பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்



ரவீந்திரர் இவ்வளவு பேர்களிடம் கேட்ட கதைகளை எல்லாம் தொகுத்துத் தொகுத்துச் சிந்திப்பார்! வங்காள மொழியிலே உள்ள சொற்களை எல்லாம் புரிந்து கொண்டு, அதற்கு இணையான பொருள் தரும் சொற்களை எல்லாம் தெரிந்து தனிமையிலே இவற்றை எண்ணியெண்ணி- எழுதியெழுதி மனப்பாடம் செய்து மகிழ்வார்.

கவிதைக்குச் சொல்லடுக்குவது கவிஞர்களது இளமைக் காலப் பைத்தியம்: இந்த ஞானக் கிறுக்குதான். சிறுவன் ரவீந்திரனைப் பிற்காலத்தில் ‘கீதாஞ்சலி’ என்ற உலகம் போற்றும் இலக்கியத்தை எழுத வைத்தது. அதன் எதிரொலி தான் தாகூர் பெற்ற நோபல் பரிசு!

தமிழ் நாட்டிலே கூட விடுதலைக் கவிஞர் பாரதியாரை, அவரது தந்தை ‘கணக்கு போட்டு விட்டாயா?’ என்று கேட்டதும், உடனே பாரதியார் கணக்கு, பிணக்கு, மணக்கு, ஆமணக்கு என்று பிதற்றிய படியே தந்தையார் கேட்ட எண்ணத்தைச் சிதறடிப்பாராம்!

“ஏன், விழிக்கிறாய்? என்று தந்தை மீண்டும் பாரதியாரை வலியுறுத்திக் கேட்டால், உடனே அவர், ‘விழி, கழி, சுழி, வழி, குழி, பழி, இழி, பிழி’ என்று சொற்களை அடுக்கிக் கொண்டே போய் தந்தையைச் சொல் ஜால மாயத்திலே மயக்கிவிடுவதும் உண்டாம் என்பர்!

அதனைப் போல, அமரகவி பாரதியாருக்கு வழிகாட்டியாக, ஒரு முன்னோடியாக ரவீந்திரரும் இருந்துள்ளார். பாரதி யாரைப் போல ரவீந்திரர் என்ன செய்தார் என்பதைப் பாருங்கள.