பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரட்டைப் பிள்ளைகள்

38

இரட்டைப் பிள்ளைகள்

ஆறு பிள்ளைகளும் பிறந்திருக்கின்றன. ஆறுக்கு மேற்பட்டுப் பிறந்திருப்பதாகத் தெரியவில்லை, மூன்று, நான்கு, ஐந்து குழந்தைகள் ஒரே அண்டத்திலிருந்தும் உண்டாகியிருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டு, மூன்று, நான்கு,ஐந்து அண்டங்களிலிருந்தும் உண்டாகலாம்.

ஒரே அண்டத்திலிருந்து உண்டாகும் இரட்டைகளை அறிவதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று கருவை மூடியிருக்கும் உறையைக்கொண்டு அறிவது. மற்றொன்று உரு முதலியவற்றின் ஒற்றுமையைக் கொண்டு அறிவது. இரண்டு குழவிகளும் ஒரே பனிக்குடத்துக்குள் இருக்குமானால் அவை ஒரே அண்டத்திலிருந்து உண்டானவை. வெவ்வேறு பனிக் குடத்துக்குள்ளிருக்குமானால் தனித்தனி அண்டங்களிலிருது உண்டானவை. எனினும் சில சமயத்தில் ஒரே அண்டத்திலிருந்து உண்டான குழந்தை ஒவ்வொன்றும் வெவ்வேறு பனிக்குடத்தில் இருப்பதுமுண்டு. ஒற்றுமை வழிப்படிப்பார்ப்போமானால், இதுவோ அதுவோ என்று மயங்கும் அளவுக்கு இரட்டைப் பிள்ளைகள் ஒத்திருக்குமானால் அவை ஒரே அண்டத்திலிருந்து உண்டானவை. இரத்தக்குழு, கண்ணின் நிறம், விரல் நுனியிலுள்ள ரேகைகள் முதலியவற்றாலும் ஒற்றுமை இரட்டைகளை அறிந்துகொள்ளலாம். ஒரு பேற்றில் ஒரு குழந்தை பெறுவதற்கு ஏற்றவாறு மானிடத் தாயின் உறுப்புக்கள் அமைந்திருக்கின்றன. ஒரு தடவையில் ஒன்றுக்கு மேல் குழந்தைகள் உண்டாகுமானால் அந்தக் குழந்தைகள் உயிரோடு இருப்பதற்கு இடர்ப்பாடுகள் அதிகம் உண்டு. இரண்டு குழந்தைகள் இருந்தால் கருப்பையில் நெருக்கம் உண்டாகும்; காலம் நிரம்புவதற்கு முன்பே குழந்தைகள் பிறந்துவிடும். உயிரோடு பிறந்தாலும் அவற்றிற்கெல்லாம் செம்மையாகப் போதிய அளவு பால் முதலிய உணவு கொடுப்பதும். அவற்றைச் சரியாகப் பேணுவதும் மிகவும் கடினம். மூன்று, நான்கு, ஐந்து உண்டானால் தொந்தரவு அத்துணை அதிகம். அவை பிழைப்பதும் அருமை. இவை போன்ற காரணங்களால் இக்குழந்தைகள் தவறிவிடுகின்றன. மருத்துவக் கலை பெரிதும் முன்னேறியுள்ள இக்காலத்தில், இந்தமாதிரி குழந்தைகளை வளர்ப்பது முன்னிலும் எளிதாக இருக்கின்றது. 1934-ல் கானடாவில் பிறந்த டயான் குழந்தைகள் ஐந்தும் நன்றாக வளர்க்கப்பட்டு வருகின்றன.

இரட்டைக் குழந்தைகள்

1. இரண்டு அண்டங்கள் கருவுறுவதால் உண்டாகும் இரட்டைப் பிள்ளைகள் தனித்தனிப் பைக்குள் இருக்கின்றன.

2. ஒரே அண்டத்திலிருந்து வளரும் இரட்டைப் பிள்ளைகள் ஒரே பைக்குள் இருக்கின்றன.

