பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

412

கல்வி உளவியல் கோட்பாடுகள்


தேவைகள் ஆகியவற்றைப்பற்றிப் பொதுமக்கள் நன்கறியச் செய்வது. இரண்டு : சமூகத்தின் விருப்பங்கள், தேவைகள் ஆகியவை பற்றியும் கல்வியைப் பற்றியும் பொதுமக்கள் கொண்டுள்ள கருத்துகளைப் பள்ளி நன்கறியச் செய்வது; அஃதாவது இல்லம், பள்ளி என்ற இரண்டு முக்கிய கல்வி நிலையங்களை ஒன்றோடொன்று நன்முறையில் தொடர்பு கொள்ளச் செய்வதாகும். இந்த உறவினை ஏற்படுத்துவதற்கு நான்கு சாதனங்கள் துணை செய்யும். அவை:

(1) உள்ளுர்ச் செய்தித்தாள்கள், மாணாக்கர் வெளியீடுகள் ஆகியவை.

(2) ஆண்டு அறிக்கைகள், சிற்றறிக்கைகள், மாணாக்கர் கையேடுகள் போன்ற அதிகாரப் பூர்வமான அறிக்கைகள்,

(3) தேர்ச்சி அறிக்கைகள், பெற்றோர்க்கு எழுதும் கடிதங்கள் ஆகியவை;

(4) கதம்பம், பொதுநிகழ்ச்சிகள், காட்சிப்பொருள்கள் போன்றவை.

இவற்றுள் ஆசிரியர்-பெற்றோர் உறவுமுறையினை வளர்க்கக் கூடிய மூன்றாவதாகக் குறிப்பிடப்பெற்றவற்றை மட்டிலும் சிறிது விளக்குவோம்.

பல்லாண்டுகளாகத் தேர்ச்சி அறிக்கைகள்தாம் ஆசிரியர். பெற்றோர் உறவினை நேர்முறையில் வளர்க்கும் சாதனங்களாக இருந்து வந்தன. சாதாரணமாக இவற்றில் மாணாக்கன் பள்ளிக்கு வந்த நாட்கள், மாணாக்கன் ஒவ்வொரு பாடத்திலும் வாங்கின மதிப்பெண்கள் ஆகியவை மட்டிலும்தான் இடம் பெற்றிருந்தன. அண்மைக் காலத்தில் இவற்றில் சில முக்கிய மான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இம்மாற்றங்களைப் பெற்றோர்கள் பெரிதும் விரும்புகின்றனர் எனத் தெரிகின்றது.

மதிப்பெண்களைக் குறிப்பிடுங்கால் அவற்றுடன் ஒவ்வொரு பாடத்திலும் வகுப்பின் சராசரி மதிப்பெண்களும் குறிக்கப் பெறுதல் மிகவும் இன்றியமையாதது. இல்லாவிடில், பெற்றோர்களுக்குத் தங்களுடைய குழந்தைகள் எந்தப் பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது பெறாதவர்கள் என்பது தெரியாது. மேலும், சென்ற தேர்வுக்குப் பிறகு இந்தத் தேர்வில் முன்னேற்றம் அடைந்துள்ளனரா என்பதும் தெரியாது. எடுத் துக்காட்டாக, ஒரு மாணாக்கன் கணக்குத் தேர்விலும் தமிழ்த் தேர்விலும் 45 மதிப்பெண் பெறலாம். கணக்கில் வகுப்பு சராசரி 60 ஆகவும் தமிழில் 35 ஆகவும் இருந்தால், அம் மாணாக்கன் கணக்கில் மட்டம் என்றும், தமிழில் சராசரி மாணாக்கனைவிட மேலான தேர்ச்சி பெற்றுள்ளான் என்பதும் தெளிவாகும்.