பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரத்தினபுரம்

52

இரமணர்

இரத்தினக் கற்கள் மிகுதியாக இலங்கையிலே கிடைக்கின்றன என்று இலங்கை வரலாறு கூறுவதால் இக்கூற்று உறுதியாகலாம். சமனொளி மலை என்பது சிவனொளிபாத மலையாக மருவி வழங்கியிருக்கலாம். சிவனொளிபாத மலையை ஆங்கிலத்தில் ஆடம்ஸ் பீக் என வழங்குவர்.

இரத்தினபுரம் இலங்கையில் சபரகமுவா என்னும் மாகாணத்தின் முக்கிய நகரம். இரத்தினங்களிற் பல இனங்களை வெட்டியெடுக்குந் தொழில் நீண்டகாலமாக இங்கு நடைபெற்று வருகிறது. தேயிலை, ரப்பர்த் தோட்டங்கள் பல உள்ளன. நெல்லும் கனிவகைகளும் பயிராகின்றன. கொழும்புக்குச் செல்லும் இருப்புப் பாதையும் நல்ல சாலையும் உண்டு. மக் : 8.497 (1931).

இரத்தினவேலு முதலியார், ஈக்காடு (19ஆம் நூ. பிற்பகுதி- 20ஆம் நூ. முற்பகுதி): இவர் ஈக்காடு என்னும் ஊரினர். பரஞ்சோதி திருவிளையாடல், காசி கண்டம், பார்க்கவ புராணம் முதலிய நூல்களைப் பதிப்பித்தவர். சிவமகா புராணம், சிவபராக்கிரமம், பஸ்ம மாகாத்மியம் முதலிய நூல்களை மொழிபெயர்த்தவர். சிறப்புப் பெயரகராதி இயற்றியவர். உரைநடை நூல்களும் எழுதியுள்ளார். சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தவர்.

இரதசப்தமி : இது தை மாதத்தில், சுக்கிலபட்சம் ஏழாவது நாளில் சூரியனைக் குறித்துக் கொண்டாடப்படும் வீரதம். காலையில் நீராடிச் சிறு விளக்குகளை ஏற்றி நீரில் மிதக்கவிடவேண்டும் என்றும். தேரில் சூரியன் போவதுபோல் இரதமொன்றைச் செய்து, அதில் சூரிய பிம்பத்தை வைத்துப் பூசை செய்யவேண்டும் என்றும், புராணங்களில் சொல்லியிருக்கிறது. இப்போது ஏழு எருக்கிலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு சூரியோதயத்தில் நீராடும் முறை இருந்து வருகிறது. எருக்கில் மந்தாரம் என்னும் ஒரு வகையுண்டு ; அதைக்கொண்டு இவ்விரதத்திற்கு மந்தார சப்தமி என்றும் பெயர்.

பாரதச் சண்டையில் விழுந்த பீஷ்மாசாரியர் தம்முடைய தந்தையிடம் பெற்ற யதேச்ச மரணம் என்ற வரத்தின்படி உத்தராயண புண்ணியகாலம் வந்தபின்பே தமது ஆவியை விட்டார். பிரமசரிய விரதத்தால் மக்களின்றி மறைந்த இப்பெரியாருக்கு இந்துக்களாகிய எல்லோருமே மக்களாயிருந்து தர்ப்பணஞ் செய்து வருகின்றனர். இதற்குப் பீஷ்ம தர்ப்பணம் என்று பெயர். பீஷ்மாஷ்டமி என்று இரதசப்தமியின் மறுநாளான அஷ்டமியன்று இந்தத் தர்ப்பணம் செய்ய வேண்டும்; இப்போது பீஷ்ம தர்ப்பணமும் இரதசப்தமியன்றே செய்யப்பட்டு வருகிறது. வே. ரா.

இரதி காமன் மனைவி.

இரதி

தென்காசியில் உள்ள காசிவிசுவ நாதர் கோயிலில் உள்ளது

உதவி : தொல்பொருள் இலாகா, சென்னை.

இரதி யென்பதற்கு விருப்பம் என்றும், சேர்க்கை யென்றும் பொருளுண்டு இரதி பாற்கடலிற் பிறந்தாளென்றும், ஒரு மனுவின் மகளென்றும், சம்பரன் என்னும் அசுரன் மனையிற் பிறந்தாளென்றும், மயன் வீட்டிற் பிறந்தாளென்றும் புராணங்கள் பலவாறு கூறும். காமன் சிவ பெருமானாற் சாம்பலானபோது, இரதி வேண்ட, அவர் மனமிரங்கி அவள் கண்ணுக்கு மட்டும் அவன் உருவுடன் காணப்படுவானென வரங்கொடுத்தார். என்பர்.

இரமணர் (1879-1950) பாண்டிய நாட்டுத் திருச் சுழியில் 1879 டிசம்பர் 30-ல் பிறந்தார். இவர் தந்தை சுந்தரமையர். தாயார் அழகம்மாள். இவரது இயற்பெயர் வேங்கடராமன். இவர் திருச்சுழியிலும், திண்டுக்கல்லிலும், மதுரையிலும் ஆறாவது கல்வி பாரம் வரையில் பயின்றார். இளமை முதலே இவருக்குத் திருவண்ணாமலையைப் பற்றிய நினைவு இருந்து வந்தது. இவர் படித்த பெரிய புராண வசனமும் இவருடைய உள்ளத்தில் பக்தியை விளைவித்தது. மதுரை சுந்தரேசுவரர் ஆலயத்தில் சிலகாலம் தொழுது தியானம்செய்து வந்தார். 1896-ல் தம் பதினேழாம் வயதிலே ஆன்ம தரிசனம் பெற்றுத் துறவுபூண்டு திருவண்ணாமலையை அடைந்தார். அங்குள்ள ஆயிரக்கால் மண்டபம், பாதாள லிங்கம் முதலிய இடங்களில் சில ஆண்டுகள் சமாதி கூடியிருந்தார். 1907-ல் இவரைக் குருவாக அடைந்த கணபதி முனிவர் இவரைப் பகவான் இரமண மகரிஷி என்று போற்றினார். அப்பெயருடனேயே பின்னர் இவர் விளங்கிவரலானார். பவளக் குன்று, விரூபாட்சக் குகை, கந்தாசிரமம் முதலிய இடங்களில் சுமார் 25 ஆண்டுகள் உறைந்து வந்தார். இவருடைய அன்னையும் துறவுபூண்டு இவருடன் வசித்துவந்தார். அவர் 1922-ல் முத்தியடைந்தது முதல் அவரது சமாதி அருகிலேயே இரமணர் வாழ்ந்து வரலானார். அது இப்பொழுது பலவகை அங்கங்களோடு சுடிய பெரிய ஆசிரமமாக இருந்துவருகிறது. அங்கே இவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கு இந்தியாவில் பல பாகங்-