குழந்தைகள் பிறக்குமானால் அவை இரட்டைப் பிள்ளைகள் எனப்படும். பாலூட்டிகளில் முக்கியமாக நாய், பூனை, முயல், பன்றி போன்ற பெரும்பாலான சிறு பிராணிகள் பல குட்டிகள் போடும். பூனைச்சாதிக்கு நெருங்கிய புலி இரண்டு முதல் ஆறு குட்டிகளும், சிங்கம் இரண்டு, மூன்று, நான்கு குட்டிகளும் போடும். அமெரிக்காவில் வாழும் ஒப்பாசம் என்னும் பிராணி ஓர் ஈற்றில் பதினெட்டுக் குட்டிகள் போடும். பசு, குதிரை, ஒட்டகம், யானை போன்ற பெரிய விலங்குகள் சாதாரணமாக ஒரு தடவைக்கு ஒரு குட்டி போடும். எப்போதாவது இரண்டு குட்டிகளும் மிகவும் அருமையாக மூன்று நான்கு குட்டிகளும் போடுவதுண்டு. ஓரீற்றில் பல குட்டிபோடும் விலங்குகளுக்கெல்லாம் ஒரு தடவையில் பல அண்டங்கள் முதிர்ச்சி யடைந்து, கருவுற்று, ஒவ்வொரு கருவுற்ற அண்டமும் ஒருகுட்டியாக வளர்கின்றது. ஆர்மடில்லோ என்னும் ஒருவகைப் பிராணிக்கு ஒரே அண்டம் கருவுற்று, அதிலிருந்து வளரும் கருவானது இரண்டாகப் பிரிகிறது. பிறகு ஒவ்வொரு பிரிவும் இரண்டாகிறது. இப்படி ஒரே அண்டத்திலிருந்து நான்கு குட்டிகள் உண்டாகின்றன.

மனித இனத்தில் இரட்டைப் பிள்ளைகள் ஒரே அண்டத்திலிருந்து உண்டாவன என்றும், இரண்டு அண்டங்களிலிருந்து உண்டாவன என்றும் இரு வகைப்படும். சாதாரணமாக ஒரு தாய்க்கு மாதந்தோறும் ஒரே அண்டம் முதிர்ச்சியுறும். அது கருவுறுமானால், பிறகு குழந்தையாக வளரும். கருவுற்ற அண்டம் பன்முறை பிளவுபட்டு அணுத் தொகுதியாக இருக்கின்ற தொடக்கத்திலேயே ஏதோ காரணத்தால் இரண்டு அணுத் தொகுதிகளாகப் பிரிந்து, ஒவ்வோரணுத் தொகுதியும் ஒரு குழந்தையாக உருவாகும். இப்படிப் பிறக்கும் இரட்டைப்பிள்ளைகள் ஓரண்ட (Uniovular) இரட்டைகள் அல்லது ஒற்றுமை இரட்டைகள் (Identical twins) எனப்படும். மிக்க ஆரம்பத்திலே அணுத்தொகுதி உருவாவதற்கு முன்பே பிரிவதால் உண்டான ஒற்றுமை யிரட்டைகள் பல விவரங்களில் முழுதும் ஒத்திருக்கும். அவ்வாறின்றிச் சற்றுத் தாழ்த்து, அணுத்தொகுதி ஓரளவிற்கு உருவாகி, வலம் இடம் என்ற வேறுபாடு தோன்றிய பிறகு அந்த அணுத்தொகுதி பிரிவதால் உண்டாகும் இரட்டைப் பிள்ளைகளை எளிதில் பிரித்தறிந்துகொள்ளலாம். அவை ஒன்றற்கொன்று பிம்பமும், கண்ணாடியில் தோன்றும் அதன் பிரதிபிம்பமும் போல இருக்கும். ஒரே அண் டத்திலிருந்து உண்டாகும் இரட்டைப் பிள்ளைகள் இரண்டும் ஒரே பாலாக இருக்கும். அதாவது இரண்டும் ஆணாக இருக்கும்; அல்லது இரண்டும் பெண்ணாக இருக்கும்.

இரண்டு வெவ்வேறு அண்டங்கள் ஒரே சமயத்தில் முதிர்ச்சியுற்று வந்து, கருவுற்று இரண்டு குழந்தைக்ளாக வளர்வன ஈரண்ட (Biovular) அல்லது உடன்பிறப் பிரட்டைகள் (Fraternal twins) எனப்படும். இவை இரண்டும் ஒரே பாலாகவும் இருக்கலாம்; ஒன்று ஆணாகவும் ஒன்று பெண்ணாகவும் இருக்கலாம். ஒருபால் இருபால் இரட்டைகளின் விகிதம் சுமார் பாதிப் பாதியாக இருக்கும். உடன்பிறப் பிரட்டைகள் ஒரே பாலினவானாலும் அவற்றை வேறு பிரித்து அறிந்து கொள்ளுவது எளிது. ஒரே பெற்றோருக்குத் தனித்தனியாகப் பிறக்கும் பிள்ளைகளிடத்தில் எவ்வளவு ஒற்றுமை காணுமோ அவ்வளவேதான் இந்த உடன்பிறப் பிரட்டைப் பிள்ளைகளிடமும் காணும். இரட்டைப் பிள்ளைகள் உண்டாவதுபோல மூன்று நான்கு, ஐந்து பிள்ளைகளும் உண்டாவதுண்டு.