பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரத்தமில்லா ரணசிகிச்சை

51

இரத்தினத் தீவம்

ரண சிகிச்சை முறையில் அதை அறுத்து நீக்கலாம். சிறிதாயிருந்தால் அப்படியே விட்டு விடுதல் நலம். பெரிதான இரத்த மச்சத்தை அறுத்து நீக்காவிட்டால் அதன் அடியில் இரத்தம் கசிந்து, உடலின் வலிமை குறைந்துவிடக் கூடும். என். சே.


இரத்தமில்லா ரணசிகிச்சை : ரண வைத்தியர் ஆப்பரேஷன் செய்யும்போது கத்திகொண்டு தசையை அறுக்கிறார். அப்போது இரத்தக் குழாய்களை அறுக்க நேரும். இரத்தமே உடம்பின் எல்லாப் பகுதிகட்கும் ஊட்டப் பொருள்கள் கொண்டுபோய்க் கொடுக்க உதவுகின்றது. உடம்பிலிருந்து இரத்தத்தைச் சிறிது சிறிதாக அப்புறப்படுத்தினால் உடம்பு உடனுக்குடன் அதற்குத் தக நடந்து கொள்ளுமாதலால் உடம்புக்குப் பெருந் தீங்கு நேராது. ஆனால் திடீரென்று இரத்தத்தை மிகுந்த அளவில் அப்புறப்படுத்தினால் உடலுக்குப் பெருந் தீங்கு நேரும். அதனால் இயன்ற மட்டும் குறைந்த அளவு இரத்தம் சிந்துமாறு ஆப்பரேஷன் செய்து, உடலிலுள்ள இரத்தத்தைக் கூடியமட்டும் பாதுகாக்க வேண்டியதே ரண வைத்தியருடைய தலையாய கடமையாகும்.

இரத்தமானது தமனியிலிருந்தேனும் சிரையிலிருந்தேனும் தந்துகியிலிருந்தேனும் வடியும். தமனியிலிருந்து வடியும் இரத்தம் நல்ல சிவப்பாயிருக்கும்; விட்டு விட்டு வடியும். சிரையிலிருந்து வடியும் இரத்தம் கறுப்பாயிருக்கும்; ஒரே தாரையாக வடியும். தந்துகியிலிருந்து இரத்தம் கசியவே செய்யும். ஆப்பரேஷன் செய்யும்போது இரத்தக் குழாய் அறுபட்டதும் இரத்தம் வடியும். இதைப் பிரதம இரத்தப் பெருக்கு (Primary haemorrhage) என்பர். அறுபட்ட இரத்தக் குழாயிலிருந்து வடியாதபடி அறுபட்ட இடத்தில் கட்டி வைப்பர். அப்படிக் கட்டியதில் தவறு நேர்வதாலும், சிலருக்கு இயற்கையாகவும், சில வேளைகளில் அப்படிக் கட்டப்பட்ட குழாய்களிலிருந்தும் இரத்தம் வடியும் இதை எதிர் வினை இரத்தப் பெருக்கு (Reactio. nary h.) என்பர். ஆப்பரேஷன் செய்து ஏழெட்டு நாட்கள் சென்ற பின்னர் அறுத்த இடத்தில் நஞ்சு ஏற்பட்டு, அதனால் இரத்தக் குழாய்கள் மிருதுவாக ஆய்விட்டால் அப்பொழுதும் இரத்தம் வடியும். இதைப்பிந்திய இரத்தப் பெருக்கு (Secondary h) என்பர்.

இரத்தக்குழாய்கள் அறுபட்டால் இரத்தம் வடிவதாயிருந்தாலும் அளவுக்கு மிஞ்சி வடிந்துவிடாமலிருப்பதற்காக உடம்பிலேயே மூன்று பாதுகாப்புச் சாதனங்கள் அமைந்திருக்கின்றன. 1. இரத்தக் குழாய் அறுபட்டாலும் இரத்தத்தில் நொதிவிக்கும் பொருள் (Ferment) ஒன்று உண்டாகின்றது. அதனால் இரத்தம் கட்டியாகி வடிவது நின்று விடுகிறது. 2. சேதப்பட்ட இரத்தக் குழாய்களிலுள்ள (மீள் சக்தியுள்ள) தசைநார்கள் சுருங்கித் திசுக்களில் இரத்தமில்லாமல் செய்து விடுகின்றன. 3. இரத்த நஷ்டத்தால் ஏற்படும் இரத்த அழுத்தக் குறைவினாலும் திசுக்களில் இரத்தமில்லாமல் ஆய்விடும்.

இரத்தமில்லாமல் செய்யவோ அல்லது இரத்தம் மிகுதியாக வடியாமலிருக்கச் செய்யவோ கையாளப் படும் முறைகள் வருமாறு:

1. ரசாயன இயற்றிகள்: (அ) அயகப் பெர்க்குளோரைடு, டானிக அமிலம், வெள்ளி நைட்ரேட்டுப் போன்ற இரத்தத்தை உறையச் செய்யும் பொருள்களை (Styptics) வடியுமிடத்தில் பயன்படுத்தல்.

