பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலையேறும்போது

37

யாக மாறிய தன் தலை மயிரை உச்சியிலே சேர்த்து முடிந்திருக்கிறான்; நெற்றியிலே நிறைய வெண்ணீற்றை அணிந்து கொண்டிருக்கிறான். முனிவர்களும் பயந்து நடுங்கும்படியான காமம், வெகுளி, மயக்கம் என்பன போன்ற அசுரர்களை இறைவன் மாய்ப்பான் என்பதற்கு அடையாளமாக நிற்கும் வேலையும் அவன் கையில் வைத்திருக்கிறான். இருந்தாலும் ஒவ்வொரு சமயத்தில் அவனுடைய உள்ளம் தடுமாறுகின்றது. நெறியில்லா நெறியில் செல்ல விரும்புகின்றது. அதனால், அவன் முருகனை நோக்கிக் கதறுகின்றான்.

உச்சியிலே சடையிருக்க
        உள்ளங் கையில் வேலிருக்க
நெற்றியிலே நீறிருக்கக் கந்தையா என்

        நினைவு தப்பிப் போவதென்னோ.

இந்தப் பாட்டிற் பிறக்கும் சோகம் எங்கும் பரவுகின்றது. இறைவன் காதிலும் புகுகின்றது. கலங்கிய உள்ளம் அமைதி பெறுமாறு கருணை வள்ளல் புன்சிரிப்புடன் நோக்குகிறான். துறவி மலை உச்சியை அடைந்து, இறைவன் பாதத்தில் விழுந்து வணங்கி எழுந்து அவன் திருமுகத்தை ஆவலோடு அண்ணாந்து பார்க்கிறான். இறைவனிடம் மாறாது பொலியும் புன்முறுவல் அவனுக்குச் சாந்தி அளிக்கின்றது.

மேலே எடுத்துக் காட்டிய நாடோடி பாடல்கள் கால வரையில்லாது பழநியங்கிரியிலே ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றில் புதைந்து கிடக்கும் பொருளும், இசையும் உள்ளத்தைக் கவர்கின்றன. அவற்றைக் கேட்பதும், அவற்றை வாய்விட்டுக் கூவும் அடியவர்களின் கூட்டத்தைக் காண்பதும் ஒரு தனி இன்பமாக இருக்கின்றன.

3