இந்துமத பாடசாலை
47
செய்தலும் வேண்டும். அவற்றிற்கெனச் சில கவிதைகள், சொற்போர்கள், கட்டுரைகள் எழுதித் தருவேன். அந்தப் பழக்கமே பின்னால் என்னை ஓரளவு எழுத்தாளனாக வளர்க்க உதவி செய்தது. அந்தக் காலத்தில் அந்த இளஞ்செல்வங்களோடு கலந்து, பழகி, விளையாடி, அவற்றுக்கிடையில் பாடம் சொல்லிக் கொடுத்த பண்பு நலன் சிறந்ததாகும். வீட்டிற்கு மாலையில் திரும்பிவிடுவேன். சில சமயங்களில் இரவிலும் பள்ளியிலேயே தங்கிவிடுவேன். எனினும் எனது அன்னையார் இரவு எந்நேரமாயினும், யாராவது துணையை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிடுமாறு வற்புறுத்துவார்கள். எனவே பெரும்பாலும் ஊர் திரும்பிவிடுவேன்.
இந்துமத பாடசாலையில் பணியாற்றும்போது எனக்கு அறிமுகமான அன்பர் பலராவர். உடன் இருந்த ஆசிரியர் அனைவரும் எனக்கு உற்ற தோழர்களாக இருந்து வேண்டுவன செய்வர். அந்தப் பள்ளியில் நான் ஒரே ஆண்டுதான் பணி ஆற்றினேன் என்றாலும் எனக்கும் அதற்கும் உண்டாகிய தொடர்பு ‘அப்பா வா, தி, மா.’ அவர்கள் வாழ்ந்த வரையில் வளர்ந்துகொண்டே இருந்தது. திரு. வா. தி. மாசிலாமணி முதலியாரின் தமையனார் திரு. வா. தி. பஞ்சாட்சர முதலியார் அவர்கள் பொறுப்பில் தான் அப்போது பள்ளி நடைபெற்று வந்தது. உயிர் ஒப்பந்த நிதி முகவராக அவர் புதிவு செய்துகொண்டு, தம்பியையும் அத்துறையில் ஈர்த்து அதன் வழியே பள்ளி நடத்தப் பெரும் பொருள் திரட்டினர். அவர்கட்கும் என்னிடம் நீங்காத பரிவும் பாசமும் உண்டாயிற்று. அவர்கள் அப்போது காஞ்சிபுரத்தில் குடியிருந்தார்கள். அவர் தம் மக்கள் இருவரும் உயர் நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தனர். அவருள் மூத்தவர் கலியாணசுந்தரம் பச்சையப்பரில் படித்திருந்தார். தமிழ்ப் பாடம் அவருக்கு விலக்கு. இளையவர் சம்பந்தம் ஆண்டர்சன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். அவருக்கு நான் தமிழ் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். சனி ஞாயிற்றுக்