பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரவல் குத்தகை முறை

53

இராகமாலிகை

களிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் பலர் வந்து போய்க் கொண்டிருந்தனர். ஆன்ம சக்தி நிறைந்த இவரது முன்னிலையிலே அடியார்களுடைய அக இருள் அகன்றுவிடுவது அன்பர்கள் அனுபவம். இரமணர் அருணாசல ஸ்துதி, பஞ்சகம், உபதேச உந்தியார், உள்ளது நாற்பது முதலிய நூல்கள் இயற்றியுள்ளார். தேவிகாலோத்தரம் விவேக சூடாமணி முதலியவற்றின் மொழி பெயர்ப்புக்களையும் செய்திருக்கிறார்.

ஸ்ரீ ரமணர்

இவர் தமது 21 ஆம் ஆண்டில் எளிய நடையில் சிறிய வடிவில் செய்த "நான் யார்" என்ற வசன உபதேச நூலின் தொடக்கத்தில், சகல சீவர்களும் துக்கமென்பது இன்றி எப்போதும் சுகமாயிருக்கவே விரும்புவதாலும், யாவர்க்கும் தன்னிடத்திலேயே பரமப் பிரியமிருப்பதாலும், பிரியத்திற்குச் சுகமே காரணமாதலாலும் மனமற்ற நித்திரையில் தினமனுப்விக்கும் தன் சுபாவமான அச்சுகத்தை அடையத் தன்னைத்தான் அறிதல் வேண்டும். அதற்கு நான் யார் என்னும் ஞான விசாரமே முக்கிய சாதனம்" என்றுள்ள வாக்கியமே அவருடைய முக்கிய உபதேசம் ஈதென விளக்கும். இந்த விசாரம், சிரத்தை மட்டும் இருந்தால் எல்லோருக்கும் இயல்வதும் எளிதுமாம் என்பதை இவர் தமது வாழ்க்கையில் இருந்து காட்டியருளினார். இவர் இருபதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் அருள் வள்ளலாக விளங்கிய அவதார புருஷர். இவர் 14-4-1950-ல் விதேக முக்தியடைந்தார். பா. மு. க. மு.

இரவல் குத்தகை முறை (Lend-lease System) : இரண்டாம் உலக யுத்தத்தின்போது, 1941 45-ல், நேச நாடுகளுக்கு யுத்த நிலைமையில் உண்டான பெரிய நெருக்கடிக் காலத்தில் அந்நாடுகளுக்குத் தளவாட உதவி செய்வதற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகள் நிறுவிய ஓர் ஏற்பாடு. இவ்வேற்பாட்டின்படி, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்ற நாடுகளுக்கு அனுப்பும் தளவாடங்களுக்குக் கணக்கு வைக்கப்பட்டிருந்ததாயினும், இரவல் நிபந்தனைகள் யுத்த முடிவிற்குப் பிறகு தீர்மானித்துக் கொள்வதாக விடப்பட்டன. இரவல் பொருள்களில் எஞ்சியவற்றை யுத்தத்திற்குப் பிறகு அப்படியே திருப்பித் தரவேண்டும் என்பது மட்டும் முன்பே ஏற்படுத்தப்பட்ட ஒரு நிபந்தனை.

1939-ல் அமெரிக்க ஐக்கிய நாடு யுத்தத்தில் நடுநிலைமை வகித்தது. அப்போது அந்நாடு 'நடுநிலைமைச் சட்டம்' (Neutrality Act) ஒன்று வகுத்துப் போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்குத் தளவாடங்கள் அனுப்பக் கூடாதென்று தீர்மானித்தது. இச்சட்டத்தால் இங்கிலாந்தும் பிரான்ஸும் பாதகமடையவே, அமெரிக்க ஐக்கிய நாடு சட்டத்தை மாற்றி, ரொக்கம் கொடுக்கும் எந்த நாட்டிற்கும் தளவாடம் அனுப்பலாம் என்று அமைத்தது. ஆயினும் தளவாடங்களைப் பெறும் நாடுகள் அவற்றை ஏற்றிச் செல்லக் கப்பல்களையும் தரவேண்டும். 1941-ல் பிரிட்டனால் ரொக்கம் தர முடியவில்லை. ஏதேனும் ஒரு வழி காணவேண்டியதாயிற்று. 1940 டிசம்பரில் பிராங்கிலின் ரூஸ்வெல்ட் இரவல்-குத்தகை முறையை ஏற்படுத்தினார். 1942-ல் ஏற்பட்ட ஓர் ஒப்பந்தப்படி தளவாடங்களைப் பெற்றுக்கொண்ட நாடுகள் அவற்றைப் பிற நாடுகளுக்கு விற்கக்கூடாதென்று நிபந்தனை செய்யப்பட்டது.

