பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராகவையங்கார்

54

இராச்சியத்தின் அதிகார எல்லை

மாலிகைகளின் கடைசியில் எல்லா இராகங்களிலும் ஓராவர்த்த சிட்டைசுரங்கள் விலோமகிரமத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இதைப்பாடிப் பல்லவியை எடுக்குங்கால் கேட்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும். சுராட்சரஅணிகள் ததும்பும் இராகமாலிகைகளும் உள. இராகமாலிகை என்றால் பொதுவாக இராகமாலிகை உருப்படியைத்தான் குறிக்கும். சுலோகங்களையும் விருத்தங்களையும் பல்வேறு இராகங்களில் பாடுவதைச் சிலர் இராகமாலிகை என்பர். பி. ஸா.

இராகவையங்கார், ரா. (1870-1948) : இவர் இராமநாதபுரத்திற்கு ஏறக்குறைய 40 மைல் தொலைவிலிருக்கும் சரையக்கோட்டை யென்னும் ஊரில் இராமாநுசாசாரியாருக்கும் பதுமாசனி யம்மையாருக்கும் புதல்வராய்த் தோன்றிய தென் கலை வைணவர்.

இராகவையங்கார்

இவர் முதலில் ஆங்கிலக் கலாசாலையில் மெட்ரிக்குலேஷன் வரையிற் பயின்றார். பிறகு தம் அம்மான் அஷ்டாவதானம் முத்துசாமி ஐயங்காரிடம் தமிழ் மொழி பயின்றார். பின்னர் வடமொழிப் பயிற்சியும் உளதாயிற்று.

இளமையிலேயே சொல் வன்மையும் ஆராய்ச்சித்திறனும் பாடலியற்றும் வல்லமையும் இவருக்குத் தோன்றின. இவருடைய நுண்ணறிவைக் கண்டு இராமநாதபுரம் ராஜா பாஸ்கரசேதுபதி தமது சமஸ்தான மகாவித்துவானாகக் கொண்டனர். இவர் தமிழில் முதிர்ந்த அறிவோடு பலமொழிகளினியல்பையும் ஆராய்ந்துணர்ந்தவர். பெரும் பேச்சாளரையும் வயப்படுத்துமாறு இனிமையும் தெளிவும் ஆராய்ச்சித் திறனும் பொருந்தச் சொற்பொழிவு நிகழ்த்தும் வல்லமை படைத்தவர். இவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்துச் செந்தமிழ்ப் பத்திரிகை தோன்றியபோது முதற் பதிப்பாசிரியராயிருந்து ஆராய்ச்சித்துறையில் பலர்க்கும் வழிகாட்டினர். பின்னர்ச் சில யாண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துத் தமிழாராய்ச்சியாளராக இருந்துள்ளார்.

இவர் செய்த நூல்கள்: புவியெழுபது, பாரி காதை, ஸ்ரீகீதை மொழிபெயர்ப்பு, சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பு, பாரதநீதி வெண்பா, கடவுள்மாலை, வஞ்சிமாநகர், நல்லிசைப்புலமை மெல்லியலார், தமிழ் மொழி வரலாறு, குறுந்தொகை விளக்கம் முதலியன. வை. மு. கோ.

இராச்சிய அபகாரி (Tyrant) என்பது பண்டைய கிரீஸில், சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் ஆட்சிப்பதவியை அடைந்தவனுக்குப் பெயர். இராச்சிய அபகாரி செங்கோலனாகவும் இருக்கலாம். அவன் பதவிக்கு வந்த முறைதான் தவறேயன்றிப் பதவியை வகிக்கும் முறை தவறில்லை. பெரும்பாலும் இராச்சிய அபகாரிகள் சுயநலம் கருதியே ஆள்வர் என்பது அரிஸ்டாட்டிலின் கருத்து. ஆகையால் பிற்காலத்தில், இராச்சிய அபகாரியைக் குறித்த 'டைரன்ட்' (Tyrant) என்னும் சொல் கொடுங்கோலனைக் குறிப்பதாயிற்று.

கிரீஸில் இராச்சிய அபகாரிகள் தோன்றியதற்குப் பல காரணங்கள் உண்டு. பிரபுக்கள் ஆட்சியையும் செல்வர் ஆட்சியையும் எதிர்த்துக் கிளம்பிய பொது மக்களின் பிரதிநிதிகளாகவே முதன்முதலில் இராச்சிய அபகாரிகள் கிரீஸில் தோன்றினர். கிரேக்க வரலாறுகளில் கி.மு. ஆறாம் நூற்றாண்டை இராச்சிய அபகாரிகள் காலம் என்று கூறலாம். அவர்களில் தலையாயவன் லைசிஸ் டிரேடஸ் என்பவன். சிசிலித் தீவில் ஆண்ட ஹீரோ, டயனீஷஸ் முதலிய இராச்சிய அபகாரிகள் நாட்டின் நன்மைக்குப் பலவிதங்களிலும் உழைத்துள்ளனர்.

