பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரட்டை மணிமாலை

39

இரட்டை விதையிலைத் தாவரம்

அவற்றைவிட அதிகமாக மாறுபடுகிறது. கல்விப்பேறு இன்னும் மிகுதியாக மாறுபடுகிறது. ஆளுமையும் உள்ளப்போக்கும் மற்றெல்லாவற்றிலும் பேரளவிற்கு மாறுபடுகின்றன என்று இவ்வாராய்ச்சிகளால் தெரிய வருகின்றது.

இரட்டை மணிமாலை தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்று. இப்பிரபந்தங்கள் 'விருந்து' என்னும் நூல் வகையுள் அடங்கும் (தொல். செய் 239). வெண்பாவும் கட்டளையும் மாறிமாறி வர, இருபது செய்யுட்களால் அந்தாதித் தொடையாகத் தொடுப்பது; வெண்பாவும் ஆசிரிய விருத்தமும் விரவிவரத்தொடுப்பதும் உண்டு (வெண்பாப் பாட்டியல் 36).

இரட்டை மணிமாலைகள் இருவேறு வகைப்பட்ட மணிகளைத் தொடுத்தால் அழகுறக் காட்சியளிப்பது போலக் கற்போர்க்குக் களிப்பைத் தருவன. பதினோராந் திருமுறையில் உள்ள காரைக்காலம்மையார் பாடிய சிவபெருமானை வழிபடற்குரிய திருவிரட்டை மணிமாலையும், கபிலதேவ நாயனார் பாடிய மூத்த நாயனார் திருவீரட்டை மணிமாலையும், சிவபெருமான் திருவிரட்டை மணிமாலையும், நம்பியாண்டார் நம்பி பாடிய திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலையும் காலத்தால் முந்தியவை; பக்திச்சுவை மிக்கவை. கபிலதேவ நாயனார் சங்க காலக் கபிலரல்லரென்பர். பத்தாம் நூற்றாண்டு நம்பியாண்டார் நம்பியின் காலமாகும். மற்றைய இருவரும் இவருக்கு முற்பட்டவர்கள். பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த குமரகுருபர சுவாமிகள் பக்திச் சுவையும் இலக்கியச் சுவையும் பொருந்தப் பாடியவை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலையும் சிவகாமியம்மை இரட்டை மணிமாலையும் ஆகும்.

இரட்டையர் சோழநாட்டில் ஆடுதுறைக்கு அருகில் இலந்துறை என்ற இடத்தில், செங்குந்தர் மரபில் தோன்றினர். 'கச்சியுலா விசைக்கும் புலவர் இரட்டையர்கள், வாகாம் பதியா மிலந்துறையால் வழங்கும் சோழ மண்டலமே' என வரும் சோழமண்டலப்பாட்டு அரண் செய்கின்றது இவர்கள் இளஞ்சூரியர், முதுசூரியர் என்ற பெயர்களால் வழங்கப்பட்டனர் என்றும், ஒருவர் குருடராகவும், மற்றொருவர் முடவராகவும் இருந்தனர் என்றும், உறவுமுறையில் அத்தை மகனாகவும், அம்மான் மகனாகவும் அமைந்தனர் என்றும் அறிகிறோம். இவர்களுக்குள் ஏற்பட்டிருந்த ஒற்றுமை உணர்ச்சியாலும், அங்கக் குறைவினராய் ஒருவர் உதவியின்றி ஒருவர் வாழமுடியாத நிலையாலும், நெருங்கிய உறவினாலும், உள்ளத்தாலும் அறிவியல் திறனாலும் ஒன்றி இருந்ததாலும் இவர்கட்கு இரட்டையர் என்ற பெயர் வழங்கி வருகிறது. குருடர் தோளில் முடவர் அமர்ந்து வழிகாட்ட, தமிழ் நாட்டின் பல பகுதிகளைக் காலால் கடந்த இவர்களின் சிறப்பு அளவிடற்பாலதன்று. இவர்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர் என்பதைக் கேள்வி வழியாகவும், சில பாக்கள் வழியாகவும் அறிகிறோம். இவர்கள் சங்ககாலப் புலவர்களைப்போல் தம்மை மதியாத செல்வர்களைச் சீறிச் சினந்து வெறுத்தனர்; நல்ல பண்புடைய உயர்ந்தோரை ஏத்திப் போற்றினர். இவர்கள் சொற்சுவை, பொருட்சுவை, நகைச்சுவை, எள்ளற்சுவை அமையப் பாடவல்லவர்கள் என்பதை இவர்கள் பாக்கள் காட்டுகின்றன.