சில சமயங்களில் ஒரே அண்டத்திலிருந்து உண்டான இரட்டைகள் வெவ்வேறாகாமல் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு பிறக்கின்றன. இம்மாதிரி பிறந்தவை சீயதேசத்தில் பேர்பெற்றவை இருந்தன ஆதலால் இத்தகைய ஒட்டுப் பிறவிகளைச் சீயத்து இரட்டைகள் (Siamese twins) என்பார்கள். இவற்றில் முதுகெலும்புகூட இரண்டுக்கும் ஒன்றாக இருக்கலாம்.

இரட்டைப் பிள்ளைப்பேறு, 86. 87 தடவைக்கு ஒன்றாக, அதாவது 1'15 சதவீதம் நிகழ்கின்றது. மானிட இனங்கள்தோறும், நாடுகள்தோறும் இந்தச் சதவீதம் சிறிது மாறுகின்றதெனத் தெரிகிறது. வட ஐரோப்பியரிடையே இது மிகுதியாக இருக்கிறது. மங்கோலிய இனங்களிலே மிகக்குறைவு. பெல்ஜியத்தில் அதிகம். ஜப்பானில் குறைவு. மூன்று பிள்ளைப்பேறு 86 X 86 -7.396 பேறுகளுக்கு ஒன்றாகவும், நான்கு பிள்ளைப்பேறு 86 × 86 × 86 = 6.36.056 பேறுகளுக்கு ஒன்றாகவும் நிகழ்கின்றன. அதாவது எண்பத்தாறு ஒற்றைப் பிள்ளைப் பேற்றுக்கு ஒன்று இரட்டைப் பேறாகவும், எண்பத்தாறு இரட்டைப் பிள்ளைப் பேற்றுக்கு ஒன்று மூன்று பிள்ளைப்பேறாகவும். எண்பத்தாறு குழந்தைகள் மூன்று பிள்ளைப் பேற்றுக்கு ஒன்று நான்கு பிள்ளைப் பேறாகவும் உண்டாகின்றன. இந்த விசித்திரப் பிரமாணத்திற்குக் காரணம் தெரியாது.

இரட்டைப் பிள்ளைகளைப் பெறுவது சிறிது பாரம்பரியப் போக்காகக் காண்கிறது. எனினும் இது பாரம்பரியத் தன்மையாக வரும் முறையும் மாதிரியும் விளங்கவில்லை. இரட்டைப் பிள்ளைகளின் சுற்றத்தார்களுக்குள் இரட்டைப்பிள்ளை பெறுதல் மற்ற மக்களுக்குள் நிகழ்வதைவிட அதிகமாக உண்டாகின்றதெனச் சொல்லுகிறார்கள். மிகப் பழைய காலத்திலே மானிடத்தாய் ஒவ்வொரு கர்ப்பத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தையையே பெற்றாள்; பிறகு பரிணாமத்திலே மாறுபாடு உண்டாகி, ஒரு குழந்தை பெறுவதே வழக்கமாயிற்று; இப்போது இரண்டு மூன்று குழந்தைகளை ஒரு பேற்றில் பெறுவது பழைய பண்பைத் திரும்ப அடைவதாகும் என்று சிலர் கருதுகின்றனர்.

இரட்டைக் குழந்தைகளையும் ஒரே தடவையில் மூன்று, நான்கு, ஐந்து ஆகப் பிறந்த குழந்தைகளையும் பற்றி ஆராய்ச்சிகள் நடக்கின்றன. ஓர் உயிருக்குப் பரம்பரைக் காரணங்களால் உண்டாகும் விளைவுகள் எவை, அவை எவ்வளவின என்றும், சூழ்நிலைக் காரணங்களால் உண்டாவன எவை, அவை எவ்வளவின என்றும் அறிவதற்கு இவ்வாராய்ச்சிகள் பயன்படுகின்றன. உடல், உள்ளம், உள்ளப்போக்கு முதலான குணங்கள் ஆகியவற்றிற்குப் பரம்பரை எம்மட்டும் காரணம், சூழ்நிலை எம்மட்டும் காரணம் என்று சிறிது தெரிந்துகொள்ள இவை உதவுன்றன. பொதுவாகச் சூழ்நிலையால் ஏற்படும் மாறுபாடுகளுள் உடலியல்புகளே மிகவும் சிறிய அளவுக்கு மாறுகின்றன. உள்ளத்தின் திறமை