இராச்சிய சோஷலிசம் (State Socialism) என்பது மார்க்கிச சோஷலிசத்தைச் செயலில் புகுத்துவதாகும். இது 1872-ல் நடந்த இசெனாச் (Eisenach) காங்கிரசிலிருந்து தொடங்கியதாகச் சொல்லலாம். இக்கொள்கையானது அரசாங்கம் அடிப்படையான சமூக இயக்கம் என்னும் முறையில் அதன் முக்கியத்துவத்தைப் பெருக்குகின்றது. அரசாங்கம் அமைதியை நிலைநாட்டுவதோடு நின்றுவிடாமல் தொழில்களை நிருவகித்தல் போன்ற பொருளாதாரச் செயல்களில் ஈடுபடற்பாலது. அடிப்படைத் தொழில்களை அரசாங்கம் நடத்தி, உற்பத்தியைப் பெருக்கி, நாட்டு மக்களின் நலனை நாடுவதை இராச்சிய சோஷலிசம் ஆதரிக்கின்றது. ஆகவே, அடிப்படைத் தொழில்களைத் தேசியமயமாக்குதல் இராச்சிய சோஷலிசத்தின் முக்கிய இயல்பாகும்.மேலும் இம்முறைப்படி முற்போக்கான வரித் திட்டங்களின் மூலம் மக்களிடையே நிலவும் வருமான சொத்து ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்க அரசாங்கம் முற்படும். தொழிற் சட்டங்களின் மூலம் தொழிலாளர்களின் சலுகைகளைப் பேணுதல், வேலையின்மை, நோய், முதுமை முதலியவைகளுக்கு எதிராகச் சமூக இன்ஷுரன்சு திட்டத்தை நடத்தி, மக்களின் நலத்தைப் பேணுதல் முதலியனவும் அரசாங்கத்தின் செயல்களாக அமையும். ஆகவே இம்முறை ஐரோப்பிய நாட்டு அரசியல் அறிஞர் பிஸ்மார்க் என்பவரின் சமூகத் திட்டத்தைச் சார்ந்ததாகும் எனவும் கருதப்படுகிறது. ஓ. இரா. கி.

இராச்சியத்தின் அதிகார எல்லை (The Sphere of the State) : இராச்சியம் செயற்பாலவாய தொழில்கள் யாவை? அதன் அதிகாரத்திற்கு எல்லையுண்டா? உண்டாயின் அது எத்தன்மையது என்பவை அரசியல் ஆராய்ச்சியின் அடிப்படை வினாக்கள்.

பண்டைக் காலங்களில் ஒவ்வொரு நகரும் தனது தற்காப்புக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தது. நகரைச் சுற்றி மதிலெழுப்பிக்கோட்டை கட்டுதலும், அகழியிடுதலும் தற்காப்பிற்கான ஏற்பாடுகளிற் சில. தமிழ் நாட்டுத் தற்காப்புப் போர்முறைகள் தொல்காப்பியம், திருக்குறள், புறப்பொருள் வெண்பாமாலை முதலிய நூல்களில் கூறப்பட்டுள்ளன. நகரப் பாதுகாப்பிற்கு நகரமாந்தரும் பொறுப்புடையராயிருந்தனர். இவர்கள் போ தாவிடில் கூலிக்கு ஆட்களைச் சேர்த்துத் தாற்காலிகப் படைகளை நிறுவுவதும் உண்டு. நாட்டுப்படை என்றும் கூலிப்படை என்றும் கூறப்படுவன இவைகளேயாம், இவற்றை நோக்குமிடத்துப் பண்டைய இராச்சியங்கள் பிற நாட்டாருடைய ஆக்கிரமிப்பிலிருந்து தம் நாட்டைக் காத்துக் கொள்வதே பிரதானமான இராச்சிய அலுவலாகக் கருதினவென்றும் கொள்ள இடமுண்டாகிறது. மௌரியர்களுடைய ஆட்சியைப் பற்றியும், மற்றும் ஏனைய பழைய இந்திய இராச்சியங்களின் செலவு இனங்களைப் பற்றியும் ஆராயுமிடத்து, அவர்கள் தற்காப்பிற்கான மூலப்படைகளை வைத்துக்கொள்வதற்காக ஏராளமாகச் செலவிட்டு வந்தனர் என்று தெரியவருகிறது. இந்நிலைமை இன்றைக்கும் மாறவில்லை. நம்முடைய இராச்சியங்களின் வருடாந்தர வரவு செலவுத்