பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

காஞ்சி வாழ்க்கை


என்னுடன் தமிழ் பயின்ற மாணவர்களுள் ஒருசிலர் இன்னும் நினைவில் உள்ளனர். வாழ்விலும் சிலர் கலந்துள்ளனர். சோமசுந்தரம் என்பார் பெருமழைப் புலவராக உள்ளார். மற்றொரு சோமசுந்தரம் தஞ்சை மாவட்டத்தில் உயர் நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகின்றார். வன்மீகநாதன் புதுக்கோட்டைக் கல்லூரியில் முதல்வராக உள்ளார். இவ்வாறே இன்னும் சிலர் உள்ளனர். தமிழ் ‘எம்.ஏ.’ வகுப்பும் அதுபோது அங்கே சிறந்திருந்தது. திருவாளர்கள் சரவண ஆறுமுக முதலியார், அ.சிதம்பர நாத செட்டியார், ஆலாலசுந்தரனார், சோதிமுத்து, மீனாட்சி சுந்தரம், முத்துசிவம் போன்றார் அதுபோது ‘எம்.ஏ.’ வகுப்பில் பயின்று வந்தனர். முதலாண்டில் அவர்களோடெல்லாம் அதிகமாகப் பழகும் வாய்ப்பினை பெறவில்லை என்றாலும் ஓரளவு அவர்களை அறிந்திருந்தேன். அடுத்த இரண்டாம் ஆண்டிலே அவர்களோடெல்லாம் நெருங்கிப் பழக வாய்ப்பும் வசதியும் ஏற்பட்டன.

முதலாண்டு மௌனசுவாமி மடத்தில் தங்கியிருந்த நான் அடுத்த ஆண்டு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இலவச விடுதியில் (old block) இடம்பெற்றேன். அவ்விடத்தில் தற்போது இசைக்கல்லூரியும் விருந்தினர் விடுதியும் ஓங்கி நிற்கின்றன. அங்கே எனக்கு அறிமுகமான நண்பர் பலர். உணவு மட்டும் பொதுவிடுதியிலே ஆதலால் பல அன்பர்கள் அறிமுகமாயினர். பல்கலைக்கழக கூட்டங்கள் பலவற்றிலும் பங்குகொண்டேன். பாரதியார் இல்லத்திற்கு அடிக்கடி செல்வது வழக்கம். அவரும் என்னை அவர் மகன் எனவே போற்றிப் புரந்தார். அவர் தம் இளம்பெண்கள் இருவருடனும் விளையாடிப் பொழுதுபோக்குவேன் நான். அதைக்கண்ட பாரதியார், நான் பல்கலைக்கழகத்தை விட்டு வரும்போது அப்பிள்ளைகளின் புகைப்படத்தை எனக்கு அன்பளிப்பாக ஈந்தார்.(அந்த இருவரில் ஒருவரே இப்போது மருத்துவத்துறையில் சிறந்தவராக, உயர்த்தவராக சென்னை மருத்துவக் கல்லூரி துணை முதல்வராகப் பணிபுரிந்துவரும் திருமதி லலிதா காமேஸ்வரன் என்பவராவர்).