பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராச்சியத்தின் அதிகார எல்லை

56

இராச்சியத்தின் அதிகார எல்லை

தினரை மற்றொரு கூட்டத்தினர் அடக்கியாளுவதனால் உண்டாவதே இராச்சியம் என்னும் ஏற்பாடு; இந்த இராச்சியத்தை அழித்தாலொழிய மக்களுடைய நல்வாழ்வு சாத்தியமாகாது. இதையே 'ஆட்சிவேண்டாக் கொள்கை' (Anarchism) என்பர். சமூக நலன்களைப் பாதுகாக்கும் தொழிலில் இராச்சியம் இன்றியமையாத ஒரு பகுதி என்று கருதுவது ஒருபுறமிருக்க, இவ்வாட்சி வேண்டாக்கொள்கை இராச்சியம் சமூக முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிறது என்றும் கருதுகிறது. தனி மனிதனின் சுதந்திரத்தையே முக்கியமானதாகக் கருதி இராச்சியத்தின் அலுவல்கள் சமூக அலுவல்களில் ஒரு சிறு பகுதியே என்று கொள்பவர்கள் தனித்துவம் (Individualism) என்னும் கொள்கையையுடையவர்கள், 18ஆம் நூற்றாண்டினிறுதியிலும் 19ஆம் நூற்றாண்டு முழுவதிலும் இக்கொள்கை பலரால் போற்றப்பட்டு வந்துள்ளது. பொருளாதாரத் தலையிடாமைக் கொள்கை (Laissez Faire) 18-ஆம் நூற்றாண்டினிறுதியில் தோன்றிற்று. மக்களுடைய பொருளாதார விவகாரங்களில் இராச்சியம் தலையிடக்கூடாது என்பது இக் கொள்கை. தனி மனிதர்களுக்குள்ள சொத்துரிமை, பூரண சுதந்திரம் முதலியவை புனிதமான உரிமைகள் என்றும், இவ்வுரிமைகள் கெடாமல் மேற்பார்ப்பதே இராச்சியத்தின் கடமை என்றும் கருதுவர் தனித்துவக் கோட்பாடுடையவர்கள். இதையே வேறொரு விதமாகக் கூறுபவர்கள் லிபரல் கொள்கையை உடையவர்கள். இவர்களுடைய கொள்கையும் தனித்துவக் கொள்கைதான். மக்களுடைய நன்மையைக் கருதிச் சட்டமியற்றுவதும், சமூக நலன் களுக்கான பிற அலுவல்களை மேற்கொள்ளுவதும் இராச்சியத்தின் நியாயமான வேலைகளே என்றும் இவர்கள் கருதுவர், ஆயினும் தனி மனிதர்களின் சுதந்திரத்தில் ஓரளவுக்கு மிஞ்சி இராச்சியம் தலையிடுவது தவறு என்னும் தனித்துவக் கோட்பாடே இவர்களுடைய தத்துவத்தின் அடிப்படையாம்.

இத்தனித்துவக் கோட்பாடுகளுக்கு எதிரிடையாகக் கூட்டுத்துவக் (Collectivist) கோட்பாடுகள் சில உண்டு. இக்கோட்பாடுடையவர்கள் தனி மனிதர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கே இராச்சியத்தின் தலையீடு தேவையானது என்பர். "இராச்சியத்தின் உதவியில்லாமல் எளியவர்களும் பலவீனர்களும் மற்றவர்களுடைய சுரண்டலினின்றும் (Exploitation) தங்களைக் காத்துக்கொள்ள முடியாது ; கட்டாயக் கல்வி, பொது சுகாதாரம், தபால், ரெயில், மராமத்து முதலிய தேசிய அலுவல்களைத் தனி மனிதர்கள் ஏற்று நடத்துவதைக் காட்டிலும் இராச்சியம் நடத்துவதே சிறந்தது. இப்படியே இராச்சியம் மக்களின் வாழ்க்கையில் பல பகுதிகளின் நடவடிக்கைகளைத் தானே மேற்கொண்டு செய்வது அதிகாரத்தை விரும்பியன்று; அக்குடிகளின் நன்மையைக் கருகியே. பண்டைக் காலத்திலிருந்ததைவிடத் தற்காலத்தில் இராச்சியத்தின் அலுவல்கள் பெரிதும் மிகுந்துவிட்டமையால் இராச்சியத்தின் தலையீடு தடுக்க முடியாத விளைவு, அதில் தவறில்லை " என்பன போன்றவை கூட்டுத்துவத்தை ஆதரிப்பவர்களின் கருத்து.

