பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

97


என்று இளம் வயது ரவீந்திரரை அவர்கள் விரட்டிவிடுவார்கள். அப்போது கூட எங்காவது ஓரிடத்தில் மறைந்து கொண்டு ரவீந்திரர் நாடகம் பார்ப்பார்.

ஓரளவு ரவீந்திரர் வளர்ந்த பிறகு, தனது அண்ணன்களோடு சேர்ந்து அவரும் குடும்பம் நடத்தும் நாடகத்தில் நடிப்பார். பிறகு, அவரே பல புதிய நாடகங்களை எழுதும் நாடக ஆசிரியரானார்! அப்போதும் அவர் நாடக மேடையை மறக்கவில்லை. மேடை ஏறி நடிக்கும் கலை தாகூருக்கு மிக விருப்பமான கலையாக இருந்தது. பத்தொன்பதாம் வயதில் “வால் மீகி பிர தீபம்” என்று எழுத முனைந்த அவர், தனது இறுதி ஆண்டுவரை அக்கலைக்காகவே உழைத்தார். அவர் நடித்த முதல் கதாபாத்திரம் எது தெரியுமா? வால்மிகி மகரிஷி! இது கவிஞர் வீட்டிலேயே நடத்தப்பட்ட நாடகம். வயதான காலத்திலும் தாகூர் நடிகராகவே இருந்தார். முடிந்தபோதெல்லாம், அவர் சாந்திநிகேதன் நடத்தும் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

காந்தியடிகள் மூலம் 60 ஆயிரம்
நிதி பெற்ற கதை

கவிஞர் தாகூர் 1936-ஆம் ஆண்டு புது தில்லிக்குச் சென்றார். காந்தியடிகளைக் கண்டார். இருவரும் கலந்துரையாடி மகிழ்ந்தார்கள். அப்போது கவிஞர் வயது எழுபத்தைந்து. இந்த தள்ளாத வயோதிகத்தில் இந்திய நாட்டுப் பெருங்கவிஞர்; உலகப் புகழ் பெற்ற கவிஞர்; விசுவபாரதி உலகக் கலைக்கழகத்தை வளர்க்க இப்படி ஊர் ஊராகச் சுற்றி அலைகிறாரே என்று கவலைப்பட்டகருணாமூர்த்தி காந்தி பெருமான்,