நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
55
"தீமையைத் தீமையால் அழிக்க முடியாது தீமையை நன்மையால்தான் வெற்றி பெற முடியும்; பகைவனுக்குக் அருள்வாய் நன்னெஞ்சே!” என்ற காந்தியடிகளது தத்துவத்திலே சரோஜினிதேவியின் மனம் நம்பிக்கைக் கொண்டது.
மேற்கண்ட தத்துவ உண்மையை காந்தியடிகள் மக்களது மனதிலே பதியுமாறு ஒவ்வொரு மேடைதோறும் பேசிவந்தார்; பத்திரிகையிலேயும் தவறாது நாளும் எழுதி வந்தார். இந்த அற்புதமான அகிம்சை நெறி நாட்டிலே ஒரு புதிய திருப்பத்தை மாறுதலை நிகழ்த்தியபடியே இருந்தது.
“காந்தியடிகளது இந்த அரசியல் தாரக மந்திரம் கவியரசியை எவ்வாறு ஆட்கொண்டது என்பது சரோஜினி தேவி வேறொரு வாயிலாக நாட்டுக்குத் தெரிவித்திருப்பதைப் படியுங்கள்:
"தீர்க்கதரிசிகளும், புரோகிதர்களும், அவர்களுடைய கொள்கைகளைப் போற்றட்டும்.”
“அரசர்களும், அமைச்சர்களும், அவர்களுடைய வெற்றிச் செயல்களைப் புகழட்டும்; வேண்டாம் என்று கூறவில்லை; ஆனால்;”
“இறைவனே! தோல்வி கண்டோருக்கு ஆறுதல் கொடுத்து அருள்வாய் வளமை அற்றோருக்குத் தைரியம் அருள்வாய்!"
“கவி பாடி, மெய் மறக்கும் பேறு எனக்கு அளித்து அருள்வாய்!”
-என்று ஒரு கவிதையிலே மகாத்மா மந்திரப் பொருளைக் கவி மூலமாக மக்களுக்கு எடுத்துக் காட்டிப் போற்றினார்; அவர் எழுதிய மற்றொரு பாடலிலே மகாத்மா தத்துவம் கீதமாகத் தவழ்ந்தாடுவதையும் பாருங்கள்: