பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரத்தம் ஊட்டல்

50

இரத்த மச்சம்

தம் ஊட்டல் வெற்றிகரமாக நடைபெற்றது 1667-ல் டெனிஸ் என்பவர் 15 வயது சிறுவனுக்கு ஊட்டியதுதான். ஆயினும் இம்முறையால் பலர் இறந்து வந்ததால், இது 18 ஆம் நூற்றாண்டுவரை கையாளப்படாமலே இருந்தது.

இரத்தம் உடலிலிருந்து வெளி வந்ததும் உறைந்து போவதே இந்த முறையைக் கையாள்வதற்கு முக்கியமான இடையூறாக இருந்தது. அதனால் 1907-ல் கிரில் (Crile) என்பவர் இரத்தம் கொடுப்பவர் பாய்குழாயிவிருந்து, பெறுபவர் வடிகுழாய்க்கு இரத்தம் செல்லுமாறு செய்யக்கூடிய ஆப்பரேஷன் முறையைக் கையாண்டார்.

ஒருவகை விலங்கின் இரத்தம் வேறுவகை விலங்கின் இரத்தத்தோடு பொருந்துவதில்லை என்பதையும் அறிஞர்கள் கண்டார்கள். மக்களிலும் நான்குவகை இரத்தங்கள் இருப்பதாக ஜான்ஸ்கி (Jansky) என்பவரும் கார்ல் லாண்ட்ஷ்டைனரும் (Landsteiner) 1907-ல் கூறினார்கள்.

அதன்பின் ஆகோட் (Agate) என்பவர் கொடுப்பவருடைய இரத்தத்தை எடுத்ததும் அதனுடன் சோடியம் சிட்ரேட்டு என்னும் உப்பைக் கலந்தால் இரத்தம் உறையாது என்னும் உண்மையைக் கண்டு கூறினார். இத்தகைய இரத்தம் நீண்டநாள் கெட்டுப் போகாமல் இருக்கும்.கிரில் கண்ட முறை சிரமமானதாக இருந்தபடியால் இந்தச் சிட்ரேட்டு இரத்தம் ஊட்டல் முறையே கையாளப்படலாயிற்று.

சோடியம் சிட்ரேட்டு சேராமல் இரத்தத்தை உறையும்படி செய்யும் பைப்ரின் என்னும் பொருளை இரத்தத்திலிருந்து நீக்கிவிட்டு, இரத்தத்தைப் பாதுகாத்து வைக்கும் முறையே சிறந்தது என்று 1923-ல் ஸ்டோரெர் (Storer) கூறினார்.

இரத்தம் கொடுப்பவர் தமக்கு அபாயம் நேராதபடி எவ்வளவு இரத்தம் கொடுக்கமுடியும் என்று இரத்தம் ஊட்டுவதற்முன் பரிசோதித்து அறியவேண்டும். பொதுவாக உடல் நலமுள்ள இளைஞன் சொற்ப மயக்கத்தைத் தவிர வேறு எதுவும் நேராதவாறு ஒரு லிட்டர் இரத்தம் வரை தரமுடியும். ஆயினும் பொதுவாக 500-750 க.செ.மீ. இரத்தந்தான் எடுக்கப்படும்.

கொடுப்பவரின் இரத்தம் நோயாளியின் இரத்தத்துடன் பொருந்துமா என்று கவனிக்க வேண்டும். இதற்கு ஜான்ஸ்கி கண்டுபிடித்த நான்கு இரத்த வகைகள் பயன்படும். (பார்க்க: இரத்தக் குழுக்கள்).

இப்போது முன்கூட்டியே, இரத்தம் கொடுக்க விரும்புவோரிடமிருந்து இரத்தத்தைப் பெற்று, இரத்த சாரத்தைப் பிரித்துத் தூய்மை செய்து இரத்தப் பாங்குகளில் ஓர் ஆண்டுவரையிலும் பாதுகாத்து வைத்துக் கொள்கிறார்கள். இரத்த சாரத்திலுள்ள நீரை நீக்கி, அதைப் பொடியாக்கி வைத்துக்கொண்டு, வேண்டும்போது நீர் கலந்து நோயாளியின் உடலில் செலுத்துவதுமுண்டு.

இரத்தம் ஊட்டல் மிகுதியாகப் பயன்படுவது, காயம் உண்டாவதால் இரத்தம் போவதாலோ, அல்லது இரைப்பையில் புண் உண்டாகி இரத்தம்போவதாலோ, அல்லது பிரசவத்துக்குப்பின் இரத்தம் போவதாலோ ஏற்படும் தீவிரச் சோகை நோய்க்கேயாம். இதனுடன், இரத்தம் போனாலும் போகாவிட்டாலும் ஆப்பரேஷனால் உண்டாகும் அதிர்ச்சிக்கும், நோயாளியின் இரத்தத்தின் உறையும் தன்மைக் குறைவுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

இப்போது உலகமெங்கும் இந்த முறை கையாளப்படுகிறது. பல நோய்களுக்குத் தலையாய சிகிச்சை முறையாகக் கருதப்படுகிறது. இந்த முறை எவ்விதத் தீங்கும் இல்லாமல் கையாளத் தக்கதாகச் செய்யப்பட்டுமிருக்கிறது. என். சே.