இக்கூட்டுத்துவ முறையால் இராச்சியத்திற்கும் குழுவிற்கும் அதிகாரம் மிகுந்து தனிமனிதர்களின் சுதந்திர எல்லை குறுக நேரிடுகிறது. இராச்சியத்தின் அதிகாரம் மாறுவது இருவகையில் நேரிடக்கூடும். பாசிசக் கொள்கை, நாஜிக் கொள்கை முதலியவைகளும் இராச்சியத்தின் அதிகாரத்தையே முக்கியமாகக் கருதுகின்றன. இராச்சியத்தின் நன்மைக்காகவோ பெருமைக்காகவோ தனி மனிதர்கள் தமது சுதந்திரத்தைத் தியாகம் செய்துவிட வேண்டும் என்பதே அக்கோட்பாடுகளின் சாரம். "தனி மனிதன் தான் தனிப்பட்டுச் சுதந்திரத்தை அனுபவிப்பதால் பெறும் பயனைவிட இராச்சியத்தின் மேன்மைக்காகத் தான் செய்யவேண்டிய கடமைகளைச் செய்வதன்மூலம் பெறும் பயனே உண்மையான சுதந்திரமாம். அதுவே போற்றவும் விரும்பவும் தக்கது" என்றும் அக்கோட்பாடுடையவர்கள் கூறுவர். அரசியல் பொருளாதார முறைகளில் இக்கொள்கைகளை வலசாரிக் கொள்கையாகவே கருதுவர். இடசாரிக் கொள்கைகளான சோஷலிசம், கம்யூனிசம் முதலியவை கூட்டுத்துவ அடிப்படையில் இயங்குவனவாம். பொதுநலத்துக்காகத் (பொதுப் பாதுகாவலுக்காகத்) தனி மனிதர்கள் தங்கள் சுதந்திரத்தைத் தியாகம் செய்வது என்பதே சோஷலிசக் கொள்கையிலும் வேண்டப்படுவதாம். ஆகவே கூட்டுத்துவம் வலசாரி, இடசாரி என இருவகைப்படுகின்றது.

தனித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகத் தத்துவம் வெறுங் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து, உண்மையில் வாழ்க்கையில் நாம் காணும் நிலைமையைப் போதிய அளவு கவனிப்பதில்லை என்னும் கருத்தோடு சமூக நல இராச்சியத்தை (Welfare state) ஸ்தாபிக்க விரும்பும் தற்காலக் கொள்கையும் கூட்டுத்துவக் கொள்கைதான். இச் சமூக நல இராச்சியம் மனிதனுடைய நலன்கள் முழுவதற்கும் உள்ள பொறுப்பைத் தானே ஏற்றுக் கொள்ளுகிறது. மனித வாழ்வின் இன்ப துன்பங்களுக்கான எல்லாப் பொறுப்பையும் இராச்சியமே ஏற்றுக்கொள்வது என்பதுதான் கூட்டுத்துவத்தின் முறையாம். இதனால் மக்கள் எதிர்பாராத அல்லது பிற வகையில் தவிர்க்க முடியாத இன்னல்களினின்றும் அவர்களை இராச்சியம் காக்கின்றது. இவ்வளவிற்கு இராச்சியத்தின் அதிகார எல்லையை விரிவாக்குவதற்குத் தனி மனிதர்கள் தங்கள் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க வேண்டிவரும். வாழ்க்கையில் தனி மனிதர்கள் வெற்றியடைவதற்கான பொறுப்பை இராச்சியம் ஏற்றுக்கொள்ளுமாயின் இராச்சியம் விதிக்கும் பலவேறு கட்டுப்பாடுகளுக்கும் அடங்கித் தனி மனிதர்கள் வாழ வேண்டியவராவர். பூரணமான கூட்டுத்துவம் நிலவும் சமூகத்தில் அதன் இராச்சியத்தின் அதிகாரம் மக்கள் வாழ்க்கைத் தேவை களை அவர்களுக்கு அளிக்கக்கூடிய அளவுக்கு வளர வேண்டும். தேவைகள் விரிந்து வரும் அளவுக்கு அரசாங்க அதிகாரமும் அவ்வப்போது பெருகிக் கொண்டிருக்கும்.

இவ்வாறு இராச்சியத்திற்கு அளவிறந்த அதிகாரங்களை யளிப்பதால் இரண்டு அபாயங்கள் ஏற்படலாம். தனி மனிதனுடைய ஆளுமையின் (Personality) மதிப்புக் கெட்டுவிடும். ஒவ்வொருவருக்கும் ஒருவீதத் தனிச்சிறப்பும் தன்மையும் திறமையும் உண்டு. அவற்றிற்கேற்ப அவர் முழு வளர்ச்சியையும் அடைய அவருக்கு உரிமையுண்டு. இது தனி மனிதனுக்குச் சுதந்திரம் இருந்தாலொழிய இயலாததொன்றாகும் என்னும் எண்ணத்திற்குக் கூட்டுத்துவத்தில் இடமில்லையாகையால் தனி மனிதர்களின் சுதந்திரம் மறைந்துவிடும் என்பது தெளிவு. மேலும் இராச்சியத்திற்கு அளவிறந்த அதிகாரம் அளிப்பதாலும், அதை மேற்பார்க்கக்கூடிய நிலையம் வேறொன்றும் இல்லையாதலாலும், அரசியல் அதிகாரம் ஒழுங்கற்ற முறைகளில் செலுத்தப்படலாம். இதனால் இறுதியில் பொதுமக்களுக்குக் கேடு விளையும்.

கொள்கை நிலையில் இராச்சியத்தின் எல்லையைப் பற்றி இவ்வாறு பலவகையாகக் கூறக்கூடும்.