பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



4. தாகூரின் சமயக் கொள்கை


நல்ல குடும்பம் பல்கலைக் கழகம் என்பதற்கேற்ப, தாகூர் குடும்பத்தையே பல்கலைக் கழகம் என்று பெருமிதத்தோடு கூறலாம். அத்தகைய ஒரு கலைக்கழகமாக தாகூர் குடும்பமும் திகழ்ந்தது. தேவேந்திர நாத் வீட்டில் அவர் பெற்ற மக்கள் எப்போதும் அறிஞர்களோடு அளவளாவிக் கொண்டே இருப்பார்கள்! அப்படிப்பட்ட பல்கலைவாணர்களுடன் ரவீந்திரர் பழகும் வாய்ப்பு உருவானது. அதுவும் அவருக்கு உதவியது.

ரவீந்திரரின் பெரிய அண்ணன் பல்கலையில் வல்லவர். அவருடைய தத்துவஞான வித்தகமும், கணக்கியலறிவும் ரவீந்திரரைப் பெரிதும் ஈர்த்தன! அதே நேரத்தில் வங்க மொழியில் பாடல் எழுதுவதில் மிகச் சிறப்பானவர். அவர் தனது தம்பி ரவீந்திரருக்கு நீச்சல் கலையைக் கற்றுக் கொடுத்தார்.

ஐந்தாம் அண்ணன் ஜோதிரீந்திர நாத் ஒரு சமூக சீர்த்திருத்தவாதி. வங்க சமுதாயத்தில் நிலவி வரும் மூடப் பழக்க வழக்கங்களை எதிர்ப்பவர். வங்க மக்களிடையே ஒரு மறுமலர்ச்சி இயக்கம் உருவாக வேண்டும் என்று அரும்பாடு பட்டு வந்தவர்! பிரம்ம சமாஜம் போன்ற சமூக சீர்திருத்த இயக்கங்களுடன் தொடர்பு கொண்டவர்.