8
காதல் நினைவுகள்
வீட்டினில் திருவி ளக்கும்
அவளெழில் விளக்கல் அன்றிக்
காட்டவே இல்லை என்றன்
கவலைக்கு மருந்து நெஞ்சே!
எனைக்கண்ட தோழன் காதில்
ஏந்திழை பிரிந்த துன்பம்
தனைச்சொன்னேன். அந்தத் தீயோன்,
தையலாள் வரும் வரைக்கும்
நினக்குயிர் வேண்டும்; அன்னாள்
நினைவினால் வாழ்க என்றான்.
எனக்கது சரிப்ப டாது
மறந்துபோ எனது நெஞ்சே!
காதல் இயற்கை
மறவன் சொல்லுகிறான்:
கண்ணிமையின் கடைக்கூட்டால் என்னைத் தட்டிக்
கனியிதழின் வண்ணத்தால் நெஞ்சை அள்ளி
மண்ணிடையே வாழ்வேனை உனது மையல்
மடுவினிலே தள்ளியபின் ஏடி மானே!
எண்ணிடையே ஏறாத பொய்மை வார்த்தை
ஏதேதோ சொல்லுகின்றாய் இதுவும் நன்றோ?
தண்ணிழலைத் தாவுகின்றேன்; சாதி பேதத்
தணலில்எனைத் தள்ளுகின்றாய் சகிப்ப துண்டோ?
குறவேந்தன் மகளடிநீ! அதனால் என்ன?
குறிஞ்சிநிலப் பெண்ணாதல் அப்பேர் இட்டார்!
மறவேந்தன் மகன்நான்தான்.வார்த்தை பேதம்
மாய்ப்பதுண்டோ நல்காதல் மகத்து வத்தை?
அறஞ்சொல்வார் இதைச்சொல்லி நமது வாழ்வை
அழிப்பர்எனில் அவ்வறத்தை அழிக்க வேண்டும்.
புறங்காண்போம் குள்ளர்சிலர் சொல்லும் பேச்சைப்
புனிதமடி ஒத்தஉளத் தெழுந்த காதல்.
குறத்தி சொல்லுகிறாள்:
கருமுகிலைப் பிளந்தெழுந்த மின்னும் வானும்
கைகலக்கும் போதுகல வாதே என்று