இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காதலா? கடமையா?
இயல் - 12
("மன்னனை மணந்தால் வருவது விடுதலை மறுத்தால் வருவது கெடுதலையாகும்")
இடம் கொன்றை நாட்டில் முன்னாள் அரண்மனை. |
உறுப்பினர் கிள்ளை, வாட்பொறை. |
"என்னருந் தங்கையே, எழிலுறு கிள்ளையே,
இன்னல் வந்ததே உன்னால்" என்றான்.
அண்ணன் இவ்வா றறைதல் கேட்ட
கிள்ளை, “என்னால் கேடோ விளைந்தது?
விளைந்த தெவ்வாறு விளம்புக” என்றாள்.
மன்றின் மாடியில் மன்னன் உலவினான்
அன்றுநீ நன்னீர் ஆடச் சென்றனை.
கண்ணாற் கண்டான் காதல் பொங்கினான்.
புண்பட மன்னன் புகல்வ தென்எனில்,
‘அவள்என் பட்டத் தரசி ஆனபின்
இவண் நான் விடுதலை ஈவேன்’ என்றான்.
என்று வாட்பொறை இயம்பி நின்றான்.
43