பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல்பு பிறழ்ந்த நடத்தை

345


செல்லமாக வளர்க்கும்பொழுது பிற குழவிகள் பொறாமை அடைகின்றன. புதியதொரு குழவி பிறந்ததும் தாயின் நாட்டம் அனைத்தினையும் அது கவர்வது கண்டு முந்திய குழவி வயிறு எரிந்து போகின்றது. செல்லக் குழவியோடு போட்டியிடும்போது தன் கீழ்மையை எண்ணி மற்றைய குழவி வாடி அக்கீழ்மை நிலையை நீக்கிக் கொள்வதும் உண்டு. இவ்வாறு பொறாமை பட்டுப் போட்டி போடும் குழவிகளோடு மறைமுகமாகவே பெற்றோரிடமிருந்து வேண்டியவற்றையெல்லாம் பெற்று வாழ அச்செல்லக் குழவிகளும் பழகி விடுகின்றன. ஆனால், பெற்றோர் நடுநிலை பூண்டு வருவார்களானால், தம்பியோ தங்கையோ பிறக்குந்தோறும் மூத்த குழவி பொறாமைப்படாது. குழவியின் உலகினைக் குடும்பத்தின் அளவாகவே குறுக்கிவிடாமல் படிப் படியாக வயதிற்கு ஏற்பப் பரந்து அகன்று வருமாறு செய்து, வெளி உலகினும் அம் மூத்த குழவிகள் ஈடுபடுமாறு பழக்கி விடுதல் வேண்டும். அவ்வாறு பழக்கி விட்டால் பொறாமை எண்ணங்கள் தோன்றுவதற்கே இடமில்லாது போகும். சில சமயம் தாய் ஒரு குழவியையும், தந்தை ஒரு குழவியையும் செல்லமாக வளர்த்து வருவதும் உண்டு. இது கண்டு பிற குழவிகள் மனம் எரிந்து நிற்கின்றன. ஒரு குடும்பத்தில் அன்பு பெற்ற குழந்தையும் அன்புபெறாத குழந்தையும் பாக்கியமற்றவர்களே. அதிக அன்பு பெற்ற குழந்தை மேலே குறிப்பிட்ட அதிகச் செல்லம் கொஞ்சப்பெற்ற குழந்தை போலாகும். சலுகை பெறாத குழந்தையிடம் பொறாமை யுண்டாகும். நியாயமின்மையுணர்ச்சியாலும் தகுந்த அன்பை இழந்தமையாலும் இதனிடம் போரிடும் மனப்பான்மை வளரும்; அது பெற்றோரிடத்திலும் பிறரிடத்திலும் காட்டவும் பெறும். இக்குழந்தை மனவன்மையை இழந்து போவதும் உண்டு எனவே, பெற்றோர்கள் இத்தகைய பிறழ்ச்சி தம்மிடம் நிலவாது பார்த்துக்கொள்ள வேண்டும். இம்மாதிரி சலுகை இழந்த குழந்தைகட்கு ஆசிரியர்களாவது அன்பு காட்ட வேண்டும்.

(iv) சரியான தொடர்பின்மை: சில குடும்பங்களில் பெற்றோர்களுக்கும் குழந்தைகட்கும் சரியான தொடர்பே இருப்பதில்லை. இதனால் குழவிகள் மிகவும் வருந்தக்கூடும். பெற்றோர்கள் விரும்பாத குழவிகளும் உள்ளன. இக்குழந்தைகள் அன்பு பெறாவிடினும் பெற்றோர்களின் கவனத்தைப் பெற முயலுவர். அன்பு காட்டாதவர்களை எதிர்ப்பர்; அவர்கட்குத் தொல்லைகள் தருவர். பொய் சொல்லும் குணம் இவர்களிடம் இயல்பாகக் காணப்பெறும். இவர்கள் புரட்சிக்காரர்களாகவும்,