இரத்தம் வடித்தல் என்பது நோய்ச் சிகிச்சைக்காக ஓரளவு இரத்தத்தை உடம்பிலிருந்து நீக்கிவிடுவதாகும். அவ்வாறு நீக்கக்கூடிய உத்தம அளவு 20-30 அவுன்ஸாகும். ஒரு காலத்தில் இந்த முறை மிகுந்த ஆதரவு பெற்றிருந்தது. ஆனால் இதைப் பயன் தரும் முறையாக எண்ணுவது அண்மையில் குறைந்துவிட்டது. எவ்வளவு இரத்தத்தை உறிஞ்ச முடியுமோ அவ்வளவு இரத்தத்தை உறிஞ்சுமாறு அட்டைகளைக் கடிக்கவிட்டு இரத்தத்தை நீக்குவார்கள். சராசரியாக ஓர் அட்டை கால் அவுன்ஸ் இரத்தத்தை உறிஞ்சும். அதற்கு 6-12 அட்டைகள் தேவைப்படும். இது சிரமமான முறை என்று தோன்றியதால் இப்போது முழங்கையிலுள்ள வடிகுழாயிலிருந்து இரத்தத்தை வடித்துவிடும் முறை கையாளப்படுகின்றது. இரத்தம் வடித்தல் முறை கீழ்க்கண்ட வேளைகளில் கையாளப்படும்: 1 இதயத்தின் வலப்புறம் விரிந்து நன்கு வேலைசெய்யாதிருக்கும் வேளையில் இரத்தத்தை வடித்தால் இதயம் சிரமமின்றி வேலை செய்யும்.2. இரத்த அழுத்தம் மிகும்போது இரத்தத்தை வடித்தால் தமனியில் இரத்தம் மிகுவதால் ஏற்படும் சிரமம் குறைந்து இதயத்துக்கு இதமுண்டாகும். 3. கர்ப்பிணிகளுக்கு இசிவு (Convulsions) உண்டாகும் வேளை. 4. பண்டைக் காலத்தில், இரத்தம் நச்சுத்தன்மையுறும்போது இரத்தத்தை வடித்துவிட்டுப் புதிய இரத்தம் ஊட்டுவார்கள். இரத்தத்தை வடித்து நோயைக் குணப்படுத்துவது என்பது ஐயத்திற்கே இடமானது. ஆதலால் இக்காலத்தில் இந்த முறை இரத்த அழுத்தம் மிகும்போது மட்டுமே கையாளப்படும். சீ. ரா.


இரத்த மச்சம் (Naevus) தலையிலும், உடலிலும், கைகால்களிலும் தோன்றிப் பரவும் ஒருவகைத் தடிப்பு. இரத்தக் குழாய்களின் தொகுதியால் ஆனது. குழாய்கள் பருத்து, ஒன்றோடொன்று பிணைந்துகொண்டு உள்தோலின் அடியில் பரவி, ஆழ்ந்த கருஞ்சிவப்புக் குறிபோல் தோன்றும். இதயத்திற்குத் திரும்பும் இரத்தக் குழாய்களால் தோன்றும் மச்சத்தில் நாடி இராது. இரத்த மச்சத்தில் இரத்தம் தடைப்பட்டால், அதைச் சூழ்ந்த இடங்களில் வீக்கம் உண்டாகும். அதன் நிறமும் கருஞ்சிவப்பாகும்.

இரத்த மச்சம் கர்ப்பிணியாயிருக்கும் தாயினுடைய மச்சத்தால் குழந்தைக்கு உண்டாகிறது என்று பொதுவாக நம்புகிறார்கள். வேறு எண்ணங்களும் இச்சைகளும் தாய்க்குத் தோன்றி இதைத்தோற்றுவிக்கின்றன என்றும் கூறுகிறார்கள். மச்சம் தோன்றிக் கொஞ்ச காலத்திற்குப்பின் தானாகவே மறைந்து போகலாம். இதில் அழற்சியும் ஏற்படலாம். இதையும் இரத்த மச்சம் என்றே கூறியபோதிலும், இது எப்பொழுதும் பிறவியிலேயே தோன்றுவதில்லை. பிறந்து சில நாட்களுக்குப் பிறகே தோன்றலாம். ஆயுட்காலத்தில் எப்பொழுதாகிலும் இரத்த மச்சம் தோன்றலாம்.

இரத்த மச்சத்தை நீக்க, இரத்தக் குழாய்களைக் கட்டி, இரத்த ஓட்டம் அதற்குச் செல்லாமல் தடுக்க வேண்டும். மின்சாரத்தினால் சூட்டை அளித்து இரத்தக் குழாய்களை அடைத்து விடலாம். ஆனால் இவ்விரண்டு முறைகளைக் காட்டிலும் உலர் பனிக்கட்டி என்னும் திண்மக் கார்பன் டையாக்சைடைப் பயன்படுத்துதல் சிறந்தது. இப்படிச் செய்யும்போது, மச்சம் சுருங்கி மறைந்து போகும். மச்சம் பெரிதாக இருந்தால்