பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

83

மாம்பூ ஒன்று மலர்ந்து உதிர்ந்த விட்டாலும், பிறகு காயும் கனியும் தோன்றக் காரணமாகின்றதே! ஆனால், செண்பகமே! நீ அவ்வாறு எதனையும் தோற்றுவிப்பதில்லையே! என்றாலும், உன்னைப் பாடாமல் இருக்க முடியவில்லையே! இது நீங்கள் இழைத்த புண்ணியத்தின் பயனோ!" என்று கவியரசி ஒரு செண்பகப் பூவைக் கையிலே எடுத்து வைத்துக் கொண்டு; அதன் நிற அழகோடு கொஞ்சி மகிழ்வார்! இவ்வாறே ஒவ்வொரு பூவையும் பார்த்துப் பார்த்துப் பாடல் புனைந்திட மலர்களின் மலர்ச்சியிலே கரு பெறுவார் சரோஜினி தேவி!

கவிக்குயில் சிறைவாசம் சிறிது நாட்கள் இவ்வாறே நகர்ந்தன! விடுதலை நாளும் வந்தது! தான் வளர்த்த பூஞ்செடிகளையும் அதனதன் வண்ண வண்ணப் பூக்களையும் விட்டு விட்டுப் பிரிய மனமில்லாதவராக அவர் இருந்தார்.

சிறை அதிகாரிகளிடம் தனது விடுதலை நாளை மேலும் ஒரு வாரம் தள்ளித் தாமதமாகப் போடும்படிக் கேட்டுக் கொண்டார்! அதிகாரிகளும் பெண் கைதியின் வேண்டுகோளை ஏற்று அனுமதியும் அளித்தார்கள்! சரோஜினி தேவி வைத்த செடிகள் எல்லாமே மலர்ந்தன பிறகு, சரோஜினி தேவி ஒரு வாரம் கழித்து சிறையிலே இருந்து விடுதலையானார்!

சிறை மீண்ட கவியரசி, வெளியே வந்ததும் 1930-ம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் மகாசபையின் செயற்குழு உறுப்பினர் ஆனார்! தனது பணியை எவ்விதத் தடையுமின்றி வேகமாகவும், பொறுப்பாகவும், உடனுக்குடனும், சமய சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறும் நாட்டுக்காக உழைத்தார்; காந்தியடிகளின் தலைமையிலே இரவு பகல் பாராமல் ஓய்வின்றி சரோஜினி நாயுடு அரும்பாடுபட்டார்!