பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமாயணம்

70

இராமாயணம்

களும் உலகத்தை உய்விக்க வந்த இராமருடன்கூட ஒத்துழைக்கும் விசித்திரம் இராமாயணக் காவியத்திற்கு ஒரு தனிச் சிறப்பைத் தருகின்றது. பற்றையும் பயனையும் விட்டுச் செயல் புரிதல் என்ற கீதை இலக்கணத்திற்குப் பரதர் பாதுகா பட்டாபிஷேகம் செய்து அரசு புரிந்த வரலாறு பெரிய உதாரணமாகின்றது. கீதையில் இறுதியாகச் சொல்லப்பட்ட பிரபத்தி அல்லது சரணாகதியை இராமாயணம் முழுதும் சொல்லுகிறது எனவும், அத்தகைய சரணாகதிக்கு விபீஷணன் இராவணனை விட்டு இராமனிடம் சரண் அடைந்ததே மேலான உதாரணம் எனவும் ஆன்றோர் கூறுகின்றனர். இன்னும் கீதையில் காணப்படும் அவதார தத்துவமும் இராமாயணக் கதையையே ஆதாரமாகக் கொண்டிருக்கிறது.

தந்தையின் சொல்லைக் காப்பாற்றுவதற்காகக் கதாநாயகரான இராமர் வனஞ்சென்றதையே கருவாகக் கொண்டு வளர்ந்தது இராமகதை; அச்செயலை யொட்டியே ஏனைய பாத்திரங்களின் செயல்கள் உயர்வு பெறுகின்றன. இலட்சுமணர் அவர்பின் சென்று எல்லா அடிமைப்பணிகளும் செய்ததும், பரதர் தமக்குக் கிடைத்த இராச்சியத்தைத் துறந்து பாதுகா இராச்சியத்தை நடத்திக் காட்டியதும், சத்துருக்கனர் பரதரைப் பின்பற்றி அடியார்க்கு அடியாராக வாழ்ந்து வந்ததும் அவ்வனவாசத்தால் விளைந்தவையே. இவற்றிற்கெல்லாம் சிகரம்போல் உள்ளது சீதா தேவியின் கற்பு நிலை. இராமாயணக் காவியம் முழுவதுமே சீதையின் பெருங்கதை என்று வால்மீகியே கூறியிருக்கின்றார். இராவணன் மனைவி மண்டோதரி புலம்பியபோது சீதையின் கற்புக் கனலே தன் கணவனை நீறுபடச் செய்தது என்று சொல்லியிருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கதாகும்.

இராமர் முடிசூடிய பின்பு இராமாயணத்தை நிறைவெய்தச் செய்தபோது, நடந்துகொண்ட மேன்மையை அறிந்தே அவருடைய குடிகளும் அவ்விதம் ஒழுகினார்கள் என்று கூறப்படுகின்றது. அதிலிருந்து அஹிம்சை என்பதே பரம தர்மம் என்பதும், இராமராச்சியம் என்பதன் இலக்கணமும் அதுவே யென்பதும் நன்கு புலனாகின்றன.

இந்துக்களுடைய மதக் கொள்கைகளுக்கும் நாகரிக அமைப்பிற்கும் வால்மீகியின் இராமாயணமே அடி ஆதாரமாக ஆகின்றது. அதற்கு வழி நூல்களாகத் தோன்றி, அவ்விதமே சிறப்புற்று விளங்கும் நூல்கள் தமிழில் கம்ப ராமாயணமும் இந்தியில் இராமசரிதமானசம் என்ற துளசிதாச ராமாயணமும் ஆகின்றன. தி. சு.

வால்மீகி ராமாயணம்

உலக இலக்கியங்களில் தலைசிறந்து விளங்கும் மகா காவியங்களில் வால்மீகி ராமாயணமும் ஒன்று. மனிதன் தன் நடத்தையால் தெய்வத் தன்மை அடைவதே வாழ்க்கையின் மேலான குறிக்கோள் என்று எண்ணுவோர் அனைவரும் இராமாயணத்தை உலக இலக்கியங்களுள் உன்னதமானதாகக் கொண்டாடத்தான் வேண்டும். 2000 ஆண்டுகளாக இந்திய சமூகத்தின் பண்பாட்டுக்கு அடிப்படையாக இருந்து வந்திருப்பதும் இந்தக் காவியமே.

