பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

65



தினந்தேறும் காலையிலே பள்ளி இசை முழக்கத்தோடு ஆரம்பமாகும்! முடியும்போது இசை ஒலியோடு தான் முடியும். காலை விடியலில் சிறுவர்கள் எழுந்து ஆசிரமத்தை சுற்றியபடியே இசைவலம் வருவார்கள். இந்த இசை ஒலி மற்ற சிறுவர்களையும் எழுப்பிவிடும். சுருக்கமாக, இப்பாடலொலிகள் சிறுவர்களது பள்ளி எழுச்சியாகவே இருக்கும். இங்கே பாடப்படும் பாடல்கள் எல்லாம் கவிஞர் தாகூர் எழுதிய குழந்தைகள் பாடல்களே. காலை, மாலை இரண்டு நேர இறை வழிபாடுகளிலும் இசைஒலிக்கும். அந்தந்த பருவ காலத்துக்கு ஏற்றவாறு பள்ளிக் கூடத்து உள்ளேயே, மாணவர்கள் விருந்தினர்களைச் சூழ்ந்தபடியே திருவிழாக் கொண்டாட்டங்கள் நடைபெறும்.

உழவர்கள் உழத் தொடங்கும் போது, சாந்தி நிகேதனில் உழவர் திருவிழா நடக்கும். அந்த விழா விவசாய மக்களுக்கு மகிழ்ச்சியை விளைவிக்கும். அந்த நேரங்களில் ஆடலுண்டு, பாடலுண்டு, கண்காட்சி மற்றும் நாடக இன்பமும் உண்டு. ஒவ்வொரு விழாவிலும் தாகூரின் நாடகம் அரங்கேறும். இவ்வாறு எழுதப்பட்டது தான் அவர் எழுதிய நாடகங்கள் எல்லாமே!

கவிஞர் தாகூர் சாந்தி நிகேதனத்துக்கான ஆசிரியர்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து நியமித்தார். உலகவாழ்க்கை என்றால் என்ன? மக்கள் அவ்வாழ்க்கையை எவ்வாறு நடத்த வேண்டும்? என்பதைச் சிறுவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் களாக அவர்களை உருவாக்கினார்!

பயனில்லாத, பழங்காலப் பெருமைகளை சொல்வதையும் கற்பிப்பதையும் ஒதுக்கித் தள்ளினார்.