6
காதல் நினைவுகள்
தண்ணென் றிருந்த உனது மேனி
தணல் படுவது விந்தை—உன்
கண்ணில் கண்ட அத்தானுக்குக்
கலங்கியதோ சிந்தை!
அவள்மேற் பழி
‘கைப்பிடியில் கூட்டிவரக்
கட்டளையிட்டாள்‘ என நீ
செப்புகின்றாய் வாழியவே வாழி—‘நான்
ஒப்பவில்லை' என்றுரைப்பாய் தோழி!
தேரடியில் கண்ட அவள்
தேனிதழைத் தந்தவுடன்
ஊருக்கெனைக் கூட்டிச்செல்க‘ என்றாள்—தன்னை
யாருக்குமுன் வாக்களித் திருந்தாள்?
சோலையிலே வஞ்சியினைத்
தொட்டிடுமுன் சேல் விழியாள்
நாலுதரம் சுற்றுமுற்றும் பார்த்தாள்—எந்தக்
காலிக்கவள் அஞ்சிமுகம் வேர்த்தாள்?
கோட்டைவழி என்னை வரக்
கூறி அவள் நான் வருமுன்
பாட்டையிலே ஏன் தனித்து நின்றாள்?—எனைக்
கூட்டிவரப் பசப்பு கின்றாள்?
வல்லியினை முத்த மிட்டேன்
வாய்த்த என்றன் மேனியினை
மெல்லஅவள் ஏன்தடவ வேண்டும்?—வேறு
நல்லஉடலோ அவட்கு வேண்டும்?
புன்னகையும் பூப்பதில்லை!
புதுமலரும் தீண்டவில்லை;
‘என் நினைவால் வாடுகின்றாள்‘ என்றாய்—அன்று
சன்னலிலே யாருக்காக நின்றாள்?
தொத்துகிளி யாள் எனது
தோளின் மிசை வந்திருக்கப்
‘பித்துமிகுந் தாள்‘ என மொழிந்தாய்—அவள்
இத்தெருவில் யாருக்காக வந்தாள்?