1944-ல் இரவல்-குத்தகை உதவி குறைந்துவிட்டது; 1945 செப்டெம்பரில் அம்முறை முற்றிலும் கைவிடப்பட்டது. 1941 மார்ச்சிலிருந்து 1945 அக்டோபர்வரை கொடுக்கப்பட்ட மொத்த இரவல்-குத்தகையின் மதிப்பு 4.60.400 லட்சம் டாலர்கள். இம்முறையில் முக்கியமாகப் பலனடைந்த நாடுகள்: பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா. அ. மு.

இரவிவர்மா (1848-1906) கேரள நாட்டுச் சிறந்த ஓவியர்களுள் ஒருவர். இவர் தந்தை பட்டாதிரி, தாய் உமா அம்பாபாய். இவர் கிளிமானூர் அரண்மனையில் 1848 ஏப்ரில் 29 ஆம் நாள் பிறந்தார். இவரை இவர் தாய் தந்தையர் வடமொழிப் புலவராக்க விரும்பினர். ஆனால் இவர் உள்ளம் ஓவியத் துறையில் சென்றது. அதைக்கண்ட இவருடைய தாய் மாமனார் இராஜராஜவர்மா இவருடைய ஆர்வத்தைப் பேணி வளர்த்தார். பின்னர்த் திருவிதாங்கூர் அரசர் பணித்த வண்ணம், அரண்மனையிலிருந்த மேனாட்டுக் கலைஞர் ஜேன்சனிடம் ஓவியக் கலை பயின்றார். 25ஆம் வயதில் மணம் புரிந்துகொண்டார்.1873-ல் சென்னையில் நடந்த கலைக் காட்சியில் ' நாயர் நங்கை' என்ற படத்திற்குக் கவர்னரின் தங்கப் பதக்கம் பரிசாகப் பெற்றார். அப்படம் வியன்னாக் காட்சியிலும் தங்கப் பதக்கம் பெற்றது.

இரவிவர்மா

(இரவிவர்மா குமாரர் ராம வர்மா தீட்டிய ஒளியத்திலிருந்து எடுத்தது)

உதவி : இரவிவர்மா ஓவியம் சிற்பப்பள்ளி, சென்னை.

1874-ல் சென்னையில் நடந்த காட்சியில் தமிழ் நங்கையின் படம் பெரு மதிப்புப் பெற்றது. நாளடைவில் இவருடைய புராண காவியப் படங்கள் எங்கும் புகழ் பெற்றன. 1892-ல் இவருடைய படங்கள் சிக்காகோ கலைக்காட்சியில் இரண்டு தங்கப்பதக்கங்கள் பெற்றன. மேனாட்டு ஓவிய மரபைத் தழுவிப் புராண ஓவியங்கள் தீட்டுவதில் சிறந்தவராயிருந்தது போலவே, உயிரோவியங்களையும் பண்போவியங்களையும் தீட்டுவதிலும் சிறந்தவராயிருந்தார். 1906 அக்டோபர் 6 ஆம் நாள். (58 ஆம் வயதில்) காலமானார்.

இராகம்: பார்க்க: இசை-இராகம்.

இராகமாலிகை: இசையரங்கிற்குக் களைகொடுக்கும் உருப்படிகளில் இது ஒன்றாகும். இதற்குப் பல்லவி, அனுபல்லவி, சரணங்கள் என்னும் அங்கங்கள் உண்டு. சில இராகமாலிகைகளில் பல்லவியும் சரணங்களுமே இருக்கும். இந்த உருப்படியில் ஒவ்வோர் அங்கமும் ஒவ்வோர் இராகத்தில் அமைக்கப்பட்டிருக்கும். சாகித்தியத்தில் இராகத்தின் பெயர் பொருள் கெடாமல் அழகாகப் பிணைக்கப்பட்டிருக்கும். இராக முத்திரை காணப்படாத இராகமாலிகைகளும் இருக்கின்றன. ஒவ்வோர் அங்கத்தின் இறுதியிலும், சிட்டைசுரம் வரும். ஒவ்வொரு சிட்டைசுரத்தின் முடிவிலும் பல்லவி ராகத்திலுள்ள ஓர் ஆவர்த்தசிட்டை சுரத்தைப் பாடிப் பல்லவி பாடப்படும். இந்தப் பல்லவிராகசிட்டை சுரத்திற்கு மகுடசுரம் என்று பெயர். சில இராக-