வக்கபாகையைச் சேர்ந்த வரபதி ஆட்கொண்டானைச் சனியூரில் வாழ்ந்த வில்லிபுத்தூரார் பாராட்டியுள்ளார். இவ்வரபதி ஆட்கொண்டானை இரட்டையர்களும் பாடியுள்ளனர். அருணகிரியாரும் வில்லிபுத்தூராரும் ஒரே காலத்தவர் என்பதை, அருணகிரிநாதர் சரித்திரத்தாலும், பாவலர் சரித்திர தீபகத்தாலும், சிறப்புப் பெயர் அகராதியாலும் அறிகிறோம். வ.சு. செங்கல்வராய பிள்ளை,கி.பி. 1450-ல் அருணகிரியார் வாழ்ந்தார் என்று கூறுகிறார். இரட்டையரும் காளமேகப் புலவரும் திருவாரூரில் சந்தித்து அளவளாவியுள்ளனர். காளமேகப் புலவர் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று தி. கனக சுந்தரம்பிள்ளை காரணங்களுடன் காட்டுகிறார். டாக்டர் உ. வே. சாமிநாதையரும் இவ்வாறே எண்ணுகிறார். எனவே, இப்புலவர் திலகங்கள் பதினைந்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்கள் கருத்து. சிலர் பதினான்காம் நூற்றாண்டென்பர்.

இரட்டையர்கள் கலம்பகம் பாடுவதில் மிகச் சிறந்தவர்கள். 'கண்பாவு கலம்பகத்திற் கிரட்டையர்கள்' என்ற வரி இதற்குச் சான்று பகர்கின்றது. இவர்கள் பாடிய நூல்கள் திருவாமாத்தூர்க் கலம்பகம், தில்லைக் கலம்பகம், ஏகாம்பரநாதருலா முதலியன். இவர் காலத்தைச் சேர்ந்த அரசர்கள் சோழ நாட்டையாண்ட ஏகாம்பரச் சம்புலன், திருமுனைப்பாடி நாட்டையாண்ட வரபதி ஆட்கொண்டான் முதலியோர். எஸ். என். சொ.

இரட்டை விதையிலைத் தாவரம்: தாவரவுலகம் பூக்கும் தாவரங்கள், பூவாத் தாவரங்கள் என்று பொதுவாகச் சொல்லப்படும் இரண்டு பெரும் பகுதிகளுடையது. பாசி, பூஞ்சாணம், பாசம், பெரணி ஆகிய தாவர வகைகளில் பூ என்று சாதாரணமாகச் சொல்லும் உறுப்பைக் காண்பதில்லை. இவை பூவாத் தாவரங்கள். இவற்றைத் தாழ் தாவரங்கள் என்பதுமுண்டு. மற்ற மரம் முதலியவை யெல்லாம் பூக்குந் தாவரங்கள். இவற்றில் விதை என்று சாமானியமாகச் சொல்லும் உறுப்பும் காணப்படும். ஆதலால் பூத்தாவரங்களை விதைத் தாவரங்கள் என்றும் சொல்வர். இவற்றை உயர் தாவரங்கள் என்பதும் உண்டு. விதைத் தாவரங்களில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்றில் விதையானது சூலிலையாலான கனியாகிய உறைக்குள்ளே மூடப்பட்டிருக்கும். இந்தப் பிரிவு ஆஞ்சியோஸ்பெர்ம் (கிரேக்கச் சொல்: ஆங்கையான் - உறை அல்லது பை ; ஸ்பெர்மா-விதை) அல்லது உறையுடை விதை அல்லது மூடு விதைத் தாவரம் எனப்படும். மற்றொரு பிரிவு பைன் மரங்களும், சைகஸ் சாதிமரங்களும் அடங்கிய ஜிம்னோஸ்பெர்ம் (ஜிம்னோ-ஆடை யில்லாத, வெறுமையான) அல்லது உறையிலா விதை அல்லது மூடா விதைத் தாவரம் என்பது. இந்தப் பிரிவில் சூலிலைகளின் விளிம்பில் அல்லது மேலே விதைகள் இருக்கும்.

சாதாரணமாக நம்மைச் சுற்றிலும் காணும் புள்லும், பூண்டும், மரமும், செடியும், கொடியும் மூடு விதைத் தாவரங்கள். இவற்றில் இரண்டு வகுப்புக்கள் உண்டு. புல், சோளம், அரிசி, வெண்காயம் முதலியவை ஒரு வகுப்பு. இவற்றின் விதையில் ஒரே ஒரு விதையிலை யிருக்கும். இவை மானோகாட்டிலிடன் (மானோ -ஒன்று; காட்டிலிடன் - விதையிலை) என்னும் வகுப்பின. மற்ற வகுப்பு, சாதாரணமாக எங்கெங்கும் காணும் பூக்குந் தாவரங்கள் அடங்கியது டைகாட்டிலிடன் (டை - இரண்டு) அல்லது இரட்டை விதையிலை வகுப்பு எனப்படும். இந்தப் பெயர் இவ்வகுப்பின் எல்லா இனங்களிலும் காணும் ஒரு பண்பைக் குறிக்கிறது. இவற்றின் விதையில் இரண்டு விதையிலைகள் உண்டு. அவரை, கடலை, துவரை, ஆமணக்கு, புளி முதலியவற்றின் விதைகளையும் அவை முளைப்-

.