பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

376

கல்வி உளவியல் கோட்பாடுகள்


இறுதியில் அவர், மாலையில் பள்ளிவிட்டதும் துரைராஜைத் தன் அறையில் தனியாகச் சந்திக்குமாறு கூறினார். ஒவ்வொருவரும் அங்ஙனமே தன்னைத் தனிமையில் காணவேண்டும் என்றும் அறிவித்தார். துரைராஜ் சந்திப்பதாக ஒப்புக்கொண்டான்; சொன்னபடியே செய்தான்.

முதன் முதலில் துரைராஜ் ஆசிரியரைத் தனிமையில் சந்தித்த பொழுது அவன் சொன்னது: "நான் சற்றுக் கடுமையானவன் என்பதைத் தாங்கள் அறிவீர்கள் என நினைக்கின்றேன். சென்ற யாண்டு நான் பயின்ற பள்ளியில் ஆசிரியர் ஒருவரைப் பள்ளியிலிருந்தே விரட்டி விட்டேன்' என்பது. ஆசிரியர் திரு. ப-அதற்கு மறுமொழி ஒன்றும் கூறவில்லை. துரைராஜ் பேசிக்கொண்டே போனான். அவன் சொன்னான்: 'எனக்குத் தடித்த குரல் இருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள் என நினைக்கின்றேன். ஆசிரியர் திரு. ப-தனக்குத் தடித்த குரலைப்பற்றிக் கவலையில்லையென்றும், தான் தகரப் பெட்டித் தொழிற்சாலையில் வேலை செய்து பழக்கம் இருப்பதால் அவ்வொலி தனக்குப் பழக்கப்பட்டதுதான் என்றும் சொல்லி வாளா இருந்தார். பிறகு துரைராஜ் சொன்னான்: “நான் விரும்பினால் மெதுவாகவும் பேச முடியும் என்று. இதற்கு ஆசிரியர் திரு. ப-நேரடியான பதில் சொல்லவில்லை. ஒரு மாணாக்கன் எவ்வளவு உரத்துப் பேசினாலும் அதைப் பற்றித் தான் கவலை கொள்வதில்லை என்று மட்டிலும் பதில் கூறினார். துரைராஜு பிறரிடம் நன்கு பழக வேண்டுமென்றும் அவனுடைய எதிர்காலத்தைப் பற்றிய திட்டத்தில் தான் துணை செய்ய விரும்புவதாகவும், அவனுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தான் துணை செய்வதாகவும் அவர் கூறி, இதற்காகத்தான் தனிமையில் அவனிடம் பேச விரும்பினதாகவும் உரைத்தார். மேலும், அவர் அவனிடம் நாள்தோறும் வகுப்பில் பெயர்களை அழைப்பதால் யாதொரு பயனும் இல்லை என்றும், அதற்குப் பதிலாக இருக்கைப்படம்[1] ஒன்று ஆயத்தம் செய்து அதன்படி மாணாக்கரின் வருகையைச் சரிபார்த்தல் மேல் என்றும் தான் கருதுவதாகக் கூறினார். துரைராஜும் இது தகுந்த திட்டம் என்று ஒப்புக் கொண்டான். பிறகு ஆசிரியர் திரு. ப-அத்திட்டத்தை ஆயத்தம் செய்யும்படியும் வருகிற வாரத்தில் வருகைப் பதிவு செய்யும் பொறுப்பை அவனை மேற்கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார்; அவனும் அங்கனம் செய்வதாக ஒப்புக் கொண்டான்.


  1. 50. இருக்கைப் படம் - Seating chárt.