கவியும் அவர் காலமும் : நாரதர் வாக்கிலிருந்து ராம கதையைக் கேட்ட வால்மீகி என்ற தவசி காட்டில் போகும்போது சேர்ந்திருந்த இரண்டு அன்றில் பறவைகளில் ஆணை வேடன் அடிக்கக்கண்டு துன்பந்தாங்கமாட்டாமல் தன்னையறியாமலே அவனைச் சபித்தார் என்றும், அந்தச் சொற்கள் ஓர் அழகிய சுலோகமாக வெளிப்பட்டதைக் கண்டு வியந்தார் என்றும், அதைப்பற்றிச் சிந்தனையில் அவர் ஆழ்ந்திருந்தபோது பிரமனே நேரில் வந்து இராமனுடைய சரித்திரத்தை வால்மீகி வாயிலிருந்து வந்த சுலோகமாகிய சந்தத்தில் அமைத்துப் பாடவேண்டுமென்று ரிஷிக்கு உத்தரவிட்டுச் சென்றார் என்றும் பாலகாண்டத்தின் முதல் நான்கு சருக்கங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. உத்தரகாண்டத்திலும் வால்மீகியைப் பற்றிய சில விவரங்கள் தரப்பட்டிருக்கின்றன. இராமபிரான் திரேதாயுகத்தில் அவதரித்தார் என்றும், வால்மீகியும் அவருக்குச் சமகாலத்தவர் என்றும் பழைய நம்பிக்கை உண்டு. தைத்திரியப் பிராதிசாக்கியையிலும் வாஜஸநேயீ சங்கிதையிலும் வால்மீகி என்ற ரிஷி கூறப்படுகிறார். வியாசரும் மகாபாரதத்தில் அவரைப் புகழ்ந்து பேசுகிறார்.

இந்த முடிவுகளைத் தற்கால ஆராய்ச்சியாளர் பொதுவாக ஒப்புக்கொள்ளவில்லை. வின்டர்னிட்ஸ் என்பவர் வால்மீகி என்ற ஒரு கவி இருந்தது உண்மை எனினும் அவர் இராமாயணத்தைக் கற்பனை செய்யவில்லை என்றும், ஊரூராகச் சென்று பழம்பாட்டுக்களைப் பாடிப் பிழைப்பவர்களிடமிருந்து இராமனைப்பற்றிய பழைய பாடல்களைப்பொறுக்கிச் சேர்த்து ஒருமைப்படுத்தி ஆதிராமாயணத்தை உருவாக்கியதே அவர் செய்த வேலை என்றும் எண்ணுகிறார். ஆராய்ச்சியாளர்களின் மற்ற முடிவுகளைச் சுருக்கமாக இங்கே குறிப்போம் :

சுமார் 500 சருக்கங்களும் 24,000 சுலோகங்களும் கொண்டு தற்காலம் வழங்கும் இராமாயணம் கிறிஸ்துவுக்குமுன் முதல் நூற்றாண்டில்தான் உருவாகியிருக்கவேண்டும். அதில் சொல்லப்படும் ரிஷிகளும் இராசிச் சக்கரமும் (Zodiac) அந்தக் காலந்தொட்டே வழங்கி வருகின்றன. அதற்குமுன் ஆரியர் சந்திரனையும் நட்சத்திரங்களையும் கொண்டே வேள்விகள் முதலிய கருமங்களுக்குரிய காலங்களைக் கணக்கிட்டு வந்தனர். தவிர உத்தர காண்டத்தில் ஓரிடத்தில் குறிக்கப்படும் பதஞ்சலியின் மகா பாஷியம் கி. மு. 150-ல் இயற்றப்பட்டதாக நிருணயிக்கப்பட்டிருப்பதால் அதற்குப் பிறகே இராமாயணம் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தத் தொகுப்புத் தற்காலம் வழங்கும் பாரதம் உருவான பிறகே சேர்க்கப்பட்டது. பாரதத்தில் வரும் இராமோபாக்கியானம் இராமாயணத்திற்கு முற்பட்டது.

பிற்காலங்களில் வந்த கவிகளும் மற்றவரும் இராமாயணத்தில் பல இடைச் செருகல்களைச் செய்து, சுமார் 6000 சுலோகங்களுக்குட்பட்ட ஆதி இராமாயணத்தை நான்மடங்கு பெருக்கிவிட்டனர் என்று யாக்கோபி கருதுகிறார். அவதாரம் என்னும் பௌத்த மதக்கொள்கை, விஷ்ணுவின் பெருமைகளைக் கூறும் பாகங்கள். அனுஷ்டுப் என்ற சுலோகத்தைத் தவிர மற்றச் சந்தங்களில் அமைக்கப்பட்ட பாட்டுக்கள் இவையெல்லாம் இவ்விதம் சேர்க்கப்பட்டவை யென்றும், முக்கியமாகப் பாலகாண்டத்தில் பல பாகங்களும் உத்தரகாண்டத்தின் பெரும்பாகமும் இடைச் செருகல்கள் என்றும் சொல்லப்படுகின்றன.

மேற்கூறிய நவீன ஆராய்ச்சியாளரின் முடிவுகளுக்குப் பல ஆட்சேபங்கள் உண்டு. அனுஷ்டுப் அல்லாத சந்தங்களில் அமைக்கப்பட்ட பாடல்களை நீக்கிவிட்டால் பலவிடங்களில் கதைக் கோவை கெட்டுப்போகும். ஆதிராமாயணம் வேள்விகளைப் போற்றாத காலத்தில் பாடப்பட்டிருக்க வேண்டும் என்றும், அந்தக் காலத்தில் பிராமணர், க்ஷத்திரியர் என்ற பிரிவுகள் வரையறுக்கப்படவில்லை என்றும், பிராமணரைப்