(ஆ) இரத்தக் குழாயைச் சுருங்கச் செய்யும் அட்ரீன்லின் போன்ற பொருள்களை இரத்தம் வடியுமிடத்தில் பயன்படுத்தல். இந்த முறையானது மூக்குத் துவாரங்களில் ரணசிகிச்சை செய்வதற்கு மிக்க பயனுடையது. (இ) காரீய அசிட்டேட்டு, எர்கட்டு, கர்ப்பூரத் தைலம் போன்ற சுருக்கு மருந்துகளைப் பயன்படுத்தல். 2. பௌதிக முறை இயற்றிகள்: (அ) பனிக்கட்டியால் குளிர்விக்கப்பட்ட நீரையோ (ஆ) 130°-160° பா. சூடான நீரையோ பயன்படுத்தல். (இ) மின்சாரக் கொள்ளி கொண்டு சுடுதல். 3. பொதுமுறைகள்: (அ) இரத்தத்தை உறையச் செய்ய உதவும் பொருள்களை ஊசியால் செலுத்தல். (ஆ) கால்சியத்தை ஊசியால் செலுத்தல் அல்லது உண்ணக் கொடுத்தல் அல்லது மலக்குடல் வாயிலாக உட்செலுத்தல். (இ) மார்பியா போன்ற சமனிகளை ஊசிபோட்டு உடலையும் உள்ளத்தையும் அமைதி அடையச் செய்தலும் இரத்தமில்லா ரணசிகிச்சைக்கு மிகவும் நல்லதாகும். 4. மற்ற முறைகள் : (அ) இரத்தம் வடியும் குழாய்களை நுண்மம் நீக்கிய சல்லாவைக் (Sterile gauze) கொண்டு அழுத்துதலும், ஸ்பென்சர்வெல் அல்லது கோஷர் சாமணங்களைக்கொண்டு இறுக்கிப் பிடித்தலும். (ஆ) நரம்புக் கயிறு போன்ற பொருள்களைக் கொண்டு துண்டிக்கப்பட்ட இரத்தக் குழாய்களைக் கட்டுதல். (இ) அறுத்துச் சிகிச்சை செய்யவேண்டிய உடற் பகுதியைத் தூக்கி வைத்துச் சிரைகளிலுள்ள இரத்தத்தை வடித்து விடுதல். (ஈ) மீள் சக்தியுடைய பொருளாகிய கயிறுகொண்டு தமனியிலுள்ள இரத்தம் வடியாதபடி கட்டுதல். ஒரு மணி நேரத்திற்கு மிகுதியாக நீண்டநேரம் கட்டிவைத்தால் திசுக்கள் உயிரற்றனவாக ஆகிவிடும். வேறு முறையைக் கையாளாமல் தமனியிலிருந்து மிகுந்த இரத்தம் வடிவதைத் தடுக்க முடியாதாயின் இரத்தம் வடியும் தமனியின் மூலத்தமனியைக் கட்டிவைக்க வேண்டும்.

ரணசிகிச்சை செய்யும்போது இரத்தம் வடியாமல் செய்வதும் சிகிச்சை செய்யுமிடத்தில் இரத்தமில்லாமல் செய்வதுமே நோக்கமாயிருத்தல் வேண்டும். இது சாத்தியமில்லா திருப்பினும், மிகுந்த இரத்தம் வடியாமல் ரணசிகிச்சை செய்ய முடியாதிருந்தாலும், இரத்தத்தையோ அல்லது குளூக்கோசைக் கொண்ட உப்பு நீரையோ ஊட்ட வேண்டும். இரத்தம் ஊட்ட வேண்டியிருந்தால் இரத்தம் தருபவர், பெறுபவராகிய இருவர் இரத்தத்தையும் பரிசோதித்து ஊட்டத்தக்க இரத்தமா என்று தெரிந்து கொள்ளுதல் இன்றியமையாததாகும். ஆர். ஷ.

இரத்தினக் கவிராயர், திருமேனி (17ஆம் நூ.) பெரியகாரி இரத்தினக் கவிராயரின் புதல்வர். இரசை வடமலையப்பப் பிள்ளையின்மீது புலவராற்றுப்படை என்னும் நூலை யியற்றியவர். திருப்பேரைத் திருப்பணிமாலையும் இவர் இயற்றியது.

இரத்தினத் தீவம் மணிமேகலையில் கூறப்படும் ஒரு தீவு. இது காவிரிப்பூம்பட்டினத்திற்கு, ஆறைந்து யோசனையில் (மணி. 6 : 211-3) உள்ள மணிபல்லவம் என்னும் தீவிற்கு அருகில் உள்ளது. இத்தீவில் சமந்தம் என்னும் மலையின் உச்சியிற் புத்தபாத பீடிகை இருக்கிறது (மணி.11:21-25). "இலங்காத் தீவத்துச் சமனொளி என்னும் சிலம்பு" (மணி. 28: 107-8). இக்குறிப்புக்களைக் கொண்டு இரத்தினத் தீவமும் இலங்கா தீவமும் ஒன்று என்றும், சமந்தம் என்பதே சமனொளி என்னும் மலையென்றும் உறுதி செய்தால், இப்போது இலங்கையில் கொழும்புக்குத் தென் கிழக்கில் உள்ள இரத்தினபுரம் (த.க.) என்ற இடத்தையே இத் தீவு குறிப்பதாகக் கொள்ளலாம். முற்காலத்திலிருந்து