பாரதிதாசன்
9
பெரும்புவியே நீசொன்னாய். ஐய கோஉன்
பேதமைக்கு நான் அஞ்சும் அச்சத் தாலே
அரும்புமிளம் பருவத்தான் ஆவி போன்றான்
அயர்கின்றான்;அயர்கின்றேன்.ஒன்று பட்டு
விரும்புகின்ற காதலினை மூடக் கொள்கை
வெட்டியதால் இருதுண்டாய் வீழ்ந்தோம் நாங்கள்!
உள்ளத்தில் உதித்தெழுந்த காதல் தீயில்
உடல்எரித்தல் யானறிவேன்; அறியார் மற்றோர்.
தள்ளத்தான் முடிவதுண்டோ அவன்மேல் ஆசை?
தணியாது போகுமெனில் உயிர்தான் உண்டோ?
அள்ளத்தான் போகின்றேன் அள்ளி அள்ளி
அருந்தத்தான் போகின்றேன் அவன்இன் பத்தை
துள்ளிப்பாய்ந் திடுநெஞ்சே! அந்தோ அந்தோ
துடுக்கடங்கி னாய்மூட வழக்கத் தாலே!
இயற்கை சொல்லுகிறது:
காதல்எனும் மாமலையில் ஏறி நின்றீர்
கடுமூட வழக்கத்துக் கஞ்ச லாமோ?
ஈதென்ன வேடிக்கை! சிரிப்பு வந்தென்
இதழ்கிழித்தல் கண்டீரோ காதல் மக்காள்!
குறத்தி சொல்லுகிறாள்:
மோதவரும் ஆணழகே வா வா வா வா!
முத்தம்வை இன்னொன்று; வைஇன் னொன்று!
மறவன் சொல்லுகிறான்:
மாதரசி கனியிதழோ தேனோ—சாதி
வழக்கழிக; இயற்கைத்தாய் வாழ்க நன்றே!
பிசைந்த தேன்
பெண்ணேபாராய், பெண்ணே பாராய்!
வெண்ணெயில் மாப்பிசைந்து, விரிந்த உள்ளங்கை
ஒன்று கீழுற, மற்றொன்று மேலுற
மாற்றி மாற்றி வடைதட்டி இட்டும்,
ஊற்றிய நெய்யில் ‘ஒய்’ என வேகுவதில்